Thursday 20 February 2014

குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் கவனம் தேவை..!



குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் “குழந்தைகளுக்கு பெரும்பாலும் நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள், பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது.குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள்
முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

ரெசிபி

நவதானியக் கஞ்சி: முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.

வெஜ்ரைஸ்: கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.

ஸ்வீட் ஆப்பிள்: ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான
சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும்.

 கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.

கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட், பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்கவேண்டியதில்லை என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம். கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.

முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.

கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்

ஈகோ பிரச்னையால் நாங்கள் பிரிந்தோம் - சர்ச்சைகளுக்கு நடிகை முற்றுப்புள்ளி..!




ஈகோ பிரச்னையால் நாங்கள் பிரிந்தோம். இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்துவிட்டோம் என்றார் லிசி.இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியை காதலித்து மணந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிந்தனர்.

 இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் முக்கியமானது, பண பிரச்னை. பிரியதர்ஷனின் சில நிறுவனங¢களை லிசி கவனித்துக்கொள்கிறார். இதில் ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே பிரியதர்ஷனுக்கும் லிசிக்கும் இடையே பிரச்னை எழுந்ததாகவும் இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து கம்பெனிகளை நிர்வக¤த்த தனது பணிகளுக்காக ரூ.80 கோடியை பிரியதர்ஷனிடம் லிசி கேட்டதாகவும் பேச்சு எழுந்தது.

இந்த பிரிவு குறித்து பிரியதர்ஷன் சமீபத்தில் கூறுகையில், நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இருக்கிறோம். பிரச்னை ஏதும் இல்லை என்றார். ஆனாலும் லிசி அவருடன் சேர்ந்து வாழவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷனுடன் சேர்ந்திருக்கிறார் லிசி.இது குறித்து அவர் கூறுகையில், எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இப்போது சேர்ந்துவிட்டோம். கம்பெனி தொடர்பாக எழுந்த சில பிரச்னைகள்தான் எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது.

 ஈகோ எங்களை ஆட்டிப்படைத்ததும் இதற்கு ஒரு காரணம். இப்போது அதையெல்லாம் மறந்து நாங்கள் இணைந்துள்ளோம். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

சிறையில் பிறந்த குழந்தை 22வயதில் பெற்றோரை சந்திக்கப்போகிறது-நளினியின் மகள் அரித்ரா...!



ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், "நாம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும் போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும் போது எப்படி நீதி கிடைக்கும்?" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது பெற்றோரை மன்னித்துவிடுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தனியார் செய்தி சனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பை என்னால் புரிந்து கொள்ள முடியும். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர்.

என் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தும், அவர்களுடன் நான் இருந்ததில்லை. தற்போதும் நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தான் இதனை சாதித்துள்ளார். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிபடுத்த முடியவில்லை. எனது பெற்றோர்கள் கண்டிப்பாக ஒரு வெளியே வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் நிரபராதிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.

காதலர்களான முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி.

டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். அக் குழந்தைக்கு ஹரித்திரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான ஹர்த்திராவுக்கு 2 வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போது பசுமாட்டையே கண்கொட்டாமல் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார் ஹரித்திரா.

இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் ஹரித்திராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர் களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.

இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார்.

மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் ஹரித்திரா, பெற்றோரின் விடுதலையாகப்போகும் தகவலால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார். நளினி�முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹரித்திரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.

நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், ஹரித்திராவின் பயண தேதி திட்டமிடப்பட உள்ளது.

சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் ஹரித்திரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்மிட்டுள்ளனர்.

விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.

தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில் மறக்க முடியாத நாள் - பாரதிராஜா



ராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய 7 பேரை விடுதலை செய்ததன் மூலம் உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துவிட்டீர்கள் என முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

என் இனிய தமிழ் மக்களே..!

22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துல தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள் - பாரதிராஜா செங்கொடியின் மரணத்திற்குப் பின் விடுதலை.

இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர் இறுதி யுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொண்ணா வலியும், வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப் போயிற்று.

இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும், தமிழ் மானமும் இந்த 2014 பிப்ரவரியில் முதல்முறையாக தன்னிறைவு அடைந்த்து. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து என்பதன் மூலமாக..

இத்தனை பெரிய இந்தியக் கண்டத்தில் தமிழர்கள் முன் வைக்கும் நீதியை நம்புவதற்கும், கோரும் கருணையை புரிந்து கொள்வதற்கும் ஜனாதிபதிகளாலேயே முடியாதபோது, தமிழர்களின் உயிர் வலியை உணர்ந்த நீதியரசர் சதாசிவம் மற்றும் அவர் குழுவினர், இந்த நாட்டின் மீதும் நீதியின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.

இந்த நேரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கண்ணீரால் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தண்டனை நிறைவேறும் தருவாயில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தீர்கள்.

இருந்தும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மத்திய அரசு, உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியது.

மூவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில், நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் நேற்று தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும் பொறுப்பினை தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சிறப்புமிக்கத் தீர்ப்பு அளித்து மகிழ்ச்சி கொண்டாடும் இவ்வேளையில், மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தாய்மையுள்ளத்தோடு ஒரே நாளில் உங்களுடைய ஒற்றை வார்த்தையில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமல்லாமல், 23 ஆண்டுகள் சிறைச்சாலையிலேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து, வாழ்க்கையே கேள்விக்குறியாய் நின்று கொண்டிருந்த நளினி, ராபர்ட் பயஸ், ஜே.குமார், ரவிச்சந்திரன் ஆகிய அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள். இந்த நாள் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான நாள். தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில் மறக்க முடியாத நாள்.

மேலும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி உடனே விடுதலை செய்வேன் என்று மரண அடி கொடுத்து மாநில சுயாட்சியை நிலை நிறுத்தியது உங்களால் மட்டும்தான் முடியும். நாங்கள் விதைத்தோம். தங்கள் ஆட்சியில் துளிர்விட்டுள்ளது. மலரும் நம்பிக்கையோடு இருக்கிறோம். மனமார்ந்த நன்றி.

 -இவ்வாறு தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

7 பேர் விடுதலை:சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு!



ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வது தொடர்பாக விளக்கம் கேட்கும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அதில் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என்று கேட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை அண்மையில்சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது.அத்துடன் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தது.

இந்நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யப்படும் என்றும் தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

மேலும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில் மாநில அரசு விடுவிக்க முடியுமா?

என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நண்பகல் 12.45 மணிக்கு விவாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!




சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்.


உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.



 துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்..!!!


இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?



 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)


சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப்.



 லேபிலை படியுங்கள்


ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும்.



வகைப்படுத்துங்கள்


ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும்.



 கறைகள்


 சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது.



 டிடர்ஜெண்ட்


 திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.



 உலர்த்தி இஸ்திரியிடுதல்


ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும்.

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!



இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?


இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

வடிவேலு (நடிகர்)



தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.

‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர்.

தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம்.

 அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960  ஆம் ஆண்டு அக்டோபர் 10  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது.

அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்

1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.

அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வெற்றிப் பயணம்

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.

தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து  2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி

கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர்.

மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).

விருதுகள்:

‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நகைச்சுவை வசனங்கள்

‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி,  நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

மியூகோபாலிசாக்கரைடோசஸ் நோயால் வெளிவந்த நட்பு...!



கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த வலி அதிகமாகி அவரால் நடக்கவே முடியாமல் போனது.

அசோக் சவானுக்கு என்ன நோய் என்பதை கண்டறிய பெங்களூர், ஹைதராபாத் மற்றும் திருப்பதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ரூ.1 லட்சம் செலவு செய்ததாக அவரது தந்தை தர்மா சவான் தெரிவித்துள்ளார்.

சோலாபூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அசோக் சவானை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தான் சவானுக்கு மியூகோபாலிசாக்கரைடோசஸ்(Mucopolysaccharidoses) என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த நோய் வந்தால் எலும்புகள் பலவீனமாகிவிடும். அதிலும் குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு பகுதி எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடுமாம்.

மகனுக்கு நடக்க முடியாமல் போனதை அடுத்து அவரை தந்தை தர்மா தான் தினமும் பள்ளிக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவரது மனம் மகனை சுமக்க தயாராக இருந்தாலும் அவரது வயது இடம் கொடுக்கவில்லை.

தர்மா படும் கஷ்டத்தை பார்த்த அசோக் சவானின் நண்பர்கள் தங்கள் நண்பனை ஒரு குழந்தையை போன்று தினமும் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

சிறந்த மாணவர் என்று அசோக் சவானை ஆசிரியர்கள் புகழ்கிறார்கள். சவானுக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது தான் கனவு ஆகும். அவரது கனவை நனவாக்க நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர்.
 
நண்பேன்டா