Thursday 13 February 2014

டுவிட்டர், யாகூ, ஈமெயில் என்ற பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது..!

டுவிட்டர், யாகூ, ஈமெயில் என்று கண்ட பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது: பட்டியலை வெளியிட்டது மெக்சிகோ..!  



குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பியபடி பெயர் சூட்டுவதோ, செல்லப் பெயர்களில் அழைப்பதோ மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 61 பெயர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட டுவிட்டர், யாகூ போன்ற பெயர்களும், கற்பனை பாத்திரங்களான ஹாரி பாட்டர், ஜேம்ஸ்பாண்ட், ராம்போ மற்றும் மருத்துவ சிகிச்சை முறையில் வரும் சர்கம்சிசன் என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல் வர்ஜின், ஹிட்லர், ஈமெயில், பர்கர் கிங், கிறிஸ்துமஸ் டே, ரோபோ காப் மற்றும் ரோலிங் ஸ்டோன் போன்ற செல்லப் பெயர்களில் குறிப்பிடப்படுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவாகும் என்று சோனோரா சிவில் பதிவு இயக்குனரான கிறிஸ்டினா ரமிரெஸ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் இந்தப் பெயர்களைக் கொண்ட குழந்தைகள் கேலி செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதை தாங்கள் உறுதி செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.


மேலும் ஆட்சேபனைக்குரிய பெயர்களை அதிகாரிகள் கண்டறியும் பட்சத்தில் தடை செய்யப்படும் பெயர்ப்பட்டியல் மேலும் விரிவடையக்கூடும் என்றும் ரமிரெஸ் குறிப்பிட்டார்.

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?


01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை...

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்...!

பாலுமகேந்திரா : அது ஒரு கனா காலம்



 தமிழ் சினிமா மறக்க முடியாத படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திரா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

அவர் 1939ம் ஆண்டு இலங்கையில் பிறந்து வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் இளவயது முதலே ஆர்வம் மிகுதியாக இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமிரா பரிசாக அளித்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்து, அதில் தங்கப் பதக்கம் வென்றார்.

திரைத்துறையில் நுழைந்த பின், ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா காலம் ஆரம்பித்தது. மலையாளத் திரையுலகில் 'நெல்லு', 'ராஜஹம்சம்', 'மக்கள்', 'ராகம்' என தொடர்ச்சியாக இவரது ஒளிப்பதிவு பேசப்பட்டது. 'நெல்லு' படத்தில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது மற்றும் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றார்.

ஒளிப்பதிவினைத் தொடர்ந்து பாலுமகேந்திரா தன்னை இயக்குநராக வெளிப்படுத்திய கன்னடப் படம் 'கோகிலா'. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இங்கும் வெள்ளி விழா கண்டது.

தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. அதனைத் தொடர்ந்து இயக்குநராக தமிழில் பல படங்களை இயக்கினார். 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' மற்றும் 'தலைமுறைகள்' ஆகிய படங்கள் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய படங்கள். இவர் இயக்கத்தில் கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படம் தான் கமலுக்கு சிறந்த நடிகராக முதல் தேசிய விருதினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் படங்கள் இயக்கியது மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். படங்கள் இயக்குவது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்கள் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து வந்தார்.

எப்போதுமே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் போது, விளக்குகள் உபயோகிக்கவே மாட்டார் பாலுமகேந்திரா. என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதை வைத்தே காட்சிப்படுத்துவார். இவரின் இந்த திறமையை பார்த்து பல்வேறு இயக்குநர்கள் இவரிடம் பணியாற்ற முன்வந்தனர். இவரது படங்களில் கறுப்பு நிற நாயகிகள் தான் இருப்பார்கள். கறுப்பு தான்பா நம்ம ஊர் கலரு என்பார் செல்லமாக.பல்வேறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதே கருத்தை கூறியிருக்கிறார்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'தலைமுறைகள்'. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிருத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் 'தலைமுறைகள்'. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார்.

'தலைமுறைகள்' படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா...! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம்.

படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, "உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது" என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, "ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. " என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.

நேற்று தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான்.

இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா என்னும் திரைச்சிற்பி இருந்த இடம் இன்று வெறுமையாகியிருக்கிறது. அந்த இடத்தை நிரப்ப நிறைய இயக்குநர்கள் முன்வருவது தான் பாலுமகேந்திராவுக்கு நாம் கொடுக்கும் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும்.

புகைபிடிக்கும் பள்ளி மாணவிகள் டெல்லியில் அதிகம்..! சர்வேயில் தகவல்



கடந்த 2012ம் ஆண்டில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 12.1 மில்லியனாக இருந்தது. இது 1980ம் ஆண்டில் 5.3 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில்மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தலைநகர் புதுடெல்லியில் புகை பிடிப்பவர்களின் மத்தியில் மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது மேலும் அப்செட்டை அளித்துள்ளது.

இன்றைய பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றும் புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் என்ன கேட்ட போது மன அழுத்தத்தால் புகை பிடிப்பதாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தியதில் புகை பழக்கம் உள்ளவர்கள் 14 வய்து முதல் 18 வயதுக்குள் என்று தெரியவந்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 700 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது கணக்கெடுப்பில் 49 சதவீதம் புகையிலை பொருட்கள் வழக்கமாக ப்யன்படுத்துபவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.முன்னதாக இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்கள்தான் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை நகரில், கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது.இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க்து.

தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை சரிவு..!



 நாட்டில் தரைவழி தொலைபேசி இணைப்பு உபயோகிப்பாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 89.98 கோடியாக சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90.30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்போன் உபயோகத்துக்கு வந்த பிறகு தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் 4.03 சதவீத அளவுக்குக் குறைந்து வந்துள்ளது.

 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 93.77 கோடியாக இருந்தது. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ அடிப்படையிலான கம்பியில்லா தொலைபேசி உபயோகிக்கும் சந்தாதாரர் எண்ணிக்கை 87.05 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 80.21 கோடியாக இருந்தது.

ஏர்டெல் 19.33 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு முதலிடத்திலும் 15.55 கோடி வாடிக்கையாளர்களுடன் வோடபோன் நிறுவனம் இரண்டாமிடத்திலும், ஐடியா நிறுவனம் 12.72 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

நேரடி மற்றும் மறைமுக வரிகள் - என்றால் என்ன...?



 வரி வருவாய்களில் நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகள் உள்ளதாகப் பார்த்தோம். தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி (Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்துகின்ற கலால் வரி (Excise Duty), இறக்குமதி / ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்க வரி (Customs Duty), பொருள்களை வாங்கும் போது செலுத்துகின்ற மதிப்பு கூட்டு வரி, தொழில் வரி (Service Tax) போன்றவை மறைமுக வரிகளாகும்.

இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதராணமாக, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.

ஆனால், மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதாவது, நீங்கள் ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையினை வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது விதிக்கப்பட்ட வரியின் சுமை, இறுதி நுகர்வோர் ஆகிய உங்கள் மீது சுமத்தப்படும். இந்த வரிகள் பொருளின் விலையோடு சேர்த்தோ (உ.தாரணம் பெட்ரோலின் விலை) அல்லது சிற்றுண்டி சாலை உணவு பில்களில் சேவை வரி குறிப்பிடுவது போன்று தனியாகவோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரி நீங்கள் வாங்கும் பொருளின் விலையினை கூடுதலாக்குகின்றது.

ஏழை பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான மறைமுக வரிகளை செலுத்துவார்கள் என்பதால், பொருளாதாரத்தில் வருமான மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும், அதில்தான் வரி செலுத்தும் திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும். எனினும் இந்த நேர்முக வரிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் வரிக்கொள்கைகளை வடிவமைக்க வேண்டியதும் மிக முக்கியம்.

அதிகமாக உழைத்து பொருள் ஈட்டுவோர் மீது அதிக வரிச் சுமையை ஏற்றிக்கொண்டே போனால், அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கம் இல்லாமலே போகும். மேலும் ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும் போது நேர்முக வரியும் அதிகமாக வளர்வது அவசியம். நம் நாட்டின் மொத்த வரி வருவாயில் 35 சதவீதம் நேர்முக வரிகளாகவும் 65 சதவீதம் (2010-11 நிதியாண்டில்) மறைமுக வரிகளாகவும் பெறப்பட்டுள்ளன.

திருவானைக்காவலில் தை தெப்ப உற்சவம்...!



திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலில் தை தெப்ப உற்சவ திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் திருநாளான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்த பின் புறப்பாடு நடந்தது.

சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக ராமதீர்த்த தெப்பக்குளம் வந்து சேர்ந்தனர். தெப்ப மிதவையில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். தெப்பக்குளத்தில் 3 முறை வலம் வந்து மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் மீண்டும் சன்னதி தெரு வழியே சென்று தேரோடும் வீதியாகிய 4ம் பிரகாரம் வலம் வந்து நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணையா மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்..!



மக்களவையில் இன்று மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, மைக்கை பிடுங்கி, அருகில் உள்ள மேஜையில் இருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டு உடைத்தார்.

அத்துடன் திடீரென தன் கையிலிருந்த மிளகுப்பொடி ஸ்பிரேவை அவையில் உள்ள உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதிலிருந்து தப்பிக்க உறுப்பினர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் அவையில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கினார்.இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

 மிளகு பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.உடனே பாராளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு சிகிச்சை அளித்தனர். 3 எம்.பி.க்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிக்கின்றன.இன்று இது போன்ற களேபரத்தில் ஈடுபட்ட எம்.பி. ராஜ்கோபால் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டு மக்கள் மன்றத்தை போர்க்களமாக மாற்றிய உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.மேலும் மாமன்றத்துக்குள் எரிவாயு, கத்தி உள்ளிட்ட ஆயுங்கள் இருந்தது இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் கரும்புள்ளியாக கருதுகிறேன் .என்றும்தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தில் அத்துமீறும் காதல் ஜோடி மீது நடவடிக்கை...!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் முகமது சுல்தான், முகமது அலி, கலீல், நிஜாம் உள்பட 15 பேர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காதலர் தினம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றையும் புகார் மனுவுடன் இணைத்து இருந்தனர்.

அதில், கிறிஸ்தவ போதகர் வேலன்டைன் என்பவர் நினைவாக ரோம் பாரம்பரியத்தின் வழியாக வந்ததுதான் இந்த காதலர் தினம். இதனை மேற்கத்திய நாடுகள் வணிக நோக்கத்திலேயே காதலர் தினமாக அறிவித்து உள்ளன.

இதனால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் காதலால் தற்கொலை செய்து கொள்வதை நினைத்தும், வீட்டை விட்டு ஓடிப்போகும் போதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என குறிப் பிடப்பட்டு இருந்தது.

பாலு மகேந்திரா - வாழ்க்கை வரலாறு...!



பிறப்பு: பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்

மே 20, 1939 (அகவை 74)

மட்டக்களப்பு, இலங்கை

இறப்பு:பெப்ரவரி 13, 2014

சென்னை, இந்தியா

இருப்பிடம்:சென்னை, இந்தியா

பணி:திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர்.

பாலு மகேந்திரா(Balu mahendra) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், கன்னட, மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

பிறப்பு

1946 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது அண்டை வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன். 

அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் தான் என பாலு மகேந்திரா நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

திரைப்பட நுழைவு

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 

கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். 

இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். 

பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேசிய விருதுகள்

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.

இயக்குனரான உதவியாளர்கள்

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர்.

 பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.

இயக்கிய திரைப்படங்கள்

கோகிலா

அழியாத கோலங்கள்

மூடுபனி

மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)

ஓலங்கள் (மலையாளம்)

நீரக்ஷ்னா (தெலுங்கு)

சத்மா (ஹிந்தி)

ஊமை குயில்

மூன்றாம் பிறை

நீங்கள் கேட்டவை

உன் கண்ணில் நீர் வழிந்தால்

யாத்ரா

ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)

இரட்டை வால் குருவி

வீடு

சந்தியாராகம்

வண்ண வண்ண பூக்கள்

பூந்தேன் அருவி சுவன்னு

சக்ர வியூகம்

மறுபடியும்

சதி லீலாவதி

அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)

ராமன் அப்துல்லா

ஜூலி கணபதி

அது ஒரு கனாக்காலம்

துணுக்குகள்

பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார்.சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.

வீட்டில் காயப்போட்ட துணிகளை காணவில்லை: ஆன்லைனில் புகார்: விசாரிக்க எஸ்.பி., உத்தரவு



பழநியை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டு கொடியில் காயப்போட்ட துணியை காணவில்லை என, திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு ஆன் லைனில் புகார் அளித்துள்ளார். இதை விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

பழநியை சேர்ந்தவர் அபி,40. இவர், ஆன்லைனில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியுள்ளதாவது: நான் பழநி ஆர்.எப்., ரோட்டில் வசிக்கிறேன். 3 தினங்களுக்கு முன்பு எனது வீட்டின் முன்புறம் உள்ள கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தேன்.

 மாலையில் பார்த்தபோது, துணிகளை காணவில்லை. இதை யாரோ திருடிசென்றுவிட்டனர். அவற்றை போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். ஆன்லைன் மூலம் வரும் புகார்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, ஏற்கனவே போலீசாருக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளதால், காணாமல் போன துணிகள் குறித்து வந்த புகாரை பழநி போலீசார் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, போலீசாருக்கு, எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பழநி போலீசார் வழக்குபதிந்து துணிகளை தேடிவருகின்றனர்.

பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்...! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!



பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல் முகத்திற்கு போடும் டால்கம் பவுடரை உபயோகிப்பதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வியர்வை நாற்றத்தை தடுக்க, ஈரப்பதத்தை உறிஞ்சும் முகப்பவுடர்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் இது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். என்றெல்லாம் பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை.

ஆனால், ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். கருப்பை புற்றுநோய் 8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முகப் பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து ஆய்வு இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது. பவுடர் போடாதீங்க குளியலுக்கு பின்னர் நறுமணத்திற்காக உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வது பலரது வாடிக்கை.

மிக முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் பவுடர் போட்டுக் கொள்வது போன்ற பழக்கத்தினால் கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிர் கொல்லி ரசாயனங்கள் முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் இருப்பதால், அவை புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென் மட்டுமல்லாது, நுரையீரலில் தொற்றும் ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

லிப்ஸ்டிக் போன்ற மேக் அப் சாதனங்கள் பயன்படுத்தினால்தான் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது பவுடர் போட்டாலே கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்புகின்றனர்.

SAMSUNG மொபைல் போன்களுக்கான குறியீடுகள்…!



1)*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக்
செய்ய(UnLock).

6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.

8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.

12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Version அறிய.

14)#*3888# -சாம்சங் போன்களின் Bluetoothயின் தகவல்களை அறிய.

15)#*5376# – ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும்
ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய. ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

பல நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் இரு மூக்குகளைக் கொண்ட நாய்….!






















ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரிலுள்ள நாய்களுக்கான டிரஸ் றீகோமிங்
நிலையத்திலுள்ள  இருமூக்குகளைக் கொண்ட நாயை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க உலகமெங்குமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அந்நாய் தொடர்பான வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாயை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்நாயின் புதிய உரிமையாளராக ஸ்கொட்லாந்திலுள்ள கிழக்கு லொதியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நாய் எதிர்வரும் வாரம் முதல் புதிய உரிமையாளரிடம் வளரவுள்ளது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் - ஓர் வரலாற்று பயணம்



சாலைகளில் புழுதிபறக்க நடந்துவந்த 150 ராணுவத்தினர் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள், மொத்தம் 1650 முறை அதாவது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற முறையில் 5850 குண்டுகளைச் சீறிப்பாயச் செய்தனர். துடிக்கத் துடிக்க மக்கள் வீழுந்துக்கொண்டே இருந்தார்கள். குழந்தைகள், முதியவரக்ள், பெண்கள் யாரும் தப்பமுடியவில்லை. என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. 

ஒற்றை வாயிலை மட்டும் கொண்ட அந்த மைதானத்தின் மண்ணில் இப்போது நீங்கள் நடந்தாலும் அந்த சோகத்தின் தடத்தை உணரமுடியும். 93 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அந்த மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தோட்டாக்கள் பதிந்த வடுக்கள் ஆறாத ரணமாய் உள்ளது. மைதானத்தின் இடது ஓரத்திற்கு முன்பு 120 மனித சடலங்களை உள்வாங்கிய அந்த பாழும் கிணறு மௌனசாட்சியாய்  நிற்கிறது. 

அந்த மைதானத்தின் பெயர்: ஜாலியன் வாலாபாக். இருக்குமிடம்: பஞ்சாப்பின் அமிர்தசரஸ். நடந்த ஆண்டு: 13 ஏப்ரல் 1919. இறந்தவர்கள் எண்ணிக்கை: 1526. காரணம்: அந்நியனுக்கு அடிபணிய மாட்டோம் என்றது. சுட்டது: ஏகாதிபத்திய திமிர். திமிரின் பெயர்: ரெஜினால்ட் டையர்.

"நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன்படி அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் குண்டடிப்பட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். 

நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடியிருந்தவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமையாக நடந்துக் கொன்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை".

1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது திமிர் பிடித்த கருத்தக்கள் இவை.


பின்னணியின் பின்னணி.. 

திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம் மற்றும் அப்போதுதான் இந்தியாவில் போராட்ட களத்தில் இறங்கியிருந்த மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் போன்றவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பற்றத்துவங்கின. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. அந்நிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். 

அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட எழுச்சியை ஆரம்பத்திலேயே துடைத்தெறிய ஆட்சியாளர் முடிவெடுத்தனர். இந்த பின்னணியில்தான் சிட்னி ரௌலட் என்பவர் தலை மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை எதிர்த்துதான் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்தது அப்போதுதான் அந்த கொடூர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதுமட்டுமே பின்னணியாக சொல்லப்படுகிறது. இது மட்டுமா பின்னணி.

இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றியே இந்த சிட்னி ரௌலட் குழு அதிகம் ஆராய்ந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஆஹா என்று எழுந்த யுகபுரட்சி இந்தியாவையும் ஆட்டிப்படைத்தது. இங்கிருந்த இளஞர்கள் அந்த நாட்டை நோக்கி நடைப்போட துவங்கினர். எனவேதான் போல்ஷெவிக் தொடர்புகள் ஆராய்ச்சி துவங்கியது. 

இந்த காலகட்டத்தில்தான் வங்கத்தில் இருந்த புரட்சிக்குழுக்கள் பக்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர் உரைகளை முன்னோடியாகக் கொண்டனர். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தையான அனுசீலன் சமிதி என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது. இதில் அரவிந்த் கோஷ், பரித்திர கோஷ், சி.ஆர்.தாஸ், ஜதீன் பானர்ஜி ஆகியோர் அங்கம் வகித்தனர். 

1905 இல் நடந்த வங்கப்பிரிவினை இந்த புரட்சியாளர்களை மிகவும் சினம்கொள்ளச் செய்தது. 1907 டிசம்பர் 23 இல் குதிராம் போசும், பிரபுல்ல சகியும் வங்கப்பிரிவினைக்கு காரணமான கிங்ஸ் போர்டு என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு  குண்டு வைத்தனர். 1908 இல் சசீந்திரநாத் சன்யால் பனாரசில் இளைஞர்களை திரட்டும் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினார். ஹர்தயால் 1913 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கதார் என்ற பத்திரிகையை துவக்கினார். 

பின்பு இந்த பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு கத்தார் சிங் சராபா என்ற இளம் புரட்சியாளனை கொடுத்தது. இந்த அமைப்பு முன்பு இருந்த அமைப்புகளை எல்லாம் விட மதசார்பற்ற தன்மையை வலியுறுத்தியது. 1915 ஆம் ஆண்டு கத்தார் சிங் சராபா தன்னுடைய 20 ஆம் வயதில் தூக்கு மேடையேறினான். 

மேற்கொண்ட குழுக்கள் எல்லாம் தங்களுடைய ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசியல் வகுப்பை நடத்தினர். குறிப்பாக கல்கத்தா அனுசீலன் சமிதி அலுவலக நூலகத்தில் 4000 புத்தகங்கள் இருந்தது. இந்த நூல்கள் தேசபக்த உணர்வையும், தியாக உணர்வையும், அடிமைத்தனத்தின் மீது வெறுப்பையும் தூண்டின. முந்தைய புரட்சிகள் மற்றும் விடுதலை போராட்டங்கள் மற்றும் படிப்பினைகளை போதித்தன. இறுதியாய் பிரிட்டிஷ் இந்தியாவை ஆக்ரமித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு மற்றும் துன்பத்தை விளக்கின.

இந்த பின்னணியில்தான் இயக்கங்களை, ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு ரவுளட் சட்டம் வழிவகுத்தது கொடுத்தது. இருப்பினும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நாடு முழுவதும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். 

இது ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் வன்முறை சம்பவங்களுடன் கடையடைப்பு நடந்தது. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர். மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. தொடர்ந்து ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள் நடந்தது. ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ந்தது. இந்த போராட்டத்தின் உச்சம்தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.


ஏப்ரல் 13, 1919..    

ஆஸ்த்திரியா விடுதலை பெற்ற, கம்யூனிஸ்டுகளின் மூன்றாம் அகிலம் துவக்கப்பட்ட, மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலாக்கப்பட்ட, கிலாபத் இயக்கம் துவங்கிய அதே 1919 ஆம் ஆண்டிண் ஏப்ரல் 13 வைசாகி நாள். அந்த தினம்தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு நடந்த நாள். அமிர்தசரஸில் இந்நாள் எப்போதும் சிறப்புடன் கொண்டாடப்படும். 

அந்த தினத்தில்தான் ரவுலட்சட்டத்தை எதிர்த்து அந்நகரின் புகழ்பெற்ற ஜாலியன் வாலாபாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். திரண்டவர்கள் மீதுதான் மனிதத்தனமையற்ற துப்பாக்கிச்சூட்டை டயர் நடத்தினான். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. திறந்திருந்த ஒரேயரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களி மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழுந்தனர். மொத்தமாய் வீழ்ந்தனர். 

பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டயரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" ஆட்சியாளர்களுகு தந்தி அனுப்பினான். இதனால்தான், ஆட்சியாளர்களின் இந்த கொழுப்பால்தான் பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்த போது "சுட்டேன் சுட்டேன் கை ஓயும் வரைச் சுட்டேன்" என திமிருடன் டயர் வாக்கு மூலம் கொடுத்தான். மைதானங்களில் மக்கள் விளையாடுவது இயல்பெனினும் மைதானங்கள் விளையாடுவதற்கு மட்டுமல மக்கள் வாழ்வினை பாதுகாக்கவும் பயன்படுத்த முடியுமென மக்கள் நிருபித்ததும் இங்குதான். 

அவர்கள் அப்போது மாண்டு போனாலும் அவர்களின் இறுதி நிகழ்வு தேசத்தில் ஆயிரக்கணக்கான கோபங்களின் பிறப்பிடமாய் இருந்தது. அந்த மைதானத்தின் மண் இந்த தேசத்தில் பல நூறு உத்தம் சிங்குகளை, பகத் சிங்குகளை உருவாக்கியது. இந்த மைதானத்தின் உதிரம் தோய்த மண்ணை இறுதிவரை தன்னுடன் அடைகாத்தான் பகத்சிங். இந்த படுகொலைகளை ஆதரித்த பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையரை 21 ஆண்டுகள் கழித்து லண்டனில் சுட்டுக்கொன்றான் உத்தம்சிங். அந்நிய ஆட்சியாளர்கள் மக்களை மந்தைகளா நினைத்தனர். மக்கள் மந்தைகள் இல்லை என நிருபித்தனர். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. 


ஆட்சியில் மட்டும்தான் மாற்றம்.. 

இப்போதும் இந்த தேசத்தின் சுதேசி ஆட்சியாளர்களின் மனநிலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் வரவில்லை 2012 - 2013 ஆண்டடுக்கான வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்குவதில் கொள்கை வகுப்பவர்கள், அரசியல்வாதிகள், விவசாயத்துறையைச் சேர்ந்தவர்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டோரின் பங்கை பாராட்டியிருக்கிறார். இந்திய நாட்டின் பொருளா தாரத்தின் அச்சாணியாய் இருக்கும், தங்கள் உழைப்பால் தேச வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை செய்து வரும் தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியோ, விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றியோ தப்பித்தவறியும் அவர் ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

இந்த பட்ஜெட்டிலும் வழக்கம் போலவே பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் மீது மேலும் மேலும் வரிச்சுமைகள் ஏற்றபடுள்ளது. பணக்காரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீதான நேர்முக வரிகளில் ரூ. 4 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கும் மறைமுக வரிகள் ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர உயர மக்கள் துன்பத்தின் உச்சத்தை நோக்கி செல்கின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றியோ, விலை நிலங்கள் வேகமாய் குறைவது குறித்தோ, வேலையிலா பட்டாளம் வீதியில் அலைவது குறித்தோ, இதன் தொடர் விளைவாய் சமூக குற்றங்கள் அதிகரிப்பது குறித்தோ, இதனால் ஏற்படும் வாழ்க்கை நெருக்கடி குறித்தோ கொஞ்சமும் கவலையில்லாமல் ஆள்பவர்கள் வாழ்கிறார்கள்.

இந்திய பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நமது தேசத்தையே மைதானங்களாக மாற்றி நம் வாழ்வோடு விளையாடும் போது நாம் என்ன செய்யப்போகிறோம்? கொடுந்துயரம் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது மக்கள் இயக்கங்களின் கடமையாய் இருக்கிறது. விளையாடுவதற்கும், விளையாட்டை ரசிக்கவும் மட்டுமல்ல மைதானங்கள். நமது ஆட்சியாளர்கள் மக்களை மந்தைகளா நினைக்கின்றனர். மக்கள் மந்தைகள் இல்லை என நிருபிக்க வேண்டியிருக்கிறது.
 
நண்பேன்டா