Sunday 9 February 2014

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா…? இதைப்படியுங்க…!



நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்...

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்..?


1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.


  • தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

இரண்டாம் உலகம்..!



பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும்.

கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.


வடகிழக்கில் ‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள் செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,

இந்தியர்கள் மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக் கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத் துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,

நீலக்கடலின் பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும் கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம், கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ் மாநிலமும்,

வறட்சியுடன் மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி, பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட் நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக் கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில் கலிபோர்னியா மாநிலமும்,


இலையுதிர்காலத்தில் இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,

உலகையே ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப் பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில் செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம் என்றால்,

அட்லான்டிக் கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும், விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும், பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும், பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,

பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,


அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள், விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச் செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும், பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும் என நிவெடா மாநிலமும்,

உலகின் அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின் திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு அரிசோனா மாநிலமும்,


பச்சைப்பசேலென விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா மாநிலமும்,

இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள், பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில் வயோமிங் மாநிலமும்,

என ஒவ்வொரு மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும் இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும் வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன் என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!


ஆயிரம் இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத் தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா என்னுடைய இரண்டாம் உலகம்.

யானை அழிவதால் நமக்கு என்ன பிரச்சினை...?


"உலகிலிருந்து மற்ற உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போவதால் (extinction), நமக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?" என்று கேட்பவர்கள், ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இதோ ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த பெரும் பாலூட்டிகள், புவிப் பரப்பில் பரவலாகத் திரிந்தபோது அந்தப் பகுதிகளில் கழிவு, உடல் மக்கிப் போனதன் மூலமாக ஊட்டச்சத்துகளைப் பரப்பியுள்ளன. உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச்சத்து இழப்பு எப்படி ஏற்படும் என்பதைக் கணக்கிட அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணித மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால் வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான் பகுதியில் பாஸ்பரஸ் 98 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரினங்களும் தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். பாலூட்டிகளில் மிக அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ். தாவரங்களில் உயிரோடு உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும்.

இப்போது இப்படி சிந்தித்துப் பார்ப்போம். 2025இல் எல்லா யானைகளும் அற்றுப்போய்விட்டால், அதன் பிறகு நதிகளையும் மலைகளையும் கடந்து யார் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வார்கள்? இது மட்டுமில்லாமல் நதிகள் வழியாகத்தான் பல்வேறு ஊட்டச்சத்துகள் நம்மை வந்தடைகின்றன.

உங்கள் தட்டில் உணவா...? விஷமா...?



ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.


சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.


இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

காலம் கொடுத்த வேளாண் போராளி..!



காந்தி சொன்ன ‘‘மாற்றத்தை விரும்பினால் அந்த மாற்றத்தை உன்னிடமிருந்து துவங்கு’’ என்பதற்கு நாம் வாழும் காலத்தின் சரியான உதாரணம் என்றால், நம்மாழ்வாரைச் சொல்லலாம். “நாம் ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?

சந்தர்ப்பவாதத் தரகு அரசியலாலும் சக மனிதனை நேசிக்க மறுத்த சாதியப் பிணக்குகளாலும் நசுக்கப்படும் விவசாயிகளையும் துரித வாழ்வில் தொலைந்துகொண்டிருக்கும் ஏராளமான சாமானியர்களையும் “நாம் ஏன் நச்சற்ற, ரசாயனக் கலவை இல்லாத உணவைத் தேடி உண்ணக் கூடாது? எதற்கய்யா இந்த மரபணுப் பயிர்கள்?” என்று சிந்திக்க வைத்தவர், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த அந்த மாமனிதர்.

பட்டம் முலம் தனக்குச் சமூகத்தில் அங்கீகாரம் தந்துவிட்டதாலேயே, அந்த ஏட்டுப் படிப்பில் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டதும், அது உருவாக்கிய அளவுகோலைக் கொண்டே, ஒட்டுமொத்த வாழ்வியலை அளப்பதுமான மதயானைக் கூட்டம் நம் ஊரில் அதிகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனக்குப் போதிக்கப்பட்ட பட்டப் படிப்பினால் கிடைத்த அரசுப் பணி, விளிம்பு நிலை மக்களுக்குத் துளியும் பயன்தராத ஆய்வில் ஈடுபடுகிறது என்பதை உணர்ந்ததும், அந்த வேலையை விட்டுவிட்டு, வேளாண் வாழ்வியலைக் களத்தில் படிக்கக் களம் இறங்கியவர் நம்மாழ்வார்.

எப்படி வந்தது ரசாயன உரம்?

உழவே தலை என்று 5,000-6,000 ஆண்டுகளாக வாழ்ந்த சமூகம், உழவா… ஐயையோ என தலைகுனிய ஆரம்பித்தது,

கடந்த 50-60 ஆண்டுகளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு மாபெரும் உழவுக் கலாச்சாரம் இருந்தது; மாபெரும் வேளாண் அறிவியல் அதில் கலந்திருந்தது. சிற்றெறும்புக்கும் சிட்டுக்குருவிக்கும் சேர்த்துச் சமைக்கும் பல்லுயிர் பேணும் அறம் இருந்தது. அப்படியாயிருந்த வேளாண் அறம், திட்டமிடப்பட்ட வணிகச் சுரண்டலுக்காகத் தேயிலை, புகையிலை, தைலமரம், உடை மரம், ஒட்டு வீரிய ரகம் என மொத்தமாகத் தன் உருவிழக்கத் துவங்கியது நம்மை ஆண்ட வெள்ளையர்களால்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலப்பொருள்களான அம்மோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் தொட்டு இந்தியாவின் வேளாண்மை கடன்காரத் தொழிலாயிற்று” என்பதைத் தமிழகத்தில் முதலில் உணர்த்தியவர் நம்மாழ்வார்.

கருக்கொண்ட புரட்சியாளர்

அரசுப் பணியை விட்டுவிட்டு, களக்காட்டில் அரசு சாரா நிறுவனம் ஒன்றில் சில காலம் பணியாற்றியபோதே, இடுபொருள் முதலீட்டில் விவசாயிகள் கடன்படுவதைப் புரிந்துகொண்டார். அதேசமயம், அவர் படித்த ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல், ‘நாம் எதை இழக்கிறோம்? நாம் எங்கு சிக்குண்டிருக்கிறோம்? இயற்கையை விட்டு நம் வேளாண்மை எப்படி விலகுகிறது? பகுத்தறிவு நம் நுண்ணறிவை எப்படிச் சிதைக்கிறது’ என்பதையெல்லாம் அவருக்கு இன்னும் ஆழமாகப் புரியவைத்தது.

உசுப்பிய விடுகதை

பிறகு, களக்காட்டிலிருந்து புறப்பட்டு அங்கட்டி பகுதிக்குச் சென்றார். மேட்டூர் அணையால் இடம்பெயர்ந்து, அங்கட்டி பகுதியில் வறுமையில் உழன்றுகொண்டிருந்த விவசாயிகளுடன் வாழ்ந்தார். அப்போது, அவரை ஒரு விடுகதை உசுப்பியது என அடிக்கடி அவர் பேச்சில் சொல்வதுண்டு. “பழமாகிக் காயாவது எது? காயாகிப் பூவாவது எது?” என்பதுதான் அவர் சொல்லும் அந்த விடுகதை. பழமாகிக் காயாவது என்பது எலுமிச்சைதான். பழம் எப்படிக் காயானது? எலுமிச்சையில் அதிகமாக உப்பைப் போட்டு ஊறுகாய் செய்கிறோம் இல்லையா, அதுதான் பழம் காயாவது. அப்படியானால், உப்புதான் மக்கவிடாமல் தடுக்கிறது என்பது அவர் மனதில் அடிக்கடி ஓட ஆரம்பித்தது. இந்த ரசாயன உப்பை ஏராளமாக மண்ணில் கொட்டினால், களையெல்லாம் எப்படி மக்கி உரமாகும்? இயல்பாக உருவாக வேண்டிய மக்கு உரத்தை இந்த உர உப்பு எப்படித் தடுத்து, விவசாயியை இடுபொருள் செலவால் கடன்பட வைக்கிறது என்பதை மசானபு ஃபுகோகா சொன்னதைத் தன் நுண்ணறிவால் புரிந்துகொண்டார் நம்மாழ்வார்.

அன்றிலிருந்து “இப்படி உரமிடுவது மண்ணை எப்படிப் பாழாக்குகிறது? அதிக நீர்த் தேவையை உண்டாக்கி மறைநீரை (வர்ச்சுவல் வாட்டர்) அதிகரித்து, விவசாயத்தை எப்படிச் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது” என்று விளக்க ஆரம்பித்தார்.

பூச்சிமருந்தா; பூச்சிக்கொல்லியா?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருளில் மெய்ப்பொருள் தேடியவர் நம்மாழ்வார். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த கருத்தரங்கிலும் பயிற்சிப் பட்டறையிலும் பயின்ற நம்மாழ்வார், அங்கு வந்த வெள்ளைக்கார ஆசிரியை “பெஸ்டிசைடுக்கு தமிழில் என்ன? ” எனக் கேட்க, “பூச்சிமருந்து” என்று சொல்ல, “ஹெர்பிசைடுன்னா களைக்கொல்லி, சூசைடுன்னா தன்னைத்தானே கொல்வது, ஆனால் பெஸ்டிசைடை மட்டும் பூச்சிக்கொல்லின்னு சொல்லாமல், பூச்சிமருந்து என்கிறீர்களே?” என அவர் கேட்டாராம். ஒரு கொலைகார வஸ்துவை மருந்து என்ற பெயரில் ஏமாற்றி, நம் ஏழை விவசாயிகளிடம் சந்தை வித்திருக்கிறது என்பதை நம்மாழ்வார் தெளிவாக உணர்ந்துகொண்டார். அன்று முதல் “அது பூச்சிக்கொல்லி விஷமடா… மருந்து அல்ல” என விவசாயிகளிடம் தெளிவுபடுத்த ஆரம்பித்தார் நம்மாழ்வார்.

தன்னை ‘லோ எக்ஸ்டெர்னல் இன்புட் ஸஸ்டெய்னபில் அக்ரிகல்ச்சர்’ அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, பல காலம் கிராமம் கிராமமாகத் தன் நுண்ணறிவில் பெற்றதையும், உலக அரங்கில் ஃபுகோகாவிடமும் ரேச்சல் கார்சனிடமும் நூலறிவில் பெற்றதையும், விளிம்பு நிலையில் இருந்த படிப்பறிவில்லாத விவசாயியும் புரிந்துகொள்ளும்படி எளிய மொழியில் பேசி விளக்கியது நம்மாழ்வாரின் தனித்துவமான வெற்றி எனலாம்.

குரு பெர்னார்ட்

பெல்ஜியம் நாட்டு பெர்னார்டைத்தான் அவர் தன்னுடைய இயற்கை விவசாயத்தின் குருவாகப் பலமுறை சொல்வார். பெர்னார்ட் இன்றும் ஆரோவில்லில் வாழும் இயற்கை வேளாண் வித்தகர். தரிசாகவும், நீர் இருப்பே இல்லாமலும் இருந்த கல் நிறைந்த நிலம் பெர்னார்டுக்கு வழங்கப்பட்டது. அவரோ, செலவே இல்லாமல், இயற்கையை முதலீடாக வைத்தே அந்த நிலத்தைச் சோலையாக மாற்றிக்காட்டினார். பயிர் சுழற்சியையும் பல்லுயிர்ப் பாதுகாப்பையும் உறுதிசெய்வது தனிப் பயிர் சாகுபடியில் இல்லை; கூட்டுப் பயிராய், அணி நிழல்காடாகத் தன் நிலப்பரப்பை அமைப்பதில்தான் இருக்கிறது என்பதை அவரிடம் அறிந்துகொண்ட நம்மாழ்வார், தன் ஆசான் பெர்னார்டை ஒவ்வொரு பேச்சிலும் நினைவுகூர மறப்பதில்லை.

எதிர் யுத்தங்கள்

மரபணு மாற்றிய பயிர்களை இந்தியாவில் வேகமாகப் புகுத்த அரசு முனைந்தபோது, தமிழகத்தில் ஏராளமான விவசாயிகளைக் கைகோக்கச் செய்து, களம் இறக்கிய பசுமைப் போராளி நம்மாழ்வார். இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படாமல், அறிவியல் தரவுகளைப் பாரபட்சமில்லாது நிறுவாமல், வணிகத்தில் கோலோச்சுவதற்காக நம் இந்திய மக்களைப் பலிகடாவாக்கும் மரபணுத் தொழில்நுட்பத்தைக் கடுமையாகவும் அறிவியல்பூர்வமாகவும் சாடியவர் அவர். இங்கிலாந்தின் செரிலினியின் சான்றுகளை, இந்த நிலத்து மாயாண்டிக்கும் புரியும்விதமாக கிராமம் கிராமமாக எடுத்துச்சொன்னது அவர் நிகழ்த்திய சத்தியாகிரகம். ‘பூவுலகின் நண்பர்கள்’ முதலான தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பை உருவாக்கி, மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதிலும் கடைசியில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்திரிக்குக் காலவரையற்ற தடை விதித்ததிலும் முக்கியக் காரணமாக இருந்தவர் நம்மாழ்வார்.

இயற்கையில் லயித்தால் போதுமா?

வட இந்தியாவில் வந்தனா சிவா, கவிதா குருகந்தி, தேவேந்தர் சர்மா முதலான பசுமைப் போராளிகள் குரல் கொடுக்கும்போதெல்லாம், தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் நம்மாழ்வார். வேளாண் மீட்பும் சூழல் பாதுகாப்பும் வெறும் சத்துணவுத் தேடலிலும், குருவி காகத்தின் குரல் சிலாகிப்பிலும் மட்டுமானதல்ல; சக மனிதர்களின் விடுதலையிலும்தான் சாத்தியம் என்பதை அடிக்கடி அறிவுறுத்தியவர் அவர். கீழவெண்மணி சாதியப் படுகொலையையும், அதற்கு ஆதிக்க சக்திகள் பெற்ற நீதிமன்ற விடுதலை வரிகளையும் வருத்தமுடன் அவர் விவசாயக் கூட்டங்களில் பேசுவது ஒரு சான்று.

உருவாக்கப்பட்ட படை

நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்டவர்கள், உத்வேகமடைந்தவர்கள், உணர்வுபெற்றவர்கள் ஏராளம். ஒருநாள் பூம்புகார் கூட்டத்தில், ‘காட்டு யாணம்’ நெல்லை வழங்கி, “நீங்க ஏன் பழம் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யக் கூடாது?” என கிரியேட் ‘நெல்’ஜெயராமனிடம், அவர் விதைத்த விதை இன்று அதே ‘நெல்’ஜெயராமன் 158 பாரம்பரிய ரகங்களை மீட்கவும் பாதுகாத்துப் பயிரிட்டுக் கொடுக்கவும் வழிவகுத்திருக்கிறது. எங்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’அமைப்பைத் தொடர்ந்து மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான களத்தில் நிறுத்தியது, குப்பை உணவுக்கு எதிராகச் சிறுதானிய உணவை மீட்டெடுக்க வைத்து, உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பத் துணைநின்றது எல்லாம் நம்மாழ்வாரும் அவருடைய கருத்தாக்கமும்தான். நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்கு சூளுரைத்தது.

ரசாயனம் இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி – இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம். நாம் வாழும் காலத்தின் காந்திகளில் அவரும் ஒருவர் என்றால், அது கூடுதல் இல்லை!

இணையத்தில் உங்களை தொடரும் ஆசாமிகள்..! - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!



நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

கொலை கொலையா முந்திரிக்கா என்று கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி நாம் அறியாமல் நம் பின்னால், துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று.

பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும்.

ஐ.பி. முகவரிகள்: உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை அடையாளம் காட்டுகிறது. இதிலிருந்து, மிகச் சரியான உங்கள் முகவரியை அறிய முடியாது என்றாலும், உத்தேசமாக, பூகோள ரீதியான இடத்தை அறியலாம். உங்களின் தெரு தெரியாவிட்டாலும், நகரம் அல்லது நகரத்தில் ஏரியா தெரிய வரும். இருப்பினும், ஒரே ஐ.பி. முகவரியை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மட்டும் பிரித்தறிவது எளிதானதல்ல. இருந்தாலும், ஐ.பி. முகவரியை மற்ற தொழில் நுட்பத்துடன் இணைத்து, நம் இடத்தை உறுதிப் படுத்தலாம்.

எச்.டி.டி.பி. ரெபரர் (HTTP Referrer): நீங்கள் இணையத்தில், லிங்க் ஒன்றைக் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசர், நீங்கள் கிளிக் செய்த லிங்க் சார்ந்த இணைய தளத்தினைக் கொண்டுவருகிறது. இணையதள சர்வரில், நீங்கள் எங்கிருந்து தொடர்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறது. இந்த தகவல் HTTP referrer headerல் கிடைக்கும்.

இணையப் பக்கத்தில், அதன் தகவல்களைக் கொண்டு வருகையில், HTTP referrerம் அனுப்பப்படுகிறது. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்று விளம்பரத்தைக் கொண்டிருந்தால், ட்ரேக் செய்திடும் ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் பிரவுசர், அந்த விளம்பரதாரரிடம் அல்லது பின் தொடரும் நெட்வொர்க்கி டம், நீங்கள் எந்த பக்கங்களைப் பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்கிறது.

"Web bugs” என்று அழைக்கப்படும் மிகச் சிறிய (1x1 பிக்ஸெல்) கண்ணால் பார்க்க இயலாத இமேஜ்கள் இந்த எச்.டி.டி.பி. ரெபரரைத் தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, இணைய தளத்தில் தன்னைக் காட்டாமலேயே, உங்களைப் பின் தொடரும். இதனையே பயன்படுத்தி, நீங்கள் திறந்து பார்க்கும் மின் அஞ்சல்களையும் இவை தொடர்கின்றன.
குக்கீகளும் ட்ரேக்கிங் ஸ்கிரிப்ட்களும் (Cookies & Tracking Scripts): இணைய தளங்கள் உங்கள் பிரவுசரில் ஸ்டோர் செய்து வைக்கும் சிறிய பைல்கள் குக்கீஸ் ஆகும். இவை நமக்கு நன்மை செய்பவையாகவும் உள்ளன.

எடுத்துக் காட்டாக, வங்கிகளின் தளத்தில் நுழைகையில், குக்கி பைல் உங்களைப் பற்றிய தகவல்களை நினைவில் கொண்டு, நீங்கள் தரும் தகவல்களைக் கணிக்கிறது. இணைய தள செட்டிங்ஸ் மாற்றினால், அதனையும் நினைவில் கொண்டு, உங்களுக்கு உதவுகிறது.

குக்கிகள் உங்களை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இணைய உலாவினைப் பின் தொடர்ந்து கண் காணிக்கிறது. நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள் அனைத்தையும் பின் தொடர்ந்து, உங்கள் அனுபவம் குறித்து ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துக் கொள்கிறது. மூன்றாவது நபர்கள் நுழைத்திடும் குக்கி பைல்கள் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளூம்போது பிரச்னை வரும். இதில் நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம், இணைய தளங்கள் மூன்றாவது நபர் குக்கிகளைப் பதிந்து வைத்து அனுமதிப்பதுதான்.

இரண்டு வெவ்வேறு இணைய தளங்கள் ஒரே விளம்பரத்தைப் பயன்படுத்தினால் அல்லது நெட்வொர்க்கினைப் பின்பற்றினால், உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியை அவை முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும்.

சூப்பர் குக்கீஸ் (Super Cookies): நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ் பைல்களை அவ்வப்போது நீக்கிவிடலாம். ஆனால், அதனால் உங்கள் இணைய நடவடிக்கையினை மற்றவர்கள் பின்பற்றுவதனைத் தடுக்க முடியாது. தற்போது "super cookies” என அழைக்கப்படுபவை நிறைய உண்டு.

 அப்படி ஒன்று தான் எவர்குக்கி (http://samy.pl/evercookie/)ஆகும். இது ஒரு சூப்பர் குக்கி. இவை குக்கிகளுக்கான டேட்டாவினை பல இடங்களில் பதிந்து வைக்கும். பயனாளர்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு, தகவல்களைத் தொகுத்து வைக்கும். ஓர் இடத்தில், குக்கியை அழிப்பதன் மூலம், அது சேர்த்து வைத்த தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டால், அது மற்ற இடங்களில் இருந்து அவற்றை எடுத்து, சரி செய்து கொள்ளும். சூப்பர் குக்கிகள் அனைத்துமே, இழந்தவற்றை மீட்டுத் தருவதில் திறன் கொண்டவை.

திணை பேடா & வாழைத்தண்டு கூட்டு - நீரிழிவுக்கு நல்லது..!

திணை பேடா

என்னென்ன தேவை?


  • திணை மாவு - 1/2 கப்,
  • தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
  • பொடி செய்த வெல்லம் - 1/4 கப்,
  • ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
  • நெய் - 1 டீஸ்பூன்,  தேங்காய்ப் பால் - 20 மி.லி.,
  • முந்திரி - 25 கிராம்.


எப்படிச் செய்வது? 

திணை மாவுடன் தேங்காய்த் துருவல், வெல்லப் பொடி, ஏலக்காய்த் தூள், நெய், தேங்காய்ப் பால் விட்டுக் கலந்து பிசையவும். பேடாவாகத் தட்டும்  அளவுக்கு பதம் இருக்க வேண்டும். வட்ட வடிவில் திணை மாவுக் கலவையை தட்டி, நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு. நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லது.மலச்சிக்கலைத் தீர்க்கும்.



வாழைத்தண்டு கூட்டு


என்னென்ன தேவை?


  • வாழைத்தண்டு - 1 கப்,
  • தேங்காய் - 1/2 மூடி,
  • சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
  • உப்பு - தேவைக்கேற்ப,
  • பச்சை மிளகாய் - 2,
  • கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது? 

வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 மூடி தேங்காயை விழுது போல் அரைத்து, 250 மி.லி. தண்ணீர் சேர்த்து பால் எடுத்து  கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அத்துடன் பச்சை மிளகாயை சிறிய துண்டாக நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, சீரகத்  தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.,

நீரிழிவுக்கு நல்லது. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கல்லடைப்புகளை நீக்குகிறது.

கோமாவில் ஞாபகசக்தி இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்..!



லண்டன்: திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை.

உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அமந்தாவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், அமந்தாவுக்கு மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டுள்ளது. மிக மிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இதுபோல் ஏற்படும். அந்த நேரத்தில் மாரடைப்பு போல் இருக்கும். இருதயம் சரிவர செயல்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் அமந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நான்கு நாள் கோமாவில் இருந்த பிறகு அமந்தா கண் விழித்தார். அருகில் இருந்த கோடி கார்த் மற்றும் டாக்டர்களை பார்த்து, நான் யார்... எங்கிருக்கிறேன் என்று அமந்தா கேட்டார். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் மூலம் கோமா ஏற்பட்டு, பழைய நினைவுகள் அனைத்தையும் அமந்தா இழந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த இன்சைட் எடிஷன் என்ற செய்தி இதழ் நிர்வாகம், 10 மாதங்களுக்கு பிறகு இப்போது அமந்தா, கோடி கார்த், அவர்களுடைய உறவினர்கள், அமந்தாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. நட்சத்திர ஓட்டலில் அமந்தா & கோடி கார்த்துக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. என்னுடைய திருமண நாளில் நடந்த விஷயங்கள் ஒன்று கூட நினைவில்லை. அதனால் உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து எங்களுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அமந்தா கூறியுள்ளார்.

வோடஃபோன் & ஏர்டெல்க்கு சுப்ரீம் கோர்ட் வைத்த செக்மேட்…!



இன்று காலை 9 மணிக்கு இந்தியாவில் தொடங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் நன்றாக போய்கொண்டிருக்கிறது. இது 2ஜி ஊழலில் கேன்சல் செய்யபட்ட 122 லைசென்ஸ்களின் புதிய அதிகாரபூர்வ ஏலம் ஓப்பன் டென்டர் முறையில் நடக்கிறது. இந்த ஏலமானது 1800 MHz அலைவரிசையில் 385 MHzம் / 900 MHz bandல் – 46 MHzம் ஏலம் விடப்படுகிறது. மொத்தம் 240 நிமிடங்கள் அதாவது 4 மணி நேரம் ரேம்ப் அப் முறையில் விடப்படும்.

இது என்ன முறை – ஒரு கம்பெனி ஏற்கனவே உள்குத்து செட் பண்ணி ஒரு விலையை கோட் செய்து மொத்தமா மொங்காம் போடமுடியாது. அதாவது ஒரு கம்பனி 1000 கோடிக்கு ஒரு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் கேட்டால் இன்னொரு கம்பெனி அதை 1001 கோடிக்கு ஓப்பனாய் ஏலம் கேட்க முடியும். ஒவ்வொரு ரவுண்டும் 60 நிமிடத்தில் நடக்கும் இதில் 20 நிமிடம் பிரேக். ஒவ்வொரு சுற்றிலும் ஏலம் கேட்ட கம்பெனிகளின் விலையை அரசு அறிவிக்கும் அடுத்த ரவுண்டில் அதை ஏத்தி கேட்கலாம். இப்படி இருப்பதால் நிறைய புது கம்பெனிகள் சர்வீஸுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம் 42,000 கோடி முதல் 55,000 கோடி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது. அப்ப 1,76,000 கோடி என்ன கணக்குனு கேட்பவங்களுக்கு மீதியை கீழே படிக்கவும்.

முதன் முதலில் 3ஜி லைசென்ஸ் ஏலம் 34 நாட்கள் நடந்தது 2010ல் 2012ல் இரண்டு நாளும் போன வருடம் ஒரு முழு நாள் கூட நடைபெறாமல் போனது இந்த மாதிரி ஒப்பன் டென்டர் இல்லாதது தான். சரி முக்கிய மேட்டருக்கு வருவோம். டெல்லி / மும்பாய் / கொல்கத்தா போன்ற பெரு நகர லைசென்ஸ்கள் – வோடஃபோன் / ஏர்டெல் மற்றும் லூப் மொபைலின் லைசென்ஸ் நவம்பர் 2014ல் நிறைவடைகிறது.

 இது வரை இந்த கம்பெனிகள் தாங்களே ஒரு விலையை நிர்ணயித்து இதை புகுத்தின. ஆனால் ட்ராய் ரொம்ப நாள் கழித்து விழித்துகொண்டமையால் – இனிமே நீங்களும் வழக்கம் போல லைனில நின்னு பத்தோடு பதினொன்னாய் தான் ஏலம் கேட்கனும், இந்த முதல்ல லைசென்ஸ் வச்சவனுக்கே இனிமே கன்டினியூ இல்லைனு சொல்ல – உடனே இந்த ஏழைகள் சுப்ரீம் கோர்ட்டை நாட – சுப்ரீம் கோர்ட்டும் ட்ராய் கூறிய வகையில் தான் நீங்களும் ஏலம் கேட்கனும்னு செக் மேட் வைத்தத காரணத்தினால் இந்த தடவை அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதாவது மும்பாயில் வோடஃபோன் 20,000 கோடி என்று ஏலம் கேட்டால் இன்னொரு புது ஆப்பரேட்டர் 30000 கோடிக்கு கேட்க வாய்ப்புண்டு. வோடஃபோன் / ஏர்டெல் / லூப் மொபைல் பல கோடி சந்தாக்காரர்களை வைத்திருப்பதால் என்ன விலையானாலும் இந்த ஏலத்தை ஒப்பன் முறையில எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். இந்த மூன்று பெரு நகரங்கள் போனால் அவர்களின் 74% நெட்வொர்த் தெருவுக்கு வந்துவிடும் ஆபத்து. 2013 அக்டோபரிலே இந்தியா முழுவதும் ஒரே விலை ரோமிங் கிடையாது என ட்ராய் அறிவித்த போதும் இன்னும் செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்த வகையில் இந்த இரண்டு க்ம்பெனிக்கும் பெரும் பங்குண்டு இப்போது இது வேற என்ன ஆகுமோ என்று மன்டையை பிய்த்து கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’ஸ்..!



ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில், ஆன்லைன் செய்தித்தாளுக்கான ‘ஆப்’-ஐ ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியுமாம்.பல்வேறு விதமான செய்திகளிலிருந்து, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான குறிப்பிட்ட ரக செய்திகளை மட்டுமே பின் தொடரும் வசதி இதில் உள்ளது. உணவு, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளைப் படிக்கலாம். பிரசித்த பெற்ற பல்வேறு வெளியீட்டாளர்களின் செய்தி, கட்டுரைகளையும் இதில் காண முடியும்.

இதில் எந்தெந்த நிறுவனங்கள் கூட்டாளியாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆயினும், இது தொடர்பான வீடியோ விளம்பரத்தில் நியூயார்க் டைம்ஸ், டைம், யுஎஸ்ஏ டுடே, ஹபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்களின் செய்திகள் வாசிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நியூஸ் பீட் பகுதியிலிருந்தும் தகவல்கள் பெறப்படுகின்றன. இத்தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரக்ஷாபந்தன் மற்றும் அதன் சிறப்பும்..!



சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

 இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து,  அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

ராக்கி வரலாறு

ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார்.

மேலும், அவர் எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் ‘சிர் ஹரன்’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் கிருஷ்ணன்.

ரக்ஷாபந்தன் விழா தொடர்பான மற்றொரு கதை, சித்தூர் ராணி கர்ணாவதி மற்றும் மொகலாய பேரரசர் ஹுமாயுனுடையது. விதவையான சித்தூர் ராணி கர்ணாவதி, தனது அரசாட்சியைப் பேரரசர் பகதூர் ஷா கைப்பற்ற போகிறார் என்பதை உணர்ந்த போது, அவர் பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். இதனால், பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும், அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார், பேரரசர் பகதூர் ஷா.

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார்.

ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ரக்ஷாபந்தன் சிறப்பு

ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர்

. மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள். முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ரவன் மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை.

இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.

இசைஞானி இளையராஜா - வாழ்க்கை வரலாறு..!



தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கிய இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை மற்றும் திரைத்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 ஜூன், 1943

பிறப்பிடம்: பண்ணைப்புரம், தேனி, சென்னை மாகாணம், இந்தியா

பணி: திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக்கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

ஞானதேசிகனாகப் பிறந்த அவர், டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர். சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார்.

வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

இசையுலகப் பிரவேசம்

நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். மேலும், அவர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தையான ஆர். கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.

திரையுலக வாழ்க்கை

அவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம் அவர்கள். 1975ல் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அடுத்தப் படமான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘16 வயதினிலே’, ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடலோர கவிதைகள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆணழகன்’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆராதணை’, ‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அமைதிப்படை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’,  ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்ன தம்பி’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘இதயத்தை திருடாதே’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’,  எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

பிற இசையாக்கங்கள்

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரைத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கின்றனர்.

    “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கினார்.
    இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்’ (“How to name it”) என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார்.
    “இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும்,  ”மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.
    ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

எழுத்தாளராக இளையராஜா

அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

இல்லற வாழ்க்கை

அவர், ஜீவா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.

 விருதுகள்


  •     1988 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.


  •     2010 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


  •     2012 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.


    1988 – மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.  இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

    தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி’ என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா’ என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.

    1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2௦௦3ல் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2௦௦5ல் ‘அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.

    தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே’ படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்’ படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.

    கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி’ படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி..?



இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்

உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SSசேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன..?



ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!

குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம்..?



குரு எனும் வார்த்தைக்கு இரண்டு எழுத்துகள்தான். ஆனால், இந்தியாவை ஆன்மிக பூமியாக அடையாளப்படுத்துவது இந்த ஒரு வார்த்தைதான். ‘‘கோவிந்தன் கைவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், குரு கைவிட்டால் வழியே இல்லை’’ என்று கபீர்தாசர் கூறுவார். குரு என்றால், இருட்டைப் போக்குபவர், கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்கிறார்கள். அது சரி. குரு பெயர்கிறாரா? குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பது பலரின் சந்தேகக் கேள்விகள். நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

இந்த குருவை வியாழ பகவான், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவான தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்து கொண்ட ஆன்றோர்கள் குருபெயர்ச்சியின் போது நேரடியாக தட்சிணாமூர்த்தியையே வணங்கினர். நவகிரக குருவிற்கு உண்டான மஞ்சள் நிற ஆடையையும் கொண்டைக் கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்தனர். நவகிரக கிரகத்தின் குருத்வத்திற்கு அதாவது, குரு தன்மைக்கு மோன தட்சிணாமூர்த்தியின் பேரருளே காரணம். அதனால்தான் தட்சிணாமூர்த்தியை வணங்குகிறோம்.

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன. ஆலங்குடி, தென்குடித் திட்டை, சென்னை-பாடி, திருப்புலிவனம் ஆகியவை தனிச் சிறப்பு கொண்டவை. அப்படிப்பட்ட குருத் தலங்களுள் மூன்றாவதாக தக்கோலம் ஜலநாதீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. தற்போது தக்கோலத்தை குரு பரிகாரத் தலமாகவே பக்தர்கள் அறிந்துள்ளனர். காரணம், இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அத்தனை அற்புதமானது. தேவர்களின் குருவாகிய வியாழ பகவானின் தம்பி சம்வர்த்த முனிவர் இங்கு வழிபட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.

ஆனால், தலபுராணமோ தேவலோகப் பசுவான காமதேனுவின் சாபத்துக்கு உட்பட்ட வியாழ பகவானின் தம்பியாகிய உததி முனிவர், இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார் என்கிறது. உததி முனிவரும் சம்வர்த்த முனிவர் ஒருவரே என்ற கருத்தும் நிலவுகிறது. சில கோயில்களில் மூலவரைவிட பரிவார, கோஷ்ட தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உதாரணமாக திருநள்ளாறு தலத்தில் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரைவிட சனி பகவானுக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம். இது ஈசனே தனக்கு இணையாக பரிவார தெய்வங்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என்பதனால்தான்.

அதுபோலவே இந்த ஜலநாதீஸ்வரர் ஆலயத்திலும் மோன மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முன்னிறுத்தப்படுகிறார்.

கடந்த மே மாதம் 28ம் தேதியன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார். அதை முன்னிட்டு இக்கோயிலில் மிக விமரிசையாக பூஜைகளும் அபிஷேகங்களும் ஹோமங்களும் நடைபெற்றன. இரவு 9:14க்கு பெயர்ச்சி ஆன சமயத்தில் மகா தீபராதனை நடத்தப்பட்டது. மாலை ஐந்து மணியிலிருந்து ஹோமங்கள் செய்தனர். அதே சமயத்தில் சிறப்பு லட்சார்ச்சனையும் குருபகவானுக்கு நடந்தேறியது. விதவிதமான அலங்காரங்களில் குரு பகவான் ஜொலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசித்தபடி இருந்தனர். அன்று வரமுடியாதவர்கள் மறுநாளும் வந்து தரிசித்தனர்.

கருவறை கோஷ்டத்தில் தனி சந்நதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். உருவமைப்பை பார்த்தவுடனே பிரமிப்பு தோன்றும். அத்தனை நுணுக்கங்களோடு பகவானின் திருவுரு திகழ்கிறது. விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித்தால் அந்த ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜம் போன்ற தோற்றம்! வழக்கமான தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும். தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலைச் சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும் இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலை. இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்கின்றனர்.

சீடர்களை ஆட்கொண்டருளும் அடக்கியாளும் கண்டிப்போடு வழிப்படுத்தும் முறை என்று பல கோணங்களில் விவரிக்கிறார்கள். அதேசமயம் தலையை சற்றே சாய்த்து பார்க்கும் லாவண்யம் அபூர்வமானது. பொங்கி வழியும் ஞானத் திருமுகம். அதில் எல்லை காணா வானம்போல சாந்தம், அமைதி! விக்ரகம் கல் என்ற உண்மை மறைந்து ஞான உணர்வு எட்டிப் பார்க்கிறது. திருமுகத்தில் மெலிதான, அகலாத புன்னகை தரிசிப்போரின் நெஞ்சில் குளுமையை பரப்புகிறது. ஜென்ம ஜென்மங்களாய்த் தொடரும் வினைகள் சிதறுண்டு போகின்றன.

கழுத்தில் சவடி என்றழைக்கப்படும் சரடும், அழகான வேலைப்பாடுகளோடு கூடிய சரப்பளி கழுத்தணியும் நெளிந்து படர்ந்து அழகூட்டுகின்றன. இடது பின் கையில் தீப்பந்தமும் அதிலிருந்து வெளிப்படும் தீ ஜுவாலையும் நமக்குள் ஞானாக்னியை கொழுந்துவிட்டெறியச் செய்கிறது. காட்டில் அமர்ந்திருப்பதால் அவரது கால்களுக்கு அருகே மான்கள், பாம்பு... இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் காண முடியாது. இங்கு குருபகவான் பேசாமல் பேசுகிறார். மௌனத்தினாலேயே ஞானப் பிரகடனம் செய்கிறார், என்று உபநிஷதம் கூறுகிறது. அந்த மௌனம் இங்குதான், இங்குதான் நிலவுகிறது.

வாழ்வில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் எல்லாம் இந்த சந்நதிக்கு முன்பு எம்மாத்திரம்! வேண்டிக்கொள்ள வந்தவர்கள் வெறும் மௌனத்தை சுமந்து செல்வார்கள். கண்டும் வணங்கியும் எதுவும் வேண்டாமலேயே திரும்பி விடுவர். ஏனெனில், அங்கு ஞானப் பேராறு பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறது. அதன்முன்பு நின்று குவளை நீர் கேட்க யாருக்கும் மனம் வராது.

கோயிலின் தலபுராணம் என்ன..?

ஈசனை மாப்பிள்ளையாகப் பெற்றும் கூட தட்சனுக்கு அகங்காரத்தை அறுக்கத் தெரியவில்லை.  திடீரென்று பெரிய யாகம் செய்தான். அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க அவர்கள் குழுமியிருந்தார்கள். ஆனால், பிரபஞ்சத்தின் மையச் சக்தியான ஈசனை வேண்டுமென்றே அவன் அழைக்கவில்லை. வேதங்களில் ஈசனைக் குறிக்கும் சப்தங்களை தட்சன் வேண்டுமென்றே தவிர்த்தான். மற்ற எல்லா தேவர்களையும் சப்த ரூபமாக அழைத்தான். ஹோமத் தீயில் அவர்களுக்கு உரித்தானதை ஆகுதியாகக் கொடுத்தான். வேதங்களெல்லாம் யக்ஞம் செய்வதாலேயே ஈசனின் நிலையை ஒருவன் அடைகிறான் என்று கோஷிக்கின்றன. ஆனால், அதே யக்ஞத்தை செய்யும்போது தட்சன் முட்டாள்தனமாக ஈசனை அழையாமல் தவிர்த்தான்.

தட்சன் தாட்சாயிணியையும் வெளியேறும்படி கூறினான். ஆனால், அவளோ அங்கிருந்த யாக குண்டத்தில் இறங்கி யோகாக்னி யால் தன்னை எரித்துக் கொண்டாள். ஈசனின் கோபம் பன்மடங்கு கூடியது. அவருக்குள்ளிருந்து வீரபத்திரர் வெளிப்பட்டு தட்சனின் யாகத்தையே சிதைத்தார். தட்சனின் தலையை சீவியெறிந்து ஆட்டின் தலையை பொருத்தினார். அப்போது தக்கன் ஓலமிட்டான். தக்கன் இப்படி ஓலமிட்டதால் இத்தலம் தக்கோலம் என்றழைக்கப்பட்டது. தக்கனின் அகங்காரம் சிதைந்து சத்வ குணம் பெருகியது. ஈசனின் ஆணைப்படியே சீர நதிக்கரையின் ஓரமான இத்தலத்தில் அமர்ந்து ஈசனை பூஜித்தான். ஆட்டின் தலை பொருத்தப்பட்டதால் ஆடு கத்தும் ஒலியாகிய ‘‘மே... மே...’’ என்னும் சமகத்தை சொல்லி பூஜித்தான்.

இது ருத்ரத்தோடு சேர்ந்து வரும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை மந்திரங்கள் கொண்டது. தக்கன் வழிபாடு செய்த இத்தலத்திற்கும் பார்வதி தேவி வந்து பூஜித்தாள். அருகேயுள்ள ஆற்றில் வெள்ளம் வந்து லிங்கத்தை அடித்துச் செல்ல முயன்றபோது தேவி தமது இரு
கரங்களால் லிங்கத்தை அணைத்து வெள்ளத்திலிருந்து தடுத்தார். நீருற்றின் வடிவமாக இத்தல இறைவன் விளங்குவதால் திருவூறல் என்றே தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகிறது. ஜலநாதீஸ்வரர் என்று வடமொழி கூறுகிறது. தக்கனின் தீந்தவமோ என்னவோ, அக்கினிக் கோளமொன்று கருவறையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜலநாதீஸ்வரர் என்றே இவருக்குப் பெயர். நீருக்குள் நெருப்பாக ஈசன் இருக்கிறார் என்பது வேத வாக்கியம்.  அது இத்தலத்தில் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

அம்பாள் கிரிராஜகன்னிகாம்பாள் என்றழைக்கப்படுகிறாள். ‘‘என் தந்தை தவறு செய்து விட்டார். உங்களின் பேச்சைக் கேட்காமல், தங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கத்தான் அந்த யாகத்துக்குச் சென்றேன்’’ என்கிற பரிதவிப்பை அம்பாளின் திருமுகத்தில் இன்றும் காணலாம். தனிச் சந்நதியில் பேரருளோடு கணவனைக் கண்ட திருப்தியோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். உததி முனிவரின் ஜீவசமாதியென்றும் அவர் பூஜித்தது என்றும் சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று குருபகவானுக்கு அருகேயே சற்று உள்ளடங்கியதுபோல இருக்கிறது. தரிசிக்க தரிசிக்க தெவிட்டாத தனியமுதாக இக்கோயில் விளங்குகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும் அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

அடிக்கடி மயக்கம் வருகிறதா..?உயரமான தலையணை வைத்து படுக்காதிர்...



கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின்

 உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன  வாழ்க்கை முறை,

பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது,

அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது,

எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது,

 உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது,

டிவி பார்ப்பது

போன்ற செயல்களால் கழுத்து  பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.

கழுத்துவலி வராமல் இருக்க 

உயரமான தலையணை,

சமனில்லா படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது.

இருசக்கர வாகனங்கள்,

கார், ஆட்டோவில்  நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

அதிக எடை தூக்க கூடாது.

 மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம்.

இது  கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும்.

முட்டை மார்க் வாங்குபவனும் முட்டை சாப்பிடனும் அவசியம்...!!



முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று நீண்ட காலம் நடந்து வந்த விவாதத்திற்கு, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு விடையை தந்துள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

 ஆனால் முட்டையிலிருந்து தான் ஆரோக்கியம் வந்தது என்று சொல்லவே இந்த கட்டுரையை நாங்கள் இங்கு கொடுத்திருக்கிறோம். இந்த கட்டுரையின் மூலம் முட்டையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

முட்டையிலுள்ள வெள்ளை கரு, மஞ்சள் கரு உட்பட அனைத்து பகுதிகளுமே ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரங்களாக உள்ளன. அதிலும் நாட்டு முட்டையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தினந்தோறும் ஒரு நாட்டு முட்டையை பச்சையாக குடித்து வந்தால் உடல் உரம் பெறும்.

பொதுவாக உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் பல வடிவங்களில் கிடைத்து வருகின்றன. அவை இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

அந்த வகையில் முட்டை ஒரு சிறந்த முழு சுகாதார உணவாக உள்ளது. இந்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை இங்கே பார்ப்போம்.

உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் தேவையான புரதங்கள் முட்டையில் பெருமளவு நிரம்பியுள்ளன.

நமது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்குத் தேவையான வைட்டமின் டி வேக வைத்த முட்டையில் அதிகளவு உள்ளது. இந்த வைட்டமின் கால்சியத்தை அதிகளவில் கிரகித்துக் கொள்வதால், உடலின் உறுதியும் அதிகரிக்கிறது.

முட்டையிலுள்ள ஒற்றை செறிவூட்டப்படாத மற்றும் பல்படி செறிவூட்டப்படாத கொழுப்புகள், செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் வரும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

முட்டையில் நிரம்பியிருக்கும் நல்ல கொழுப்புகள், பிரச்சனைகளை உண்டாக்கும் மோசமான கொழுப்புகளை குறைக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டாலும் வேறெந்த விளைவுகளையும் முட்டை ஏற்படுத்துவதில்லை.

இயற்கையான முறையில் வைட்டமின் டி நிரம்பியுள்ள உணவுப் பொருளாக முட்டை உள்ளது.

முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

முடி மற்றும் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் வைட்டமின் பி12 நிரம்பியுள்ள உணவாக முட்டை உள்ளது. உங்களுக்கு முடி உதிர்வடையும் பிரச்சனை அதிகமாக இருந்தால், கந்தகம் அதிகளவு உள்ள முட்டையை சாப்பிடுங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய்..எப்படி எதிர்கொள்வது...?



தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை ‘சாறி புற்றுநோய்’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்’ என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

‘அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.

இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை’ என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.

டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்’ என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பில்கேம் என்னும் விழுங்கும் கேமரா…….!


பில்கேம் என்னும் விழுங்கும் மாத்திரையை மிக அதிக நாட்களாய் அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் (FDA) போராடி அனுமதி பெற்றுள்ளது இஸ்ரேல் கம்பெனி ஒன்று. இந்த மாத்திரையை முழுங்கினால் போதும் இது உடலினுள் சென்று இது வரை அதிக பிரச்சினையாய் இருந்த காலனாஸ்க்ப்ப்பி இனிமேல் இல்லை இது ஒவ்வொரு இன்ச்சும் தேவையான இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஆரம்ப நிலை புற்று நோய் மற்றும் மலசிக்கல் பிரச்சினைகளை களைய முடியும்.

இது 80 நாடுகளில் கிடைக்கும். இது மருத்துவர்களுக்கும் சில அவதி படும் நோயாகிளுக்கு வரப்பிரசாதம். இதைப் படிச்சிட்டு வந்து சார் கேமராவை முழுங்கினா அவ என் மனசில இருக்கிறதை படம் புடிச்சி காட்டுமான்னு என் கிட்ட யாரும் கேட்கப்படாது……

வீடியோவை பாருங்கள் இது மனிதனின் உடம்பில் எப்படி பயணிக்கிறது என்று:

மொபைலில் நீங்கள் அறியாத சில...!



நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.

ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.

எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.

சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா..?

டெல்லி: உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் செல்போன் பயன்படுத்துவதில் தமிழக வாடிக்கையாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் மட்டும் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அறிக்கையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

இந்தியா நம்பர் 2

செல்போன் பயன்படுத்துவதில், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகம் நம்பர் 2

செல்போன் பயன்படுத்துபவர்களில் 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. உ.பி, தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம்.

5 மாநிலங்கள்

இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது 36 கோடியாக உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45 சதவீதம் ஆகும்.

500 கோடி செல்போன் இணைப்பு

உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!

மரணத்திற்குப் பின்..? - சில உண்மை சம்பவங்களும் , அலசலும்..!



இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி.

இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.

இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது"

சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?

இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன.

சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

 பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.

அல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்..!



சிறு குழந்தைகளுக்கும் 'அசிடிட்டி’ ஏற்படுவது அதிர்ச்சியான விஷயம். அல்சர், அசிடிட்டி போன்ற வயிறு மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், என்ன சாப்பிடலாம் என்பதை விளக்குகிறார், சென்னை ஹெயின்ஸ் நியூட்ரிலைஃப் கிளினிக்கின் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்னைக்கும் மூல காரணம், 'ஸ்ட்ரெஸ்’. அடுத்தது, முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, உணவைத் தள்ளிப்போடுவது, அதிகமான இடைவெளிவிட்டுச் சாப்பிடுவது போன்ற சீரற்ற உணவுப் பழக்கங்களால் அல்சர் வரலாம்.

இப்போது அல்சர், அசிடிட்டியை விட, அதிகமான அளவில் மக்களைப் பாதித்து வரும் பிரச்னை, 'Acidity'என்ற 'நெஞ்சைக் கரித்தல்’ அல்லது 'எதுக்களித்தல்’தான். உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலேறி வருவதுதான், 'நெஞ்சைக் கரித்தல்’ என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்கள், ஏதேனும் ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் விடுவது மற்றும் டென்ஷன்தான்.

அல்சர் வந்துவிட்டால், உடனடியாக உணவுப் பழக்கத்தைச் சீராக்க வேண்டும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, காரம் மற்றும் மசாலா இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதும்'' என்றார்.

தாரிணி கிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி, அல்சருக்கான சில உணவுகளை இங்கே செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

பூசணி உலர் திராட்சை ராய்த்தா

தேவையானவை:

பூசணித் துருவல் - 2 கப், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப்.

செய்முறை:

பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாகப் பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு, பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிரில் சேர்த்துக் கலக்கவும். குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.


மணத்தக்காளிக் கீரை மண்டி

தேவையானவை:

மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6, கெட்டியான முதல் தேங்காய்ப் பால், இரண்டாம் பால், அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி)- தலா அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, வெந்தயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளாமல் போட்டு, தோல் உரித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.

குறிப்பு:

இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.



வாழைத்தண்டு மோர்

தேவையானவை:

புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.

குறிப்பு:

பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.

ஒரு நாள் உணவுப் பட்டியல்:

காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ.

காலை:

இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)

11 மணி:

புளிக்காத மோர்.

மதிய உணவு:

நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.

மாலை 4 மணி:

பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.

இரவு:

இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை:

மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.

காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.

நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை:

வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.

ஃப்ரூட் சாலட் செய்யும்போது, க்ரீம் போன்ற செரிக்கக் கடினமான பொருட்களைச் சேர்க்க வேண்டாம்.

வெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்

தேவையானவை:

வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.

செய்முறை:

வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின் விதைகள் நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பீர்க்கங்காய் இளங்கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பீர்க்கங்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - 1, மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து, அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும்.

குறிப்பு: மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, இரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கலாம். சிறிது கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.
 
நண்பேன்டா