Saturday 15 February 2014

எச்சரிக்கை - சாக்லெட்டு சாப்பிடுவதற்கு முன்பு பாருங்க..!



பிரித்தானியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கிய Cadbury's சொக்லெட்டுக்குள் குளவி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங் என்னும் 20 வயது மாணவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் Cadbury's Dairy Milk Chocolate ஒன்றை வாங்கினார்.


அதன் கவரை பிரித்து சாக்லெட்டை சுவைக்க நினைத்த ஜேக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாக்லெட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

அந்த பகுதியை பார்த்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். அந்த சாக்லெட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்துப்போய் கிடந்தது. இதனை உடனடியாக அவரது மொபைல் கேமராவில் படமெடுத்த ஜேக் , இது குறித்து விளக்கம் கேட்டு கேட்பரீஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார்.


இதனையடுத்து, தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு உயரதிகாரியை ஜேக் கியேட்டிங்-கிடம் அனுப்பி வைத்த கேட்பரீஸ் நிறுவனம் அந்த சாக்லேட்டை பரிசோதனைக்காக வாங்கி வைத்துள்ளது.

பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் இந்த தவறு எங்கு? எப்படி நேர்ந்தது? என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்பரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரிப்பு – அதிர்ச்சி..!

ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரிப்பு – இங்கிலாந்து வெளியிடும் அதிர்ச்சி..!
உலகம் முழுவதும் பெண்கள் பலாத்கார கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஆண்களும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அவர்களும் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்ற விஷயம் பெரிதாக பேசப்படுவதில்லை. இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் சிறுவர்கள், ஆண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இது போல் ”பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தில்,”இங்கிலாந்தில் பலாத்காரம் அல்லது பாலியல் ரீதியான கொடுமைகளால் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ஆண்கள் பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் அதுபோன்ற சம்பவங்களில் புகார் தெரிவிப்பதில்லை.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, இங்கிலாந்தில் 13 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள 2,164 ஆண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் டேமியன் கிரீன் ,”பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தில் இருந்து வெளிவந்து மற்றவர்களை போல இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரை, கவுன்சலிங், ஆலோசனை வழங்க அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.


பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் பெரும் பாலும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அதுபோன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம். பலாத்கார பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட்டு வாழ ஏற்பாடு செய்யப்படும். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு உதவ ஏற்கனவே சில தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இன்னும் பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு முன்வர வேண்டும்.மேலும் பலாத்காரத்தால் சிறுவர்கள், ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தண்டனைகளை கடுமையாக்க பரிசீலித்து வருகிறோம்”என்று அமைச்சர் டேமியன் கிரீன் கூறினார்.

மங்கள ஆராத்தி எடுப்பது ஏன்.? அறிவியல் ரீதியான விளக்கம்.!



தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

 மங்கள ஆராத்தி எடுப்பது ஏன்.? விஞ்ஞான விளக்கம்.!

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே ‘ஆரா’ சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

வாசிக்க முடியாத மர்ம புத்தகம் Voynich..!



வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகம் அச்சடிக்கப்படாத இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு


எந்த ஆதாரமும் இல்லை. கதிரியக்க கார்பன் தேதியாக்க முறைமூலமாக இது எழுதப்பட்ட காலம் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.


இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டது என்று அரியப்படுகின்றது.புத்தகப் பதிப்புரிமையாளர் ஒருவர் 1912 ம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் இந்தக் கைப்பிரதி புத்தகத்தை வாங்கினார்.இதில் காணமால் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் இந்தக் கைப்பிரதியில் மீதம் இருக்கின்றது.


இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாண்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் உள்ளது அல்லது படங்கள் இருக்கின்றது .பெரும் பாண்மையான மக்கள் இதனைப் பார்த்துவிட்டு இதில் உள்ள புரியாத எழுத்துக்களும் படங்களும் முட்டாள்தனமானது என்று கூறுகின்றார்கள்.


2013 ம் ஆண்டு மான்செஸ்டர் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதனை பேப்பரில் பதிப்பித்தும் இதில் கண்டுள்ள விசயங்கள் சங்கேதக் குறியில் எழுதப்பட்டுள்ள விசயங்கள் என்று கூறுகின்றார்கள்.


சில ஆராய்ச்சியாளர்கள் இது முழுக்க முழுக்க எந்த ஒரு விசயத்தையோ செய்தியையோ வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.ஆனால் இது ஏதோ ஒரு அர்த்தத்துடன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளாக இருக்கலாம் எனபது ஒருசாராரின் கருத்து.ஆனால் எப்படியோ நமக்கும் இது புரிந்த மாட்டில் இல்லை.இந்தப் புத்தகம் கூறும் மர்மம் விளக்கப்பட முடியுமா ?

உடலை FIT ஆக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!



பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று.
ஒருவர் பல உடற்பயிற்சிகளையும் செய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். அவை கண்டிப்பான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உடற்பயிற்சி (Religious workout) ஆகும்.
பளு தூக்குதல் : உடலில் உள்ள தசைகளை விரிவுபடுத்த விரும்பினால் இந்த வகை பயிற்சியை மேற்கொள்ளலாம். சாதாரணமாக செய்யும் பயிற்சிகளை காட்டிலும் இது சிறிது மேலானதாகும். இந்த பயிற்சியை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளும், உடல் பலமும் தேவைபடுகின்றது. ஆனால் பளு தூக்குவது உடலுக்கு சிறந்த வடிவத்தையும் கவாச்சியான அமைப்பையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதயத்தை வலுப்படுத்தும் பயிற்சி : இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், திரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன. இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கின்றன. பருமனான உடலை உடையவர்களுக்கு இத்தகைய பயிற்சி மிக உபயோகமாக இருக்கும். இதை சரிவரசெய்தால் உடல் நிச்சயம் குறையும்.
விளையாட்டு : பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் எடையை குறைக்க முடியும். இவ்வாறு உடலை வடிவுப்படுத்தவும் முடியும். இத்தகைய பயிற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும்.
ஸ்ட்ரெட்சிங் : ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது. உடலுக்கு நல்ல அமைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இறுக்கமடைந்து கவர்ச்சியான உடலை பெற முடியும்.
நீச்சல் : நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல்லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைகளை வலுவூட்டி உடலையும் குறைக்கிறது. ஆகையால் நீச்சலும் உடலை குறைப்பதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.
ஸ்கிப்பிங் : 100 லிருந்து 200 ஸ்கிப்ஸ் ஒரு நாளைக்கு செய்வது உங்களை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உதவுகிறது.

இரவில் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் - அதிர்ச்சி தகவல்



 ஒரு நாள் இரவு தூக்கம் வராமல், சமூக வலைத் தளத்தை சற்று உலா வரலாம் என்று அதனுள் சென்ற எனக்கு ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. என் நண்பர்கள் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் இருந்தனர். சரி, நம்மை போல தூக்கம் வராமல் இணையதளத்தில் உலாவருவதாகவே அப்போது எண்ணினேன். ஆனால் இவர்களுடன் சாட் (Chat) செய்தபோதுதான் புரிந்தது விஷயம். இந்த இளைஞர் கூட்டம் தினமுமே இரவு தொடங்கி விடியற்காலை வரை விழித்து கொண்டு ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற அறிவுரை தான் என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு இரவு முழுதும் விழித்திருந்து என்ன செய்கிறது இந்த இளைஞர் கூட்டம்? சற்று ஆராய்ந்தால் உண்மை புரிகிறது... சமூக தளங்களிள் ஆன்லைனில் இருப்பதால் இவர்கள் வெட்டி அரட்டை மட்டும் அடித்து கொண்டிருப்பதாக நினைத்து விட முடியாது. சரி, அப்படி வேறு என்ன தான் செய்து விடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

இளைஞர்கள் பலரும் தங்களையும் தங்கள் நேரத்தையும் மறந்து, அறிவை வளர்க்கும் வலைதளங்களை மணிக்கணக்கில் படித்து கொண்டும், தம் எண்ணங்களை வெளிப்படுத்தி 'ப்ளாக்ஸ்' எழுதுவதிலும் இரவு நேரத்தை செலவிடுகின்றனர். பல மாணவர்களோ, தம் கற்பனைத் திறனைக் கொண்டு குறும்படம் தயாரித்தல், பாட்டுக்கு மெட்டு அமைத்தல், ஓவியம், கிராபிக்ஸ் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப என்னென்னமோ பரிட்சித்து பார்த்துகொள்கின்றனர். உடனுக்குடன் ஆன்லைனில் உள்ள தமது நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு இரவு நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விடுகின்றனர்.

சரி, எல்லா இளசுகளுமா இரவை இப்படி கணினியில் உருப்படியாக கழிக்கிறார்க்ள்? அப்படி ஒன்றும் சொல்லிவிடமுடியாது. பலர் தங்கள் விருப்ப பாடல்களை கேட்டுக்கொண்டும், சினிமாக்களை டௌன்லோட் செய்து, கணினியில் பார்த்துக்கொண்டும், சமூக வலையில் தெரியாதவர்களிடம் சாட் அடித்து கொண்டும் தம் தூக்கத்தையும் மறந்து நேரத்தை போக்குகின்றர்.

இது பற்றி எழுதும்போது எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் பயிற்சி ஆசிரியராக நான் பணிபுரிந்த போது, மதிய வகுப்புகளுக்கு கூட மாணவர்கள் தாமதமாகவே வருவது வழக்கம். ஒரு முறை சற்று கடிந்து கொண்டு நேரத்தோடு வர சொன்னதற்கு, ஒரு மாணவி என்னிடம் சொன்னாள் “மேம் நீங்க பேசாம வகுப்புகளை இரவு நேரத்திற்கு மாத்திடுங்க.. நாங்க சரியான நேரத்துக்கும் வருவோம், இப்படி தூங்கியும் வழியாம பாடங்களை அற்புதமா கவனிப்போம்..” என்று. தூக்கிவாரிப் போட்ட எனக்கு அதைப் பற்றி யோசித்த போதுதான் அதில் உள்ள உண்மையும் புரிந்தது.

வகுப்பில் நான் பல முறை கொடுக்கும் எழுத்து மற்றும் பட தயாரிப்பு பயிற்சி வேலையை சரி வர செய்ததை விட, வீட்டில் இரவு முழுதும் ஆராய்ச்சிசெய்து தயாரித்து வந்தவை மிக அற்புதமான, கற்பனை வடிவுடன் கூடிய படைப்புகளாகவே இருந்துள்ளதை என்னால் மறுக்கமுடியாது.

என்னதான் இந்த இரவு நேரம் முழித்திருக்கும் பழக்கத்தில் நன்மை இருப்பது போல் இருந்தாலும், இந்த புது வித பழக்கத்தால் பல எதிர்மறைகளும், சிக்கல்களும் இருப்பதை இளைஞர்கள் ஒதுக்கிவிட முடியாது.

இரவு முழுதும் உறங்காமல், விடியற்காலை தூங்கி, அவசரஅவசரமாக காலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலையை தவறவிடும் இளைஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். இன்று மாணவர்களாக இருக்கும் இவர்கள் நாளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நடக்கதான் முடியுமா? காலையில் செய்ய வேண்டிய அலுவலக வேலையை வீட்டில் இரவில் முடிப்பேன் என்று சொல்லத்தான் முடியுமா? பி.பி.ஓ, ஐ.டி., மற்றும் சில துறைகளிள் இரவு நேர ஷிப்ட் வசதி இருந்தாலும் எல்லா துறைகளுக்கும் இந்த பழக்கம் சாத்தியப்படாது.

அமெரிக்கா, ஐரோப்பா, ல்ண்டன், சீனா போன்ற நாடுகளிள் பொதுவாகவே நம்மை விட காலை சீக்கிரம் அலுவலகம் செல்லும் பழக்கமே உள்ளதால் இரவு பொழுதோடு தூங்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். பல நாடுகளில் கடைகள், மால்களை கூட மாலை 6 மணிக்கு மூடிவிட்டு, இரவு சாப்பாட்டையும் பொழுதோடு முடித்துக்கொண்டு உறங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இளைஞர்களுடன் இது பற்றி விவாதித்தால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவில் தான் பல அற்புத மெட்டுக்களை அமைத்தார் என்றும், பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பலரும் இரவிலேயே பணிகளை வெற்றிகறமாக செய்ததை எடுத்துக்காட்டாக கூறி வாயை அடைத்துவிடுகின்றனர். சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களை பாராட்டினாலும், இந்த இரவு விழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மறுத்துவிடமுடியாது.

இரவு தொடங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணிவரை முழித்து, பின்னர் தூங்கி காலை எழமுடியாமல் எழுந்து கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் ஓட வேண்டியுள்ளதால், காலை டிபனை சாப்பிடாமல், பகல் 12 மணி சுமாருக்கு மதிய உணவையும் சேர்த்து 'ப்ரன்ச்' (Brunch) என்ற பெயரில் சாப்பிடுவது தங்கள் உடலை எந்த அளவு பாதிக்கும் என்று அறியவில்லை இளவட்டங்கள்.

தூக்க கலக்கத்தோடு பணிபுரியும் இவர்கள் தங்கள் முழுத்திறமையை காட்டத் தவற விடும் நிலைதான் உருவாகிறது. மன சோர்வு, உடல் சோர்வு ஏற்படுத்தும் இப்பழக்கம், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியையே பாதித்துவிடுமோ என்ற அச்சம் தான் நமக்கு எழுகிறது.

எனவே ஆந்தையை போல இரவில் விழித்திருக்கும் இளைஞர்களே, சற்று யோசித்து நடந்து கொள்ளுங்கள்! உங்கள் இந்த இரவு வாழ்க்கையை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொடருங்கள்.. தினம் இரவு கண்களுக்கு ஓய்வுகொடுத்து காலை பொழுதை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.

தனிமையின் நண்பர்கள்..!



 சென்ற தீபாவளியின்போது நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு அழைத்தார். மிக நல்ல நண்பர். போகும் போது நிறையவே உணவும் இனிப்புகளும் பார்சல் கொடுத்தனுப் பினார். நான் எப்போதும் போல வேண்டாம் என்று சும்மாங்காச்சிக்கும் முதலில் மறுத்தேன். மனதிற்குள் பயம்தான், எங்கே சரி பரவால்லங்க என்று திரும்பி வைத்துக்கொள்வாரோ என்று.ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நிறையவே உணவும் இனிப்புகளையும் தூக்கமுடியாத அளவுக்கு நிரப்பிக்கொடுத்தார். அப்பாடா நைட்டுக்காச்சு என்று நினைத்தபடி கிளம்பினேன்.

புத்தாடை உடுத்தி முகத்தில் புன்னகையோடு கடக்கிற மைனாக் களையும் மயில்களையும் பார்த்தபடி சுகமாக வண்டியோட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கையில் காசில்லாததை உணர்ந்து சைதாப்பேட்டை பக்கமாக ஒரு ஏ.டி.எம்மில் நிறுத்தினேன்.

ஏ.டி.எம்-க்கு பாதுகாப்புக்காக ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். விரலால் உந்தித்தள்ளினாலே உதிர்ந்துவிடுகிற உறுதியான தேகமும் முகத்தில் எண்ணெய் வழிய கொஞ்சமாக சோகத்தையும் அப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார். இவருக்கே இரண்டு பேர் பாதுகாப்புக்கு வேணுமே என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

வண்டியை ஓரமாக நிறுத்தி ஏ.டி.எம் கதவை திறக்க, “தம்பி ஹெல்மெட்டை கழட்டிடுங்க.. திட்டுவாங்க” என்றார். யார் திட்டுவார்கள் யாரைத் திட்டுவார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அவர் திட்டுவாங்கியிருப்பார் என்பதை உணர்ந்து உடனே கழற்றினேன்.

“தம்பி அந்த கர்சீப்பையும்.”

கழற்றினேன்.

உள்ளே நுழைந்து பணத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறும்போது, வண்டியை எடுக்க உதவியபடி சல்யூட் அடித்தார். பாக்கெட்டில் சில்லறை தேடினேன்.

உடனடியாக அகப்படாத அந்த இரண்டு ரூபாயைத் தேடிக்கொண்டே அந்த பெரியவரிடம் “என்ன தாத்தா இங்க உக்காந்திருக்கீங்க? தீபாவளியெல்லாம் இல்லையா” என்று பேச்சுக்கொடுத்தேன். கையில் ஐந்து ரூபாய் அகப்பட்டது கொடுத்தேன். புன்னகையோடு வாங்கிக்கொண்டார்.

“இல்ல தம்பி... ஊருக்கு போணும்.. ஆனா போல” சொல்லும்போதே முகம் மாறியது.

“மெட்ராஸே காலியாகி கெடக்கு.. எந்த ஊரு... உங்களுக்கு?”

“மதுரப்பக்கம். ஊர்ல பேரய்ங்க நாலு பேர் இருக்காய்ங்க.. மூணு பசங்க.. பொண்டாட்டி போய்ட்டா. விவசாயம்தான். இப்ப இல்ல..” என்று உடைத்து உடைத்து வார்த்தைகளை முழுங்கினார். நான் தலையில் கர்சீப்பை கட்டிக்கொண்டிருந்தேன்.

“இப்ப என்ன.. சும்மா போய்ட்டு வரதுதானே”

“போலாம்தான்.. வெறுங்கையோட எப்படி போறது.. அதுமில்லாம அவிங்க நம்மள மதிக்கறதில்லனுதான் பொழப்புதேடி இங்கவந்து இந்தா இந்தவேல பாக்குறேன்.”

“அதுசரி போனஸ் கீனஸ் குடுத்துருப் பாய்ங்கள்ல.. போலாம்ல.”

“இல்லப்பா இன்னும் சம்பளமே போடல.. பேமன்ட் இன்னும் பேங்க்லருந்து வரலனு ஆபீஸ்ல சொல்ட்டாங்க என்ன பண்றதுனு தெரியல... அப்படியே வந்தாலும்.. என்னத்த குடுத்துறப்போறானுங்க.. மூவாயிரத்து ஐநூறு ரூவா தருவாய்ங்க.. அது திங்கறதுக்கும் தங்கறதுக்குமே போயிடும்.. ஊருக்குன்னா துணிமணி வாங்கிட்டு போனாதான மரியாத” என்றார். எனக்கு அவர் சொல்வதில் பாதி புரிந்தும் புரியாமலுமிருந்தாலும், உம் கொட்டிக்கொண்டிருந்தேன். ஊரில் விவசாயம் பார்த்தது, சினிமா வாய்ப்புத்தேடி முதல்முறை சென்னை வந்தது, காதலித்து தன் மனைவியை திருமணம் செய்துகொண்டது என்று சொல்லிக்கொண்டே போனார். நான் அவருடைய சீட்டுக்கு அருகில் ஏடிஎம் வாசலில் அமர்ந்துவிட்டிருந்தேன்.

ஊருக்குள் முதன்முறையாக பைக் வாங்கியது, அண்ணன் தம்பி பிரச்சனையில் சொத்து விவகாரம் கோர்ட்டுக்கு போக எல்லாவற்றையும் இழந்தது என நிறையவே பேசிக்கொண்டேயிருந்தார். மகிழ்ச்சியான தருணங்களை சொல்லும்போது எம்.ஜி.ஆராகவும் சோகம் வரும்போது சிவாஜியாகவும் மாறி மாறி அவர் முகம் அபிநயிக்க நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“என் பொண்டாடி இருந்திருந்தா இப்படிலாம் தனியா கெடந்து” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவர் நிறுத்திக்கொண்டார். அவருடைய குரலும் அவருடைய ஏதோ மோசமான துக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. க்க்க்க் என்று இருமினார். “உடம்பை பார்த்துக்கங்கோங்க தாத்தா நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு என்னுடைய விசிட்டிங் கார்ட் ஒன்றை கொடுத்து எதுனா உதவி வேணும்னா சொல்லுங்க என்றபடி என் பைக்கை எடுக்க மீண்டும் கிளம்பினேன்.

என்னவோ ஒரு உந்துதல்... திரும்பி அவரிடம் சென்று “சாப்டீங்களா” என்றேன். இல்லை என்றார். கையிலிருந்த பார்சலை அவரிடம் கொடுத்தேன். “நல்லா சாப்டுங்க.. ஸ்வீட்டுமிருக்கு இரண்டு நாள் வச்சு சாப்டுங்க.” என்று கொடுத்தேன் வேண்டாம் என்றார். “புடிங்க தாத்தா ஹேப்பி தீபாவளி” என்று திணித்தேன்.

அவசரமாக ஏடிஎம் உள்ளே போய் ஒரு நூறுரூபாய் எடுத்து அவர் கையில் கொடுத்தேன். வேண்டாம் என்று முதலில் நிறையவே மறுத்தார். கையில் வைத்து “நான் உங்க பேரன் மாதிரிதான். வச்சிக்கோங்க. ஹேப்பி தீபாவளி” என்று திணித்தேன். வாங்கிக்கொண்டார். போன்பண்ணுங்க என்றேன் தலையசைத்தார். “சரி தாத்தா கிளம்பறேன்” என்றேன். கையை பற்றிக்கொண்டார். எதுவுமே பேசவில்லை. நான் கிளம்ப அவர் என்னை பார்த்துக்கொண்டேயிருந்தார்.

கிளம்பி வீடுவந்துசேர்ந்த பின்தான் நினைப்பு வந்தது அந்த தாத்தா பேரை கேக்கவே இல்லையே.. அவரும் என் பேரை கேக்கவே இல்லை.

“சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்த் - வாழ்க்கை வரலாறு



தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘முரட்டுக்காளை’, ‘தில்லு முல்லு’ ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’ படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘மாப்பிள்ளை’ ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன். ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.


  • பிறப்பு: டிசம்பர் 12, 1949


  • இடம்: கர்நாடக மாநிலம், இந்தியா


  • பணி: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், 

  • நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள், பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பயம் இல்லாதவாராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

திரைப்படத்துறையில் நடிகனாக ரஜினிகாந்த்  

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975  ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை, இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார். அதனை தொடர்ந்து ‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977),  ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.


கதாநாயகனாக ரஜினிகாந்தின் வெற்றிப் பயணம்

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.

‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘முரட்டுக்காளை’, போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக நடித்து புகழ் பெற்றார். 1981 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தியிருப்பார். ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம் அவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது எனலாம். இப்படத்தில், இந்து சமயப் புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்” வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜாதி ராஜா’, ‘ராஜா சின்ன ரோஜா’, மற்றும் ‘மாப்பிள்ளை’ போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

1990 ஆம் ஆண்டுகளில் நடித்த ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் ‘சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது எனலாம். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும் பெற்றது.

மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும், 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது. மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.


ரஜினிகாந்தின் பிறமொழி திரைப்படங்கள்

ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.      

‘கதா சங்கமா’ (1976), ‘பாலு ஜேனு’ (1976),  ‘ஒண்டு பிரேமதா கதா’ (1977), ‘சகோதர சவல்’ (1977),  ‘குங்கும ரக்சே’ (1977), ‘கலாட்டா சம்சாரா’ (1977), ‘கில்லாட் கிட்டு’ (1978),  ‘மாது தப்படமகா’ (1978), ‘தப்பிட தலா’ (1978), ‘ப்ரியா’ (1979), ‘கர்ஜனே’ (1981) போன்ற கன்னட மொழித் திரைப்படங்களிலும்,

 ‘அந்துலேனி கதா’ (1976),  ‘சிலக்கம்மா செப்பண்டி’ (1977), ‘தொலிரேயி கடிட்சண்டி’ ‘(1977), ‘ஆமே கதா’ (1977), ‘அன்னடம்முளு சவால்’ (1978), ‘வயசு பிலிசிண்டி’(1978), ‘இதாரு அசாத்யுலே’ (1979), ‘அந்தமைனா அனுபவம்’ (1979), ‘டைகர்’ (1979), ‘அம்மா எவரிக்கைன அம்மா’ (1979), ‘ராம் ராபர்ட் ரஹீம்’ (1980), ‘மாயதாரி கிருஷ்ணடு’ (1980), ‘காளி’ (1980), ‘ஏதே நாசவல்’ (1984), ‘ஜீவன போராட்டம்’ (1986), ‘பெத்தராயிடு’ (1995) போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும்,

‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ (1979), ‘கர்ஜனம்’ (1981) போன்ற மலையாள மொழித் திரைப்படங்களிலும், ‘அந்தா கானூன்’ (1983), ‘ஜீத் ஹமாரி(1983), மேரி அதாலத்(1984), கங்குவா(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984), மஹா குரு’ (1985), ‘வஃபாதர்’ (1985), ‘பேவஃபாய்’ (1985), ‘பவான் தாதா’ (1986), ‘அசலி நகலி’ (1986), ‘தோஸ்தி துஸ்மன்’ (1986), ‘இன்சாப் கோன் கரேகா’ (1987), ‘உத்தர் தஷின்’ (1987), ‘தமாசா’ (1988), ‘பிரஸ்டார்ச்சர்’ (1989), ‘சால்பாஸ்’ (1989), ‘ஹம்’ (1991), ‘ஃபரிஸ்தே’ (1991), ‘கூன் கா கர்ஜ்’ (1991), ‘பூல் பனே அங்காரே’ ‘(1991), ‘தியாகி’ (1992), ‘இன்சானியத் கே தேவதா’ (1993), ‘ஆதங்க் ஹீ ஆதங்க்’ (1995) போன்ற இந்தி மொழித் திரைப்படங்களிலும்,

‘பாக்கியதேவ்தா’ என்ற பெங்காலி மொழித் திரைப்படத்திலும் மற்றும் ‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


அரசியல் தொடர்பு

1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன் பிறகு, ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுப்பபட்டாலும், இன்றுவரை அவரிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.

ரஜினியின் இமயமலைப் பயணம்

ரஜினிகாந்த் அவர்கள், ஒவ்வொரு படம் முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’ எனக் கூறப்படுகிறது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்

தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனத்திலும் நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் மட்டுமே. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச் டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் வெளிபடுத்திய ஒவ்வொரு டயலாக்கும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

16 வயதினிலே திரைப்படத்தில், “இது எப்படி இருக்கு?”

“மூன்று முகம்” திரைப்படத்தில், “வத்திக்குச்சிக்கு இரண்டு பக்கம் உரசினாதான் தீ பிடிக்கும். ஆனா, இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்”

“முத்து” திரைப்படத்தில், “எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்.”

  அண்ணாமலை திரைப்படத்தில், “கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது, கஷ்டபடாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” மற்றும் “சொல்றதை தான் செய்வேன், செய்றதைதான்  சொல்லுவேன்”

“பாட்ஷா” திரைப்படத்தில் “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”

“பாபா” திரைப்படத்தில் “நா லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்” மற்றும் “அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டைல், அசராம அடிக்கிறது என் ஸ்டைல்”

“படையப்பா” திரைப்படத்தில், “என் வழி தனி வழி” மற்றும் “அதிகமா கோபப்படற பொம்பளையும், அதிகமா ஆசப்படற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல”

“சிவாஜி” திரைப்படத்தில், “பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல” மற்றும் “பண்ணிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கலாதான் வரும்”


 குடும்ப வாழ்க்கை

“தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். சென்னையிலுள்ள “எத்திராஜ் கல்லூரியில்” படித்துக் கொண்டிருந்தபொழுது, ரஜினியை பேட்டி எடுக்க லதா அவர்கள் சென்றிருந்தார். அந்த பேட்டியின்போதே “தன்னை மணக்க விருப்பமா?” என்று ரஜினிகாந்த் கேட்க, “வெட்கத்தோடு பெற்றோரிடம் கேளுங்கள்!” என்று லதா சொல்லிவிட்டார். பிறகு, ஒய்.ஜி மகேந்திரனின் உதவியுடன் (லதாவின் சகோதரி சுதாவை இவர் மணந்துள்ளார்) லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவருக்கு ஐசுவர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.

விருதுகள்

1978 ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “தமிழக அரசு திரைப்பட விருது” வழங்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக “தேவர் விருது” வழங்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்காக “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி விருது” வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு “அண்ணாமலை” திரைப்படத்திற்காக “அம்பிகா விருது” வழங்கப்பட்டது.

“16 வயதினிலே” மற்றும் “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “அரிமா சங்கம் விருது” வழங்கப்பட்டது.

“நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீ ராகவேந்தரா”, “பிளட் ஸ்டோன்”, “தளபதி”, “அண்ணாமலை”, “வள்ளி”, “பாட்ஷா”, “முத்து” போன்ற திரைப்படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.

“முள்ளும் மலரும்”, “மூன்று முகம்”, “முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி”, “சிவாஜி” போன்ற திரைப்படத்திற்காக ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ வழங்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.

தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள், திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார்.

தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.

 
நண்பேன்டா