Tuesday 25 February 2014

விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!


விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!



பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.

அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.

அதாவது, ஒரு வேலையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.

மூளை வேறுபாட்டினால் உள்ள சில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.

வெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.

ஆபரேஷனுக்கு முன் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் - இந்திய டாக்டர் சாதனை..!

ஆபரேஷனுக்கு முன் ஒரு வாரம் உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு இந்திய டாக்டர் சாதனை:-


உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாத்து வைக்க உதவும் புதிய ரசாயன திரவம் ஒன்றை இந்திய டாக்டர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே. இப்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார்.

தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டு கால முயற்சியின் பலனாக தற்போது சோமா என்ற புதிய ரசாயன கலவையை டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ளார்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. தானமாக பெறப்படும் உறுப்புகளை சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தி விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். விபத்துகளில் உயிரிழந்தோர், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றனர்.

அந்த உறுப்புகளை சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு பொருத்த முடிவதில்லை. இதனால் உறுப்புகள் தானமாக கிடைத்துள்ள நோயாளிகளுக்கு பலன் இல்லாமல் போய் விடுகிறது. இந்த பிரச்னைக்கு டாக்டர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ள புதிய ரசாயன கலவை தீர்வாக அமைந்துள்ளது.

தானமாக பெறப்படும் உறுப்புகளை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சோமா ரசாயன கலவையில் பாதுகாத்து வைக்க முடியும். தற்போது இருதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் புதிய கண்டுபிடிப்பான சோமா என்ற திரவத்தில் வைத்து பாதுகாக்கலாம். உறுப்புகளை தானமாக பெற்றவுடன் நோயாளிக்கு பொருத்த வேண்டிய நிர்பந்தம் இருக்காது. இந்த புதிய ரசாயனம் ஒரு வாரம் வரை உறுப்புகளை பாதிப்பில்லாமல், திசுக்கள் அழியாமல் அதே நிலையில் வைக்கும். சாதாரண வெப்ப நிலையிலேயே இந்த ரசாயனத்தில் உறுப்புகளை போட்டு வைக்கலாம்.

இதுகுறித்து டாக்டர் ஹேமந்த் கூறுகையில், கடந்த 20 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக 21 ரசாயன கலவைகளை உள்ளடக்கிய புதிய சோமா என்ற திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளை சாவு அடைந்த ஒருவரது உறுப்புகளில் இருதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 முதல் 6 மணி நேரத்துக்குள், சிறுநீரகத்தை 24 மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அது முடியாத பட்சத்தில் உறுப்புகள் பயனற்றதாகி விடுகின்றன.

இந்த பிரச்னையை தீர்க்க புதிய ரசாயன கலவை பயன்படும். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து நீண்ட தூரம் எடுத்து சென்று உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்துவது எளிது. பன்றிகளின் உறுப்புகளை புதிய சோமா திரவத்தில் வைத்து பரிசோதித்ததில் வெற்றி கிட்டியுள்ளது. இது விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளது.

இவ்வாறு டாக்டர் ஹேமந்த் கூறியுள்ளார்.

இவருடைய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொஸில்லா`வின் (Mozilla) அசுர வளர்ச்சி...!



இன்று இணையம் பயன்படுத்தும் நம் அனைவரும் அறிந்தது தான் மொஸில்லாவின் வளர்ச்சி பற்றி.

இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய பயனாளர்களைப் பெறுதல் என மொஸில்லாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை, யாரும் மறுக்க முடியாது.

மொஸில்லாவின் வளர்ச்சியைக் கீழே தரப்பட்டுள்ள அதன் வரலாற்றுச் சாதனைகள், உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

1998 ஆம் ஆண்டு மார்ச் 31ல் மொஸில்லா திட்டம் உருவானது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் புதுமையையும், அவர்கள் விரும்புவதனையும் தரவேண்டும் என்பதனை இலக்குகளாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது.

இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்த திட்டம், இணையப் பயனாளர்கள் கைகளில், விருப்பப்பட்டவற்றைத் தருவதற்காக, பயர்பாக்ஸ் பிரவுசரை உருவாக்கியது.


2004 ஆம் ஆண்டில், பயர்பாக்ஸ் பதிப்பு 1 வெளியானபோது, நியூ யார்க் டைம்ஸ் இதழில் அறிவிக்கப்பட்ட ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்த, 10 ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியைக் கொடுத்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்.

இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், நிதி உதவி செய்து வருகின்றனர். அன்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் தொகுப்புகள், இணைய அனுபவத்தினை, அவரவர் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள இடம் அளித்து வருகின்றன. இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இணையத்தில் உலா வருபவர்களின் தனி நபர் தகவல்களை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதை, பயர்பாக்ஸ் பிரவுசர் தான் முதலில் எடுத்துச் சென்றது. இந்த வகையில் பிரைவேட் பிரவுசிங் போன்ற வழிகளைப் பயனாளர்களுக்குத் தந்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களின் தனி நபர் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

உலகளாவிய அளவில், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் ஒரு சமுதாயமாக இணைக்கும் பணியினை மொஸில்லா மேற்கொண்டுள்ளது. இவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசரை உலகின் 89 மொழிகளில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். இதன் மூலம், உலகின் ஜனத்தொகையில் 95 சதவீதம் பேர் தங்கள் மொழிகளில், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்த முடிகிறது.

2008 ஆம் ஆண்டில், 80,02,530 பேர் ஒரே நாளில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் மேற்கொண்டது.

மொஸில்லா திருவிழா என ஆண்டு தோறும் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான இணைய வல்லுநர்கள் இதில் இணைந்து தங்கள் திறமையின் நிகழ்வுகளை மொஸில்லாவிற்கு அளிக்கின்றனர். இதன் மூலம், இணையத்தின் முழுத் திறனை மக்கள் அனுபவிக்க முடிகிறது.

மொஸில்லா வெப் மேக்கர் (Mozilla Webmaker) மூலம், இணையம் கற்ற ஓர் உலகத்தை அமைக்க முடிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இணையத்தை வடிவமைக்கத் தேவையான சாதனங்களை, சாப்ட்வேர் தொகுப்புகளாக அளிக்கிறது.

இதே போல Mozilla WebFWD program என்பது, ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று வகையிலான புரோகிராமர்கள் மற்றும் புதியன கண்டுபிடிப்பாளர்களைப் புதியனவற்றை வடிவமைத்துத் தர உற்சாகப்படுத்தும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் இணைய பயன்பாடு இன்னும் மேன்மையடைகிறது.

Mozilla Developer Network என்பது மொஸில்லா சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களால் அமைக்கப்பட்ட ஒரு இணைய வெளி சமுதாயம். இச்சமுதாய உறுப்பினர்கள், மிகச் சிறந்த இணையச் செயல்பாட்டு விளக்கங்கள், சாதனங்கள் மற்றும் உரைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இவை ஏறத்தாழ 20 லட்சம் வாடிக்கையாளர்களை அடைகின்றன.

இந்த 2013 ஆம் ஆண்டில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் சிறப்புகளை முழுமையாக அடையலாம்.

இதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை நாடும் மக்களுக்கு, அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தனிப்பட்ட முறையில் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என மொஸில்லா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மொஸில்லாவின் இந்தப் பணி ஒரு சமுதாயப் பணியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கானவர் செய்திடும் நிதி உதவியும், தன்னார்வ வல்லுநர்கள் வழங்கிடும் தொழில் நுட்ப உதவியும் இதனை ஈடேற்ற உதவுகின்றன.

இணையம் என்பது எல்லாருக்கும் எந்த நேரமும் பயன்படுத்தும் ஒரு வெளியாக இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா! உடனே மொஸில்லாவின் இணைய சமுதாயத்தில் இணையுங்கள்.
 
நண்பேன்டா