Friday 28 February 2014

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா..? - வாங்க தெரிஞ்சிக்கலாம்..!



உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது.

செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

இதையடுத்து இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேராசியர் தெரிவித்துள்ளார்..

பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் புது வகையான ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அவர் ”ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.

அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம். நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனைக்கு, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியும்:. என்று மைகா தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!


இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

 இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!



இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்..! - உங்களுக்காக...



கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:

எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:

டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

3. திரைக் காட்சி அதிர்கிறது:

மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:

கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

5. Non System Disk Error:

சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

6. Missing Operating System:

சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

7. Missing Command Interpretor:

Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

8. IO Error:

சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:

சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:

சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:

CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

12. Hard Disk Not Detected:

பவர் கனெக்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:

ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

14. MMX/DLL FILE MISSING:

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைகள்..!



ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும்.

ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம்.

அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு. ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம்.

• வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள். அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள்.

• வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும்.

அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

• பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

• குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம்.

• அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும். அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம்.

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்ய வேண்டுமா...?




இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.


1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது.

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.


2. மால்வேர் தான் என் உறுதி செய்திடும் வழிகள்: 

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும்.

அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.


3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்: 

வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.


4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை: 

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக: 

சேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும்.

அப்போது, கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன், அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும்.

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில், மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால், சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 பின்னர், பிட் டிபண்டர்
 (Bitdefender http://www.bitdefender.com/scanner/online/free.html) போன்ற,நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும்.

மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் (http://www.eset.com/us/onlinescanner) பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது.

ஸ்கேன் தொடங்கும் முன்னர், பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும்.

இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே செயல்படும் புரோகிராம் அல்ல. இதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து, ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம்.

இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன், Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும்.


7. இன்னொரு ஸ்கேனிங்: 

முதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை.


8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்: 

கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும்.

அடுத்து, அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம்.

எதனைப் பதிவு செய்தாலும், தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன், தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால், அனைத்திற்கும் தீர்வு உண்டு.

உலகம் முழுக்க இலவச இன்டர்நெட் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்..!



தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்போது இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இன்றைய உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் மார்க் பேசுகையில்,”அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரல் சாப்பிடலாமா..? கூடாதா..?

ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.
 

ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.


அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.


எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.



எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா..?



எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள்.

* வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாகக் எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாறுடன் பாற் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!



1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

*மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

விண்டோஸ் 7ல் கிராஷை தவிர்க்க...!



இன்று பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், இமெஜ் கிரியேட்டிங் டூல் என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

 Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.

இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது. நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும்.

எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.

பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும்.

பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

 இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது. இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

திருபாய் அம்பானி - உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை..!



‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார்.

 ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 28, 1932

பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

இறப்பு: ஜூலை 06, 2002

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

வெற்றிப் பயணம்

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இறப்பு

மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.

1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.

2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.

இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.

2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில்,

‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.

உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Thursday 27 February 2014

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்..!



குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதிலும் அவர்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமானது. ஆகவே குழந்தைகள் நம் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை மிரட்டுவதோ, அடிப்பதோ அல்லது அவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்தால் மட்டும் குழந்தைகளை நம் வழிக்கு கொண்டு வர முடியாது.

child and parentsமாறாக, இதனால் குழந்தைகளின் மனதில் கெட்ட அபிப்பிராயத்தைத் தான் பெற முடியும். பின் பிற்காலத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.

ஆனால் குழந்தைகளிடம் பொறுமையாகவும், அன்பாகவும், அவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் நிச்சயம் காதைக் கொடுத்து கேட்டு புரிந்து கொண்டு நடப்பார்கள். மேலும் இதனால், குழந்தைகள் தங்கள் பெற்றோரை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பதோடு, அவர்களுக்கு நெருங்கிய நண்பனாகவும் ஆக முடியும்.

ஏனெனல் அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும். அதுமட்டுமின்றி, எப்பேற்பட்ட குணமுடையவரையும் பணிய வைக்க முடியும். இங்கு குழந்தைகள் பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்டு நடக்க வேண்டுமானால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி, உங்கள் குழந்தைக்கு பிடித்த பெற்றோராக இருங்கள்.

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கும் போது, அவர்களிடம் சத்தமாகவோ, மிரட்டும் படியாகவோ சொல்லக் கூடாது. இதனால் குழந்தைகளின் மனம் தான் அதிகமாக கஷ்டப்படும். ஆகவே பொறுமையை கையாண்டு, மென்மையாக சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் வெளிப்படையாக பேசினால், அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பதோடு, அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒருவேளை அவர்களிடம் அப்படி இல்லாவிட்டால், அவர்கள் உங்களிடம் எதையும் பகிராமல், அவர்களுக்கு தோன்றுவதே சரி என்று செய்ய ஆரம்பிப்பார்கள்.

எப்போதுமே உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம். இது அவர்களது மனதில் பெரிய வடுவாய் அமைந்து, அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். மேலும் இவ்வுலகில் அனைத்து குழந்தைகளுமே ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு எந்த ஒரு கட்டளை இடுவதாக இருந்தாலும், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மென்மையான முறையில் சொல்ல வேண்டும். அதை விட்டு, பாடம் எடுப்பது போல் எதை எதையோ சொன்னால், அவர்களுக்கு கடுப்பு வந்து, பின் உங்கள் வார்த்தையை மதிக்கக்கூட மாட்டார்கள்.

குழந்தைகளிடம் பழகும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு யோசித்து, அவர்களைப் போலவே சிந்தித்து, அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும். இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

குழந்தைகள் விருப்பப்பட்ட எதற்கும் வேண்டாம் என்று சொல்லாமல், சரி என்ற சொல்லிப் பாருங்கள். இதன் மூலம் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் வார்த்தையை மதிப்பதோடு, நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் புரிந்து கொண்டு, எந்த ஒரு தவறான பாதைக்கும் செல்லமாட்டார்கள். இப்படி சிறு வயதிலிருந்தே நடந்து கொண்டால், பிற்காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.

குழந்தைகள் ஏதேனும் ஒரு பெரிய தவறு செய்துவிட்டால், அந்த தவறைப் பற்றி எப்போதும் பேசாமல், அவர்களிடம் கூலாக இனிமேல் அந்த தவறை செய்யாதே, அதை மறந்துவிடு என்று மன்னிக்கும் குணத்துடன் பேசிப் பாருங்கள். பின் உங்கள் குழந்தைகள் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து, உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள் என்று புரியும்.

தற்போதுள்ள குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதற்கும் காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள். எனவே அவர்களை ஒரு விஷயம் செய்யதே என்று சொல்வதாக இருந்தால், அந்த விஷயத்தை செய்வதால் ஏற்படும் தீமைகளை விரிவாக சொல்லுங்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனை செய்யவேமாட்டார்கள்.

உங்கள் குழந்தை ஏதேனும் சிறு விஷயத்தை வெற்றிகரமாக முடித்தாலும், மிகுந்த சந்தோஷப்பட்டு அவர்களை வாழ்த்த மறக்க வேண்டாம். இப்படி வாழ்த்துவதன் மூலம், அவர்களுக்கு உங்கள் அன்பு வெளிப்பட்டு, உங்கள் மீது பிரியம் அதிகரித்து, உங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கும் நம் மூளைக்கு எட்டாத ஒருசில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆகவே அவர்களது பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து கேட்டால், அவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள்.

சிவனுக்கு உகந்த 5 வகை சிறப்பு வாய்ந்த சிவராத்திரி..!



சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்துவகை சிவராத்திரிகளில் மாசிமாதம் வரும் மகாசிவராத்திரிதான் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்

தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவதே மகாசிவராத்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி.

இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பௌர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது எப்படி..?



தனக்கே சொந்தம் என்ற எண்ணமுடைய, பொஸசிவ் குணமுடைய கணவனை நீங்கள் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அவரை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையே. பொதுவாக கணவன் மனைவி இடையே பொஸசிவ் குணம் நிலவுவது சகஜமே. ஆனால் அந்த உணர்வே அதிகமாக இருந்தால் அது அவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு பெரிய சுமையை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த உறவுக்குள் விரிசலை உண்டாக்கிவிடும்.

இவ்வகை சூழ்நிலைகள் வரும் போது அதை கையாளுவது கடினமாக மாறிவிடும். அதற்கு காரணம் எதிர்ப்பு நடவடிக்கை நாளடைவில் மன நோயாக மாறிவிடும். அதன் பின் அதை கட்டுப்படுத்துவது என்பது கையை மீறி போய்விடும். அதனால் ஆரம்ப நிலையிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட கூடாது. ஆழமான காதல் அல்லது தன் கணவன் அல்லது மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் போன்றவைகள் தான் அளவுக்கு அதிகமான பொஸசிவ் குணத்திற்கு காரணமாக விளங்குகிறது. சில நேரம் இந்த குணம் அந்த நபரின் இயற்கை குணமாக கூட இருக்கலாம்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது சிரமம் தான். அதற்கு காரணம் தான் அப்படி இருக்கிறோம் என்பதை அவர் உணர்வதில்லை. அவர் உங்களை பாதுகாக்கிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார். அதனால் அவரை கையாள போதுமான முயற்சியும் பொறுமையும் தேவைப்படும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள தொழில் ரீதியான திருமண ஆலோசனையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை சமாளிக்க விவாகரத்தை நாடலாம். விவாகரத்து என்பது நொடிப்பொழுதில் நடந்தேறி விடும். ஆனால் அது அவ்வளவு எளிதில் எடுக்க கூடிய தேர்வாக இருக்காது. அதற்கு காரணம் ஒரு உறவை வளர்க்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாதல்லவா? உங்கள் கணவனின் நிலையை சரியாக கையாண்டால் நல்ல பயனை பெறலாம். அதற்காக திறம்பட செயலாற்றும் சில டிப்ஸ்கள் இருக்கிறது. அவைகளை பற்றி பார்க்கலாமா?

உங்களால் எவ்வளவு தூரம் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற அளவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருமே ஒரு அளவுக்கு பொஸசிவாக இருக்கத் தான் செய்வார்கள். நீங்கள் உங்கள் கணவனுடைய பொஸசிவ் குணத்தை ரசித்தீர்களானால் உங்கள் இருவருக்குமான காதல் வலுவாக உள்ளது என்று அர்த்தமாகும். அவருடைய பொஸசிவ் குணம் நடுத்தரமானதாக இருந்தால் அதனை பொறுத்துக் கொள்ளலாம்.

அவருடைய பொஸசிவ் குணத்தால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள். இந்த உரையாடலை ஆரம்ப நிலையிலேயே ஏற்படுத்துங்கள். அதனால் நிலைமை கையை விட்டு போவதற்கு முன் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பொஸசிவான கணவனை சமாளிக்க மனம் விட்டு பேசுவது ஒரு சிறந்த வழியாகும்.

உங்கள் கணவன் இவ்வளவு சுயநலமாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய தொழில் ரீதியான கவுன்சிலிங் செல்வது முக்கியமாக கருதப்படுகிறது. முன்னாட்களிலோ அல்லது இந்நாளில் நிகழ்ந்த ஏதாவது மோசமான அனுபவத்தால் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம். தொழில் ரீதியான முறையில் இதை கையாண்டால் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள உங்கள் சுதந்திரத்துக்காக அவரிடம் நீங்கள் கலந்துரையாடுங்கள். உங்கள் கணவரின் பொஸசிவ் குணத்தை பற்றி அவரிடம் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை அமைதியான மனநிலையில் அவரிடம் வெளிப்படுத்துங்கள்.

உங்கள் உறவில் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கணவனிடம் வெளிப்படையாக பேசி விட வேண்டும். திருமணமான அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை இது. இது உங்கள் உறவில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து விடும். பொஸசிவ் குணமுடைய உங்கள் கணவனையும் சுலபமாக கையாளலாம்.

எந்த ஒரு நல்ல உறவுக்கும் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அறிவுரை உண்டு – உங்கள் துணையிடம் மனம் விட்டு நன்றாக பேசுங்கள். சரிவர பேசினாலே பல சந்தேகங்களும் பாதுகாப்பின்மை உணர்வுகளும் விலகி விடும்.

உங்கள் கணவன் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் பாராட்டுங்கள். இது அவருடைய பாதுகாப்பின்மை உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் குறைக்கும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

அதிகமாக பொஸசிவ் குணமுடைய கணவனை சமாளிப்பதற்குள் உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடலாம். ஆனால் மனம் தளராமல், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி அவரிடம் அமைதியாக பேசுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். சூடான வாக்குவாதங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். அமைதியாக இருந்து அன்பான முறையில் அவருக்கு புரிய வையுங்கள்.

எல்லா காயங்களும் காலப்போக்கில் ஆறும். அதனால் உங்கள் உறவு உறுதியாக கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இதனால் உங்கள் கணவனுக்கு யோசிக்க நேரம் கிடைக்கும். அதனால் உங்கள் உறவு மேம்பட அவர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழி

எப்போதும் சிரித்த முகத்துடன் கணவனை ஊக்குவிக்க வேண்டும் – இது திருமணமான அனைத்து பெண்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான அறிவுரையாகும். மறப்பதும் மன்னிப்பதும் மன ரீதியாக ஒரு சிறந்த ஆற்றலாகும். உங்கள் உறவு நீண்ட காலம் நீடித்து உறுதியாக இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

அம்பானியின் - கனவு இல்லம் 4700 கோடி…போன மாதம் கரண்ட் பில் 71 லட்சம்…!



முகேஷ் அம்பானியின் கனவு இல்லம் வேலை எல்லாம் முடிந்து விட்டது….

1. 4 லட்சம் சதுர அடிகள்…

2. 27 மாடிகள்…

3. 9 லிப்ட்..

4. 1 திரை அரங்கு…

5. 1 ஜிம்…

6. 1 பார்க்..

7. 168 கார் பார்கிங்

8. 600 அறைகள்…

9. 600 வேலை ஆட்கள்…

10. உலகின் பெரிய ஒரு குடும்பத்து ஆட்களின் வீடு முகேஷ் அம்பானி வீடுதான்…

11. மொத்தம் செலவு 4700 கோடி…

போன மாதம்தான் அங்கு குடி பெயர்ந்துள்ளனர்…போன மாதம் கரண்ட் பில் 71 லட்சம்… வாழ்க இந்தியா வீழ்ந்து கொண்டே போகிறது ஏழை மக்கள்…

+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அசிஸ்டென்ட் பணி வாய்ப்பு..!



இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8243

பணி:

01. Postal Assistant

02. Sorting Assistant

வயதுவரம்பு: 27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் மேலும் உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு .400. SC/ST/PH மற்றும்/ பெண்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.pasadrexam2014.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2014

மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.pasadrexam2014.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

படித்ததில் பிடித்தது... - கேளுங்க சொல்கிறோம்..!



* கணவன், மனைவி ஒற்றுமை சிறக்க எந்த விரதம் மேற்கொள்ளலாம்?

தம்பதியர் ஒற்றுமையில் முக்கிய இடம் வகிப்பதே வீட்டின் ஆட்சியைப் பொறுத்து தான். மதுரை மீனாள் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள். உங்கள் வீட்டில் அம்மன் ஆட்சியா? சிதம்பரம் என்றால் ஆண் ஆதிக்கம், மதுரை என்றால் பெண் ஆதிக்கம் என்று விளையாட்டாகச் சொல்வது வழக்கம். ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் மறைந்து,

 எந்த விஷயமாக இருந்தாலும், இருவரும் பரஸ்பரம் பேசி முடிவெடுத்தால் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இது தான் முதல் விரதம். மற்றபடி, திங்களன்று விரதம் இருந்து சிவன் கோயிலில் சோமாஸ்கந்தரை வழிபடுவதும், சனியன்று விரதமிருந்து லட்சுமி நாராயணரை வழிபடுவதும் தம்பதி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

* அர்ச்சகர் அளித்த விபூதியை பூசிக் கொண்ட பின், மீதியை கோயில் தூணில் வைப்பது சரிதானா?

கூடாது. பூசிக் கொண்டது போக, மீதி விபூதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருப்பவர்களுக்கு கொடுப்பது அல்லது வீட்டில் வீபூதிக் கிண்ணத்தில் சேமிப்பது தான் சரியானது. தூணில் போடுவதால் கோயிலின் தூய்மையும், அழகும் பாதிக்கப்படுகின்றன. இதை சரிப்படுத்தவே, நிர்வாகமும் கோயிலில் ஆங்காங்கே கிண்ணம் வைத்து மீதியை போட்டு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதையும் மீறி தூணில் இட்டுச் செல்வது சரியல்ல. இனியாவது மாற்றுங்கள்.

*திருமணச் சடங்கில் மணமக்கள் அக்னியை வலம் வந்து வணங்குவது ஏன்?

திருமணச் சடங்கிற்கான தெய்வத்தை அக்னி வளர்த்து அதில் வேள்வி நடத்தி வழிபடுகிறோம். அக்னியும், அந்த தெய்வமும் சாட்சியாக இருந்து திருமணத்தை நடத்திக் கொடுப்பதாக ஐதீகம். மணமக்கள் அவர்களை வலம் வந்து வணங்கும் போது,

அவர்களின் ஆசியால் வாழ்வு நலமாக அமையும்.

** அவசரமாக கிளம்பும்போது ராகுகாலமாக இருந்தால், என்ன பரிகாரம் செய்யலாம்?

பயப்படத் தேவையில்லை. வீட்டிலோ அல்லது வழியில் ஏதாவது ஒரு கோயிலிலோ அம்பாளை தரிசித்து விட்டுச் செல்லுங்கள். தெய்வநம்பிக்கையுடன் மனதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ராகுகாலமும் நல்லகாலமாகவே அமையும். ஞான
சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தை தினமும் படித்தால், எந்நாளும் எப்போதும் கிளம்பலாம்.

*இரட்டையாக ஒட்டிய வாழைப்பழத்தை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாதா?

இரட்டை வாழைப்பழம் மட்டுமல்ல... வெடித்து முளைவிட்ட தேங்காய், சுருங்கிய வெற்றிலை, மொட்டு பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.

பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள் - அதிரச்சி தகவல்கள்..!



எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.

இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை.

ஆயுர்வேதம்/ஹோமி யோ/சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது....

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது.

தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்.

சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு நோய்:

இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்தத் தைராகசின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல்.

மருத்துவமுறை:

தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுககு ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதிக தைராக்சின் உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தைராய்டு கட்டிகள்:

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை காய்டர் என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது. இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி:

இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக நடுத்தர வயது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸ“ஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும்.

கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள். .சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

இன்னும் விளக்கமாக அறிகுறிகள்:

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்:

• உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
• உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
• குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
• அதிகமான உடல் சோர்வு, களைப்பு
• முறையற்ற மாதவிலக்கு
• குறைவான வியர்வை
• அதிமான தூக்கம், சோர்வு
• மலச்சிக்கல்
• மன அழுத்தம்
• அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி
• அதிகமான குளிர் உணர்தல்
• அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
• நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்
• இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்


தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்:

1. உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)

2. அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்

3. அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு

4. கை, கால், நடுக்கம், பதட்டம்

5. மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு

6. மிக அதிகமான வியர்வை

7. தூக்கமின்மை

8. அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை

9. பய உணர்வு, கோப உணர்ச்சி

10. அதிகமாக முடி கொட்டுதல்

11. அதிகமான உஷ்ணம் உணர்தல்

12. உடல் சதை பலஹீனம்

14. இரத்தத்தில் T3 அளவு

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும்.

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது


குறை தைராய்டு கோளாறுகளால் சோம்பேறித்தனம், அசதி, அதிக தூக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாத விலக்குத் தொந்தரவுகள் தொல்லை தரும். பொதுவாக உடல் எடை கூடிக் கொண்டே போகும். "காய்ட்டர்'' என்கிற தைராய்டு வீக்கம் கழுத்தில் ஏற்படும், கை, கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் தோன்றும். கருத்தரிப்பதில் கூட தடை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். முடி கொட்டிப் போகும் அபாயம் உண்டு. ஆனால் மிகை தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டவர் எப்பொழுதும் டென்ஷனாகப் படபடப்புடன் இருப்பார்கள். கண் முழிகள் பிதுங்கி வெளியே தெரியலாம். மாத விலக்குத் தொந்தரவுகள் ஏற்படலாம். குடும்ப உறவில் நிறைய சிக்கல்கள் ஏற்படலாம். அதனால் விவாகரத்து வரைப் போக நேரிடுகிறது.

இதில் தொண்டை வலி வர அதிக வாய்ப்பில்லை. தைராய்டு சுரப்பி பெரிதாகி பலூன் மாதிரி உணவு குழாயைத் தடுக்கும் போது தொண்டை வலி ஏற்படலாம். குழந்தைகளையும் இது தாக்குகிறது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து வயதுக்கேற்ப அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும். தைராய்டு நோய்க்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பாக்டீரியாக் வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்நோய் இருந்தால் அதுவும் நம்மை தொடர்ந்து தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வது போல இதையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது நல்லது. இளம் வயதில் கழுத்தில் புற்று நோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். நம் உணவில் அயோடின் குறைவை ஒரு காரணமாகக் சொல்லலாம்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

சிகிச்சை:

"ஐசோடோப்'' எனப்படும் அணுவியல் சிகிச்சை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறையில் நோய்களைக் கண்டு பிடித்து குணமாக்க முடியும். கதிர் இயக்கத் தன்மையுடைய இம் மருந்தை வாய் வழியாகச் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றன

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம்.

மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது. அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும்.


உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்..

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.

அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


தைராய்டு பிரச்சனையால் மலட்டுத் தன்மை ஏற்படுமா? 

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ, மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள் : 

முப்பத்தாறு நாட்கள் இடைவெளியில் மாதவிலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாதவிலக்காகி, குறைந்த உதிரப்போக்கும், அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது. இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு, முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்ரு இருக்கும். இத்தகைய பிரச்சனையால் முட்டை வெளியிடப்படாத குறைபாடுள்ளவர்கள் உணவு முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும் முட்டை வெளிப்படுவது தடைபடும். நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது. மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலையிருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும். முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆயுர்வேதத்தில் தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு

தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மந்தாரை- தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு. காஞ்சனாரம் என்று அழைக்கபடும் மந்தாரை-தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வாக பயன் படுகிறது. ஆயுர்வேத மருந்தகளில் -காஞ்சனார குக்கலு எனப்படும் மருந்தை ஆயுர்வேத டாக்டர்கள் தைராய்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மருந்துகளில் -தைராக்சின் ,எல்டிராக்சின்,தைரோ நார்ம்,நியோ மர்கசோல் போன்ற மருந்துகளை தருவார்கள்.இது ஒரு குறைபாட்டிற்கான சப்லீமேண்டே தவிர நிவாரணம் இல்லை-ஆனால் நாங்கள் ஆயுர்வேதத்தில் தைராய்டு சுரப்பியை வேலை செய்ய வைக்கிறார்கள்.ஆங்கில மருந்துகளில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாபிடவேண்டும். அனால் குறிப்பட்ட காலம் ஆயுர்வேத மருந்துகளை சாபிட்டாலே முழுவதும் குணபடுதிவிடமுடியம்.

ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்

ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், வர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.

தைராய்டு பிரச்சினைக்கு யோகாசனம் 

''நான் நோய்க்கு இரையாகித் துன்பம் அனுபவிக்கப் பிறக்கவில்லை. ஆரோக்கியமாக இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கவே பிறந்தேன். அதற்கு உடல் நலம் அவசியம். ஆகையால் எதை விட்டாலும் இனி யோகாவை விட மாட்டேன்'' என்று தினமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், யோகா செய்வதற்கான அவகாசம், நேரம், உற்சாகம் ஆகியவை தானாகவே கிடைக்கும். தூக்கம் சோம்பல் என்று எது தலை தூக்கினாலும் அதனை மனதின் பலத்தால் விரட்டி அடிக்க முடியும்! சோம்பல் என்று சொல்லும்போதே நினைவுக்கு வருவது தைராய்டு. இது சரியல்ல! நம் உடல், தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்தி செய்வதே தைராய்டு நோய்க்குக் காரணம். அயோடின் குறைபாட்டினால் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாகச் சுரக்கும். இது குறை தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. அதீத கவலை மற்றும் மன அழுத்தமும் தைராய்டு சுரப்பிகளைச் சரியாக வேலை செய்ய விடாமல் முடக்கிவிடும்.

சிகிச்சை:

தைராய்டு பிரச்னையை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஆசனங்களைத் தொடர்ந்து செய்ய நல்ல முன்னேற்றம் காணலாம். ஏற்கெனவே நோயாளிகள் செய்துகொள்ளும் மருத்துவச் சிகிச்சையுடன் யோகாவையும் சேர்த்து செய்தால் பலன் நிச்சயம். இந்த ஆசனம் செய்தால் தைராய்டு பிரச்னை குணமாகும் என்று முடிவாகச் சொல்லிவிட முடியாது. தொண்டையில் பிரச்னை என்பதால் தொண்டைக்கான ஆசனங்களைப் பரிந்துரைக்கிறோம். தைராய்டு பிரச்னை உள்ளவர்களின் உடல் எடை, வயது, உடலின் தன்மை ஆகியவற்றை வைத்து அவர்களால் எந்த அளவு ஆசனம் செய்ய முடியுமோ அதன்படி ஆசனங்களில் சிறிய மாற்றங்கள் செய்து அவர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்க வேண்டியதும் மிக மிக அவசியம். தைராய்டு நோயாளிகள் அபாசனம், விபரீதகரணி மற்றும் சர்வாங்காசனம் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த இதழில் சர்வாங்காசனம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.


சர்வாங்காசனம்

சர்வ அங்க ஆசனம் = சர்வாங்காசனம். பெயருக்கேற்ப உடலின் அனைத்து அங்கங்களையும் சீராக்கிடும் ஆசனம் இது.

1. தரையில் மல்லாந்து படுக்கவும்.

2. படுத்த நிலையிலேயே, மூச்சை வெளியிட்டு இரு கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றைச் சேர்த்துச் செங்குத்தாகத் தூக்கவும்.

3. கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்துக்கொள்ளவும். சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும். மேலிருக்கும் இரு கால் கட்டை விரல்களையும் பார்க்க வேண்டும்.
கீழ்த்தாடை பகுதி நெஞ்சை ஒட்டியிருக்க வேண்டும். கழுத்துப் பிடரி சரியாகத் தரை விரிப்பில் படிந்திருக்க வேண்டும். முதுகெலும்பு நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

4. இந்த நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். சுவாசம் நார்மலாக இருக்கட்டும்.

5. மூச்சை உள்ளிழுத்துக் கால்களை நிதானமாக இறக்கவும். முதுகெலும்பை இறக்கிப் படுத்த நிலைக்குத் திரும்பவும்.

ஆரம்ப நிலையில் இந்த ஆசனத்தை மூன்று நிமிடம் செய்தால் போதும். நாள் செல்லச் செல்ல நேரத்தை அதிகரிக்கலாம். தினசரி இந்த ஆசனத்தை ஒரு முறை செய்தால் போதும். அடுத்த ஆசனத்தைத் தொடங்கு முன் ஒரு நிமிடம் ஒய்வெடுக்க வேண்டும்.

பலன்கள்:


1. மூளைக்கு அதிக ரத்தம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

2. தைராய்டு சுரப்பியின் வியாதிகளில் இருந்து நிவாரணமளிக்கும். பிட்யூட்டரி சுரப்பியின்
வேலைத்திறனை மேம்படுத்தும்.

3. உடலை இளமையாக, வலிமையாக வனப்பாக வைக்க உதவும்.

4. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு இந்த ஆசனம் சிறந்தது.

5. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் இவற்றைப் போக்க உதவும். தோல் நோய்கள், டான்சில்ஸ் போன்றவற்றுக்கும் இந்த ஆசனம் நிவர்த்தி அளிக்கும்.
மேற்சொன்ன ஆசனத்தைச் செய்வதற்குக் கடினம். ஆனாலும் முறையான பயிற்சியால் செய்யலாம்.

தினமும் தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்யக் கண்கூடாக வித்யாசம் தெரியும். தைராய்ட் பிரச்னை குறைந்து வருவதை உணர முடியும்.

எச்சரிக்கை:

இந்த ஆசனங்களை நோயாளிகளின் வயது, என்ன வேலை பார்க்கிறார், அவரின் உடல் நிலை போன்றவற்றைப் பொறுத்து தான் யோக சிகிச்சை தர வேண்டும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தலைவலி இருப்பவர்கள் செய்யக் கூடாது. மேலும் சிலர் மனநிலை யையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோயாளிகள் மனதளவிலும் உடல் அளவிலும் கவுன்சிலிங் அளித்த பிறகே முறையாக சிகிச்சையை தொடங்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யும் முன்பு யோகா ஆசிரியரைக் கலந்தாலோசிப்பது அவசியம். ஆசனம் செய்யும்போது கண்களில், காதுகளில், தலையில், கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டால் ஆசனத்தை நிறுத்திவிட்டு யோகா ஆசிரியரிடம் செல்ல வேண்டும். செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. கண் வியாதி உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ட 2 மணி நேரம் கழித்துத்தான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்!

தைராய்டு நோய் உணவு குறிப்புகள்

அட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின் தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.

Wednesday 26 February 2014

கூகுளே பின்வாங்கிய சேவைகள் இவைதான்..!



தற்போது உலகின் மொத்த இணையத்தையே தனது பிடிக்குள் வைத்திருப்பது யார் என்றால் அது கூகுள் தான் இது நாமமறிந்ததே.

மேலும், கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்.

ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

 கூகுள் ரீடர்

சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர்.

சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை. Show Thumbnail ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐகூகுள்

இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது.

எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.

லேட்டிட்யூட்

 ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள்.

கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.

பில்டிங் மேக்கர்

 கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள்.

இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.

கிளவ்ட் கனெக்ட்

 இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.

பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ்

 ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது.

இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.

கூகுள் சிங்க்

இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது.

ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும்.

மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது

 
நண்பேன்டா