Tuesday 4 February 2014

’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை!




காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும்.

 அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும்.குறிப்பாக காதலர்கள் குறை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான்.

 எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார்.”என்று காதலர்களுக்கென ‘காதல் தர்மம்’ (லவ் தர்மா’) என்று அமைப்பின் தலைவர் ஷசாங்க் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை கூறி வருகின்றனர். அதேபோன்று காதலர்களும் தங்கள் குறைகளை தீர்க்க ‘காதலர்கள் ஆணையம்’ அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் காதலர்களுக்கென ‘காதல் தர்மம்’ (லவ் தர்மா’) என்று அமைப்பு இயங்கி வருகிறது. அதன் தலைவர் ஷசாங்க் ஆனந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,” தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், காதலர்கள் நலன் பாதுகாக்க, காதலர்கள் நல ஆணையம் அமைக்க வேண்டும்.

காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும்.

அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார் என நம்புகிறேன். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான். எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார்.

மேலும், ”விபசாரம் சட்டமயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் பெண்கள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் சுதந்திரத்துக்கும், துன்புறுத்தலில் இருந்து விடுபடவும் வசதியாக இருக்கும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை (5 ஆம் தேதி) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு கூடி வலியுறுத்த உள்ளோம். அதற்கு அவர் மறுத்தால், ஜந்தர் மந்தரில் திரண்டு தர்ணா போராட்டம் நடத்த காதலர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

புற்றுநோய் "கடல் அலை போல": உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!




கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பரவுவதால் ஏற்படும் மேலதிகச் செலவு வளர்ந்து வரும் நாடுகளினாலேயே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அது கூறுகிறது.

"அலை அலையாய்ப் பரவும் புற்று நோய்"

2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக:

*புகை பிடித்தல்

*கிருமித்தொற்று

*மது அருந்துதல்

*உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல்

*சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு

*காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள்

*தாய்மைப் பேறு தாமதமாவது, குழந்தைகள் அதிகம் பெறாமல் தவிர்ப்பது, தாய்ப்பால் தராமலிருப்பது

ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது.

பெரும்பாலான நாடுகளில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தோன்றுவதற்கு மிகப் பொதுவான காரணம். ஆனால், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில், பெண்களுக்கு அதிகம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயே அதிகம் காணப்படுகிறது.

புற்றுநோய்க்கும் மது அருந்துவதற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிக் கூறும், இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசியர் டாக்டர் பெர்னார்ட் ஸ்டூவர்ட், மனித நடத்தைதான் பல வகைப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்றார்.

மிக அதிகமாக உடலைப் பழுப்பாக்கிக்கொள்ள சூரியக் குளியலில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் புற்று நோய் தவிர்க்கப்பட முடியும் என்று அவர் கூறுகிறார்.

"மது தாராளமாகக் கிடைப்பதைக் கடினமாக்குவது, மது பாட்டில்களில் லேபல்கள் ஒட்டுவதில் கவனம் செலுத்துவது, மதுவை விற்பதில் உள்ள விளம்பர முறைகள் மற்றும் மதுவின் விலை போன்றவைகளைப் பற்றி நாம் விவாதிக்கவேண்டும்", என்றார் ஸ்டூவர்ட்.

அதேபோல விலைகளை உயர்த்துவது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது போன்ற கடுமையான வழிகள் மூலம் மது மற்றும் சர்க்கரை உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது

2ஜி ஊழல் : தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி..!



இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டி, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல்களைக் கொண்ட பதிவுகள் உட்பட பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், நீதிமன்ற விசாரணையின்போது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது தொடர்பாக சிபிஐ எழுப்பிய சர்ச்சைக்கு கலைஞர் தொலைகாட்சி தரப்பு மறுப்பு தெரிவித்தது.

அதோடு அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டது இல்லை என்றும், கடன் தொகையாக பெறப்பட்டது என்றும் கூறி அதற்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி ஏற்கனவே பிரசாந்த் பூஷனும் பொது நலன் மனுவை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், வாதிப் பிரதிவாதங்கள் முடிந்து குறுக்கு விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஒலிநாடா பதிவுகள் மூலம் வழக்கில் நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும் என பிரசாந்த் பூஷன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு இதன் மீதான விசாரணையை தொடங்க கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, வெளியிடப்பட்டுள்ள இந்த தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு நாடாக்களின் நம்பகத்தன்மை குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவை நீதிமன்றத்தில் தகுந்த முறையில் நிருபிக்கப்படும் எனவும் அவர் பதிலளித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழிக்கு எதிரான ஆதாரமாக சித்தரிக்கப்படும் விஷயங்கள் பொய் என்று கூறினார்.

ஐ போன்' வெடித்து மாணவி காயம்..!




ஐ போன்' வெடித்து மாணவி காயம்

அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார்.

அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த ‘ஐ போன்’ திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இதனால் மாணவி அலறியதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, உடையில் பிடித்த தீயை ஆசிரியர்கள் அணைத்தனர். இதில், மாணவியின் தொடை மற்றும் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

எனவே, அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கும் ப்ரீத்தி..!



காலம் கருணை காட்டியிருந்தால், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர முகமாகவும், தேசிய நீச்சல் சாம்பியனாகவும் நம்மிடையே அறிமுகமாகியிருக்க வேண்டியவர் இந்த ப்ரீத்திஸ்ரீனிவாசன்.ஆனால், இன்று முதுகெலும்பு செயலிழந்து போக, வாழ்க்கை, சக்கர நாற்காலியில் முடங்கிப் போக, தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதிசயப் பிறவி. தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட சக உயிர்களுடன், அன்பையும், ஆதரவையும் பகிர, ‘சோல்ஃப்ரீ’ என்கிற அமைப்பை நிறுவியிருக்கிறார்.www.soulfree.org / soulfree@soulfreeorg.com இன்னும் 2 வருடங்களில் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிற கனவுகளுடன் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணித் தலைவியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போதுதான் ப்ரீத்திக்கு அந்தத் துயரம் நடந்திருக்கிறது.

‘‘கிட்டத்தட்ட 17 வருஷங்கள் கடந்தாச்சு. இப்பவும் அந்த அதிர்ச்சியை என்னால மறக்க முடியலை. தண்ணிக்குள்ள விளையாடிட்டிருந்தேன். திடீர்னு கை, காலெல்லாம் மரத்துப் போன மாதிரி ஒரு உணர்வு. வெளியே வரணும்னு நினைச்சா முடியலை. தண்ணிக்கடியில போயிட்டேன். கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஒரு நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்துதான் என்னை வெளியே கொண்டு வந்தாங்க. ஏதோ கடிச்சிருக்கலாம்… ரெண்டு, மூணு நாள் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்னு காத்திருந்தோம்… ‘இது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண பிரச்னை இல்லை. தண்டுவட பாதிப்பு… உங்க பொண்ணு இனிமே எழுந்து நடக்கவே மாட்டா’ன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டாங்க டாக்டர்ஸ். அது வரைக்கும் கிரிக்கெட், ஸ்விம்மிங்னு துறுதுறுன்னு சுத்திக்கிட்டிருந்த ஒருத்தி, இப்படி திடீர்னு படுத்த படுக்கையா முடங்கிப் போனா, பெத்தவங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்? ஆனாலும், சோகத்தை வெளியில காட்டிக்காம, எங்கம்மாவும் அப்பாவும் எனக்கு பக்கபலமா இருந்தாங்க.

அப்பா எனக்காகவே வேலையை விட்டார். அவர் இறந்து போன பிறகு அம்மா, பாட்டி, ஃப்ரெண்ட்ஸ் உதவியோடதான் வாழ்ந்திட்டிருக்கேன். அம்மாவுக்கு 60 வயசு. பைபாஸ் ஆயிருக்கு. பாட்டிக்கு 84 வயசு. அவங்க ரெண்டு பேரும் இருக்கிற வரைக்கும் சரி… அப்புறம் எனக்கு ஏது போக்கிடம்? எனக்கும் என்னை மாதிரியே தண்டுவட பாதிப்பால அவதிப்படற லட்சக்கணக்கான மக்களுக்கும் ஆதரவு வேணும்… அதுக்கான தொடக்கம்தான் – சோல்ஃப்ரீ’’ என்கிற ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், இன்று மோட்டிவேஷனல் பேச்சாளர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ப்ரீத்தி, தனது ‘சோல்ஃப்ரீ’ அமைப்பின் மூலம், தண்டுவடம் பாதித்தோரை ஒருங்கிணைத்து, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி காட்டுகிற மாபெரும் சேவையைச் செய்யவிருக்கிறார்.‘‘தமிழ்நாட்ல இன்னும் பல இடங்கள்ல தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வு இல்லை. ஒரு பெண் வேலைக்குப் போயிட்டு களைப்பா வருவா. திடீர்னு உடம்புக்கு முடியலைன்னு மயங்கி விழுவா. அதுக்கப்புறம் அவளால எந்த வேலையும் செய்ய முடியாது. அவ இனிமே இருக்கிறதே பாரம், குடும்பத்துக்கே அசிங்கம்னு அவளை சித்ரவதை செய்து, தற்கொலை செய்துக்க தூண்டற அளவுக்கு அவளோட குடும்பத்தாரே கொடுமைகள் பண்றது நடந்துட்டுதான் இருக்கு. அவ முடங்கிக் கிடக்கற இடத்துல விஷத்தை வச்சிடுவாங்க. அதாவது, அவளே அதை சாப்பிட்டு செத்துடணுமாம். அதுக்குப் பேரு தற்கொலையா? கடலூர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண் இருக்காங்க. அவங்களுக்கு இதே பிரச்னை.

அவங்களுக்கு சிகிச்சை கொடுக்கவோ, பக்கத்துல இருந்து பார்த்துக்கவோ அவங்க குடும்பத்தார் தயாரா இல்லை. அவ அப்படியே சாகட்டும்னு சொல்றாங்க பெத்தவங்க. மாசக் கணக்கா படுக்கையில கிடக்கிற அந்தப் பெண், இன்னும் கொஞ்ச நாள்ல செத்துடுவா. இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரை வேணா என்னால அடையாளம் காட்ட முடியும். தண்டுவட பாதிப்போட தீவிரம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கை, கால்களை அசைக்க முடியாததுலேருந்து, வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறவங்க, இயற்கை உபாதை கூட போக முடியாதவங்கன்னு வேற வேற நிலை பாதிப்புகளோட இருக்காங்க.

ஆனாலும், இந்திய அரசாங்கம், இந்தப் பிரச்னையை ஒரு டிஸ்எபிலிட்டியா அங்கீகரிக்க மறுக்குது. இந்தியா முழுக்க எங்கே தேடினாலும், இந்த பாதிப்புக்கான நீண்ட நாள் பராமரிப்பும், சிகிச்சையும் கொடுக்கற பிரத்தியேக மருத்துவமனைகள் இல்லை. ஆனாலும், என்னை மாதிரி ஆட்கள், வாழ்க்கையோட போராடித்தானே ஆகணும். ‘சோல்ஃப்ரீ’ மூலமா முதல்ல என்னை மாதிரி ஆட்களை அடையாளம் கண்டுபிடிச்சு இணைக்கப் போறேன். எனக்கு இந்தப் பிரச்னை வந்த பிறகு நான் மேல்படிப்பைத் தொடர படாத வேதனை இல்லை. எந்த காலேஜ்லயும் எனக்கு இடம் தரலை. பார்வையில்லாதவங்களுக்குக் கூட இடம் தரத் தயாரா இருந்தாங்க. ஆனா, என்னை நிராகரிச்சாங்க.

பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் மெடிக்கல் சோஷியாலஜி முடிச்சேன். இது என்னோட தனிப்பட்ட பிரச்னையில்லை. பாதிக்கப்பட்டவங்களோட தீவிரத்தைப் பொறுத்து, அவங்க வாழ்க்கைக்கான ஒரு ஆதாரத்தை அடையாளம் காட்டப் போறேன். உதாரணத்துக்கு இவங்களுக்கு கை, கால் செயல்படலைன்னாலும், குரலை வச்சு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவோ, பிபிஓ வேலையிலயோ, ஆடியோ புத்தகங்களுக்கு குரல் கொடுக்கவோ செய்யலாம். அதுக்காகவே ஃபேஸ்புக்ல ‘த்ரோட்ஃபோர்ட்’னு ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கேன். தவிர தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வு பிரசாரத்தையும் பெரியளவுல கொண்டு போகப் போறேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வே கிடையாது. வராம தவிர்க்கிறது மட்டும்தான் ஒரே வழி.

இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவங்க பெண்களா இருந்தா, அவங்க நிலைமை இன்னும் மோசம். அவங்களுக்கு ரொம்பவும் கீழ்த்தரமான சிகிச்சைதான் கிடைக்குது. அதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கவும், ‘நீங்களும் நானும் தனியாள் இல்லை. நம்மகூட ஒரு பெரிய இயக்கமே இருக்கு’ன்னு சொல்லவும்தான் சோல்ஃப்ரீ…’’ உருக்கமாகப் பேசுகிற ப்ரீத்தி, உதவ நினைக்கிற உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.‘‘எனக்கு கட்டில்லேருந்து எழுந்து, வீல் சேருக்கு மாறவே அத்தனை சிரமமா இருக்கும். வாரத்துல ஒரு நாள் என்னைக் குளிக்க வைக்க எங்கம்மா படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். எத்தனையோ மாசம் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்கக்கூட முடியாம அடைஞ்சு கிடந்திருக்கேன்.

அன்போடவும் அக்கறையோடவும் யாராவது என்னை பக்கத்துல உள்ள ஒரு ஆசிரமத்துக்குக் கூட்டிட்டுப் போனாலே அன்னிக்கெல்லாம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். காசோ, பணமோ கொடுத்துதான் ஒருத்தருக்கு உதவ முடியும்னு இல்லையே… என்னை மாதிரி ஆளுங்களோட நேரம் செலவிடறது, எங்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களை நிறைவேத்தறது, எங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏத்த ஒரு வேலையைக் கொடுத்து ஊக்கப்படுத்தறதுன்னு அன்பைப் பகிர்ந்துக்க எத்தனையோ வழிகள் இருக்கு. தண்டுவட பாதிப்பு பத்தின விழிப்புணர்வை மக்கள் மத்தியில கொண்டு போகலாம்… இந்த பாதிப்புலேருந்து, வரப் போற தலைமுறையையாவது காப்பாத்தணும்னு நினைக்கிறேன்… உண்மையான அன்போட உதவ நினைக்கிற யாருக்கும் சோல்ஃப்ரீயோட கதவுகள் திறந்திருக்கு…’’ என்கிறார் தன்னலம் மறந்து.

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது..!



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானியும், பேராசிரியருமான சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் (40), ராவ் (79) ஆகியோரது சீரிய பணியை கௌரவிக்கும் வகையில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம், பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.பல்வேறு சாதனைகளைப் படைத்து பாரத ரத்னா விருது பெற்றுள்ள ராவ், தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் ஹாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.இந்தியாவின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் இவ்விரண்டு பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் சேர்த்து 41 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 16ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் அறிவித்தார். இந்நிலையில்இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை தெண்டுல்கர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்..!




மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

*இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

*ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும், ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர்- உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

*இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன, அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை(Vein) மூலம் செலுத்தலாம்.

*இளநீர் மிக மிகச் சுத்தமானது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

*இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன, சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.

* பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

*இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்..!



ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்

தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

புகைபிடித்தல் மது அருந்துதல்

சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.

பல் துலக்காமல் தூங்குதல்

காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.

வேகமாக உண்ணுதல்

சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது

அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது

மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.

டிவியில் மூழ்குவது

மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.

கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்

இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.

ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை

உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.

டீ, காபி தவிர்க்கலாமே!

டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்’ அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு’ செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.

அல்சர், அசிடிட்டிக்கு என்ன சாப்பிடலாம் - ரெசிப்பிக்களின் பட்டியல்...




சிறு குழந்தைகளுக்கும் 'அசிடிட்டி’ ஏற்படுவது அதிர்ச்சியான விஷயம். அல்சர், அசிடிட்டி போன்ற வயிறு மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், என்ன சாப்பிடலாம் என்பதை விளக்குகிறார், சென்னை ஹெயின்ஸ் நியூட்ரிலைஃப் கிளினிக்கின் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்னைக்கும் மூல காரணம், 'ஸ்ட்ரெஸ்’. அடுத்தது, முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, உணவைத் தள்ளிப்போடுவது, அதிகமான இடைவெளிவிட்டுச் சாப்பிடுவது போன்ற சீரற்ற உணவுப் பழக்கங்களால் அல்சர் வரலாம்.

இப்போது அல்சர், அசிடிட்டியை விட, அதிகமான அளவில் மக்களைப் பாதித்து வரும் பிரச்னை, 'Acidity'என்ற 'நெஞ்சைக் கரித்தல்’ அல்லது 'எதுக்களித்தல்’தான். உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலேறி வருவதுதான், 'நெஞ்சைக் கரித்தல்’ என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்கள், ஏதேனும் ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் விடுவது மற்றும் டென்ஷன்தான்.

அல்சர் வந்துவிட்டால், உடனடியாக உணவுப் பழக்கத்தைச் சீராக்க வேண்டும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, காரம் மற்றும் மசாலா இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதும்'' என்றார்.

தாரிணி கிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி, அல்சருக்கான சில உணவுகளை இங்கே செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

பூசணி உலர் திராட்சை ராய்த்தா

தேவையானவை:

பூசணித் துருவல் - 2 கப், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப்.

செய்முறை:

பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாகப் பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு, பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிரில் சேர்த்துக் கலக்கவும். குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.

மணத்தக்காளிக் கீரை மண்டி

தேவையானவை:

மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6, கெட்டியான முதல் தேங்காய்ப் பால், இரண்டாம் பால், அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி)- தலா அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, வெந்தயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளாமல் போட்டு, தோல் உரித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.

குறிப்பு:

இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.

வாழைத்தண்டு மோர்

தேவையானவை:

புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.

குறிப்பு:

பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.

ஒரு நாள் உணவுப் பட்டியல்:

காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ.

காலை:

இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)

11 மணி:

புளிக்காத மோர்.

மதிய உணவு:

நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.

மாலை 4 மணி:

பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.

இரவு:

இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை:

மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.

காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.

நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை:

வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.

ஃப்ரூட் சாலட் செய்யும்போது, க்ரீம் போன்ற செரிக்கக் கடினமான பொருட்களைச் சேர்க்க வேண்டாம்.

வெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்

தேவையானவை:

வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.

செய்முறை:

வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின் விதைகள் நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பீர்க்கங்காய் இளங்கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பீர்க்கங்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - 1, மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து, அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும்.

குறிப்பு: மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, இரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கலாம். சிறிது கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.

மேரி லீக்கி- ஆதி மனிதனின் பிறப்பைக் கண்டறிந்தவர்...!




 இந்த உலகில் மனித இனம் எங்கே தோன்றியது? பூமிப் பந்தின் மூதாய் தோன்றிய இடம் எது? கிழக்கு ஆப்பிரிக்கா. இதைக் கண்டறிந்தவர் ஒரு பெண். அவர் மேரி லீக்கி. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் அறிவியல் பின்புலத்தைக் கண்டறிந்ததற்காகப் புகழ்பெற்றவர்.

"நான் பொருள்களைத் தேடித் தோண்டுகிறேன். நான் அதிகம் அறியும் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதன் பிறகு நான் கண்டறிந்ததை வரைய விரும்புகிறேன்" என்று தனது பணி பற்றிச் சுருக்கமாக அவர் விவரித்தார். நிலத்தைத் தோண்டி ஆராய்வதுதான் மேரி லீக்கியின் பணி.

அவர் உலகின் மிகச் சிறந்த புதைபடிம (அல்லது தொல்லுயிர் எச்சம்-Fossil) வேட்டையாளர், பண்டைய மானிடவியலாளர். அவரது முக்கியக் கண்டறிதல்கள், அவரது அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த ஆராய்ச்சிப் பணி காரணமாக மனிதக் குலத் தோற்றம் தொடர்பான பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.

தொடக்கக் காலம்

புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியர் எர்ஸ்கைன் நிகோல், சிசிலியா ஃபெரேரேயின் மகளாக 1913 பிப்ரவரி 6ஆம் தேதி லண்டனில் அவர் பிறந்தார். சின்ன வயதிலேயே கலை, தொல்லியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. குழந்தையாக இருந்தபோது, பெற்றோருடன் அடிக்கடி ஃபிரான்ஸுக்குச் சென்றார். அங்கு உள்ள வரலாற்றுக்கு முந்தைய கால அருங்காட்சியகத்துக்குச் சென்று வர ஆரம்பித்த அவர், அந்த அருங்காட்சியகத்தின் தொல்லியல் அகழாய்வுகளிலும் பங்கேற்றார். பண்டைய கற்கால ஆயுதங்களை அப்போது அவர் கண்டறிந்திருக்கிறார். வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் நிறைந்த ஃபிரெஞ்சு குகைகளான ஃபான்ட் தி காம், லா மூத் ஆகியவற்றையும் அவர் பார்த்தார். பிரிட்டன் டெவானில் உள்ள ஹெம்பர்ரியில் புதிய கற்காலம் தொடர்பான தொல்லியல் ஆய்வில் அவர் பங்கேற்றார்.

1926இல் அவரது தந்தை இறந்ததன் காரணமாக, அவரும் அவருடைய அம்மாவும் லண்டன் திரும்பினர். அப்போது தான் படித்து வந்த கத்தோலிக்கப் பள்ளிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேரி எதிர்த்தார். அதனால் இரண்டு பள்ளிகளில் இருந்து அவர் வெளியேறினார்.

1930களில் 17 வயதில் தொல்லியல், மண்ணியல் பற்றி படிக்க ஆர்வம் கொண்டார். அது சார்ந்த அடிப்படை விஷயங்களில் சீக்கிரமே அவர் வல்லுநர் ஆனார், அறிவியல் விளக்கப்படங்கள் வரைவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1933இல் அவருடைய கணவராக மாற இருந்த லூயி லீக்கியின் அறிமுகம் கிடைத்தது. ஆப்பிரிக்காவில் தான் கண்டுபிடித்திருந்த கற்கால ஆயுதங்களின் அடிப்படையில் ஆடம்ஸ் ஆன்செஸ்டர்ஸ் என்ற புத்தகத்துக்காக வரைவதற்கு வருமாறு மேரியை லூயி அழைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் லூயி லீக்கி தனது முதல் மனைவி ஃபிரிடாவை விவாகரத்து செய்த பின், மேரியைத் திரு மணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜோனதான், ரிச்சர்ட், பிலிப் என மூன்று மகன்கள். மூன்று பேரும் பண்டையவியல் ஆராய்ச்சியாளர்கள்.

அறிவியல் சாதனைகள்

1948இல் விக்டோரியா ஏரி பகுதியில் உள்ள ருசிங்கா தீவில் புரோகான்சல் ஆஃப்ரிகானஸ் என்ற 2.5 கோடி பழமையான மனிதன், மனிதக் குரங்கு இடையிலான பொது மூதாதையை மேரி கண்டறிந்தார். கச்சிதமாகப் பாதுகாக்கப்பட்ட ஆரம்பக் கால மனிதனின் மண்டையோடு அது.

1959இல் தான்சானியாவில் உள்ள ஓல்துவாய் பள்ளத்தாக்கில் மனிதக் குலத்தின் ஆரம்பக் கால மண்டையோட்டை அவர் கண்டறிந்தார். முதலில் அது கிழக்கு மனிதன் (ஸின்ஜான்த்ரோபஸ்) என்ற பொருள்படும்படி பெயரிடப்பட்டாலும், தற்போது அதன் பெயர் தெற்கு மனிதக்குரங்கு (பிரான்த்ரோபஸ்) என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்தத் தொல்எச்சமே லூயி குடும்பத்துக்கு உலகப் புகழ் பெற்றுத்தந்தது. அதுவே குரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலான இணைப்புக்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

அவர்களது பெரும்பாலான ஆராய்ச்சிகள் கென்யா, தான்சானியாவிலேயே நடைபெற்றன. மேரி கண்டறிந்த தொல்எச்சங்களின் பின்னணி பற்றி விளக்குவதிலும், அவற்றைப் பிரபலப் படுத்துவதிலும் லூயி லீக்கி ஈடுபட்டார். 1972இல் கணவர் லூயி காலமான பின்னும், ஆப்பிரிக்காவில் மேரி களப்பணியைத் தொடர்ந்தார்.

நடக்க ஆரம்பித்த தருணம்

1979இல் லாடோலியில் 89 அடி நீளம் கொண்ட ஆதி மனிதனின் காலடித்தடங்களை மேரின் குழு கண்டறிந்தது. இதுவும் ஓல்துவாய் பள்ளத்தாக்கிலேயே கண்டறியப் பட்டது. ஆரம்பக் கால மனிதர்கள் எரிமலை சாம்பலில் கால் பதித்து நடந்தது அங்குப் பதிவாகி இருந்தது. அவை 36 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. இந்தக் கண்டறிதல் மூலம் நமது மூதாதையர்கள் அந்தக் காலத்திலேயே இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தது உறுதிப்பட்டது. அதுவரை நம்பப்பட்டு வந்த காலத்துக்கு முன்னதாகவே மனிதன் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்ததும் தெரிய வந்தது. இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

1983இல் களப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதுவரை, மேரியும் அவரது குழுவும் ஆதிமனிதனின் ஹோமினிட்டின் தொல்எச்சங்கள், வரலாற்றுக்கு முந்தைய தொல்லுயிர் எச்சங்களை கண்டறிதலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

களப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவரது பல்வேறு கண்டு பிடிப்புகள் நிகழ்ந்த நைரோபியில் உள்ள ஓல்துவாய் பள்ளத்தாக்கு பகுதிக்கே மேரி குடிபெயர்ந்தார். அங்கு 20 ஆண்டுகளுக்கு வாழ்ந்தார். தொடர்ச்சியாக அறிவியல் சார்ந்தும், தனது முக்கியமான கண்டுபிடிப்புகள் குறித்துப் பொதுமக்களுக்கு விளக்கும் எளிய கட்டுரைகளையும் எழுதி வந்தார். அவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஓல்து வாய் கார்ஜ்: மை சேர்ச் ஃபார் எர்லி மேன் (1979) டிஸ்குளோஸிங் தி பாஸ்ட் (1984)- சுயசரிதை.

மேரி முறைசார்ந்த பட்டப் படிப்பையோ, பட்ட மேற்படிப்பையோ படிக்காவிட்டாலும், மானிடவியல் துறையில் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கும் அவரது வாழ் நாள் பணிக்கும் பல்வேறு விருதுகளும், கௌரவப் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1996இல் 83 வயதில் அவர் காலமானார்.

அவருடைய கணவர் லூயி லீக்கி பெரும் புகழைப் பெற்றிருந்தாலும், மேரி சுயமான ஒரு விஞ்ஞானியாக மதிக்கப்பட்டார். அவருடைய மேதமை நிறைந்த சாதனைகள் தொல்லியலில் அவருக்கு உயர்ந்த இடத்தைத் தருகின்றன.

அமுக்குவான் பேய்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?



இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

 என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது.

பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது?

நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு. சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.

 இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும்.

 இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

“பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது...




 சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் “பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.

அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார். இப்போது பேஸ்புக்வாசிகளின் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டிவிட்டது. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கடந்த மே மாதம் தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர் களில் ஒருவராக என்னை உயர்த் தும் என்று கனவில்கூட நினைத் துப் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். பூஜ்ஜியத்தில் தொடங்கிய பேஸ்புக்கின் வருவாய் இப்போது கோடி கோடியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் பேஸ்புக் கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டாலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருவாய் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சியிலிருந்து மின்சாரம்...!!!




கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae) முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.

இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும்.

நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை வைத்துத் தான் கண்டு கொள்கிறது.

இப்படி இயற்கையிலேயே சென்சிட்டிவான கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைகழகம் ஒரு புது வகை சென்சார்களை உருவாக்கியுள்ளது.

இது மனிதர்கள் / அல்லது டெக்னாலஜி செல்ல முடியாத இடத்தில் கூட இந்த கரப்பான் பூச்சிகள் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.

கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இனைக்கபட்டிருக்கிறதாம்.

இதெல்லாம் சரி இந்த சென்சார் எப்படி மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் என கேட்கும் ஆட்களுக்கு – அது தான் கூறினேனே இதன் முதுகில் இந்த ஃபியூள் சென்சார் இருக்கின்றது என்று……..

இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய அந்த கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ் (trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள்.

இந்த திரவகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும்.அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும் அதன் கூட‌ உள்ளே இருக்கும் ஊசி இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் அந்த சென்ஸார் உபயோகத்திர்க்கு வாழ் நாள் முழுவதும் கிடைக்கும்.

ஏற்கனவே சோதனை செய்த போது ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தருகிறதாம். போற போக்கை பார்த்தால் இந்த கரப்பான் பூச்சியை வீட்ல வளர்த்து மொபைல் சார்ஜ்ல இருந்து மின்சார தேவைக்கெல்லாம் உபயோகபடுத்தும் அளவுக்கு வந்திரும் போல……………..!

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=gmbEX7zDzog

என் வாழ்க்கை மாறிவிட்டது: 'சூப்பர் சிங்கர்' திவாகர் நெகிழ்ச்சி..!



 விஜய் டி.வியில் ‘சூப்பர் சிங்கர் சீசன் 4’ - ன் இறுதிச்சுற்றில் வெற்றி யாளராக தேர்வானதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் திவாகர்.

 இதில் வெற்றி பெற்றது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “இவ்வளவு நாட்கள் இதற்காகத்தான் காத்திருந் தேன். என்னுடைய கஷ்டம், போரட்டத்தோடு சேர்ந்து எல்லோருடைய ஆதரவும் இணைந் ததால் இந்த

வெற்றி கிடைத்திருக் கிறது. இன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது. என்னிடம் இப்போ சொந்தமாக பரிசாக கிடைத்த ஒரு வீடு இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்திருக் கிறீர்கள்.

 உங்க பிரார்தனையும் என் வெற்றிக்கு காரணம். எவ்வளவு நன்றி சொன்னாலும், இந்த நேரத்தில் பத்தாது!’’ என்றார். சூப்பர் சிங்கர் போட்டியின் இரண் டாவது இடத்தை சையத்சுபானும், மூன்றாவது இடத்தை சரத் சந்தோஷும் பிடித் தார்கள்.

பேஸ்புக்கின் தோற்றம் பற்றிய முழுக் கதை இது தான்..!


இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).

தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.

முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.

அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.

இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.

உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.

இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை, ஆனால் வரலாறுகளுக்கு..?



புராணங்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. வரலாறுகளுக்கு நிச்சயம் ஆதாரம் தேவை. மன்னர்கள் வரலாறு, இந்தியாவின் சுதந்திர வரலாறுகளை சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரமாய் கம்பீரமாய் நிற்கிறது வேலூர் கோட்டை.

வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக 1566ல் இருந்த பொம்முநாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது.

கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த கோட்டை வலிமையானது. கோட்டையை சுற்றி அகழியும் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
நாயக்கர்களிடமிருந்து 1650ல் பிஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. 25 ஆண்டுகால ஆட்சிக்கு பின் 1676ல் மராட்டியர்கள் கைப்பற்றினர். 30 ஆண்டு ஆட்சிக்கு பின் 1708ல் டெல்லியை ஆண்ட தௌத்கான் கைப்பற்றினார். அப்போது நவாப்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டையிருந்தது.

கர்நாடகா நவாப்கள் என அழைக்கப்பட்டவர்கள் வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் டெல்லி தௌத்கான் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக வெளியேறியபோது நவாப்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுதந்திர பகுதியாக மாறின.

நவாப்கள் ஆங்கிலேயரின் நண்பர்களாக இருந்தனர். நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. 1760ல் முதல் ஆங்கிலேயர் அதன் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்றயிடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும்போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடிமருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர்.

மராட்டிய புலி திப்புசுல்தான் இறந்தபின்னர் அவரது குடும்பத்தை இங்கு தான் முதலில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள். அதேபோல் இலங்கை கண்டி மாகாணத்தின் கடைசியரசர் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது மனைவி மக்களை இந்த கோட்டையில் தான் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டனர். அதேபோல் விஜயநகர பேரரசின் அரசராக இருந்த ரங்கராயன் இந்த கோட்டையில் வைத்து தான் கொல்லப்பட்டார்.

சிப்பாய் புரட்சி

ஆங்கிலேயர் தென்னிந்தியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் வட இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். அப்போது

ஆங்கிலேய இராணுவத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றினர். இவர்கள் எத்தனை தியாகங்கள் செய்தாலும் அதனை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது அவர்கள் மனதில் அனலாய் தகித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரம் வீரர்களுக்கு பசு, பன்றி நெய் தடவப்பட்ட வெடிகுண்டுகளை போர் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு இரு தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை பயனபடுத்திக்கொண்ட திப்புவின் வாரிசுகள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்ய திட்டம் வகுத்தனர். அதன்படி நீண்ட திட்டம் வகுத்து மக்களிடம் ரகசிய பிரச்சாரம் செய்யப்பட்டு நம்பிக்கையான படை வீரர்கள் மூலம் தகவல் பறிமாறப்பட்டு தயார் செய்யப்பட்டது.

806 ஜீலை 10ந்தேதி புரட்சிக்கான நாளாக ரகசியமாக குறிக்கப்பட்டது. அன்று திப்புசுல்தானின் மகன் ஒருவருக்கு திருமணம். விடியற்காலை புரட்சி தொடங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கோட்டையில் திப்புசுல்தானின் புலி கொடியேற்றட்டப்பட்டது. அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆற்காடு, சித்தூர் பகுதியில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டையை மீட்டனர். திப்புவின் வாரிசுகளின் பாதுகாவலர்கள், புரட்சியின் தளபதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் திப்புவின் வாரிசுகள் வடமாநிலங்களுக்கும், அவர்களது நம்பிக்கையான தளபதிகள் திருநெல்வேலிக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுப்பி தங்களது பாதுகாப்பில் வைத்துக்கொண்டனர். இந்த புரட்சி தான் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட முதல் புரட்சியாகும்.

சர்வ மதம்

கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது.

கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். அதேபோல் தென்னிந்தியாவின் முதல் அரபுக்கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது.

அருங்காட்சியகம்

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.

காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன.
கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். இந்த கோட்டை பற்றி 1650ல் வந்த ஜாக் டி கோட் என்ற ஐரோப்பிய பயணி, இது போன்ற கோட்டையை நான் எங்கும் பார்த்ததில்லை என வர்ணித்துள்ளார். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது.

படகு சவாரி

கோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் - தொல்பொருள் துறையும் செய்து தந்துள்ளது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை படகில் அகழியில் அரை வட்டமடிக்கலாம். கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். விடுமுறை நாட்கள், மாலை நேரங்களில் உட்கார இடம்மில்லாத வகையில் கூட்டம் இந்த பூங்காக்களில் நிரம்புகிறது. குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட கண்டி மன்னன் விக்ரமராஜா அவனது மனைவிகள் இறப்புக்கு பாலாற்றங்கரையில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்கு வெளியே வடக்கு
பகுதியில் சிப்பாய் புரட்சியில் இருந்த வீரர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. காதலர்களால் நிரம்பி வழிகிறது கோட்டை. ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது.

வழித்தடம்

சென்னை, பெங்களுரூ மட்டும்மல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக இங்கு வர பேருந்து வசதியுள்ளன. இரயில் சேவையும் உள்ளது. இரயிலில் வர விரும்புபவர்கள் காட்பாடியில் இறங்கி 10 ரூபாய் ஆட்டோ அல்லது 4 ரூபாய் டவுன் பேருந்தில் சென்றால் கோட்டை எதிரே இறக்கி விடுவார்கள். தங்கவும், உணவுக்கும் ஏகப்பட்ட விடுதிகள் உள்ளன. வேலூரில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
 
நண்பேன்டா