Wednesday 5 February 2014

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது - பகீரங்க குற்றச்சாட்டு...!



மக்களுக்கு பயன்தரும் சமூக நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என உத்தரவிட்ட சில நாட்களிலேயே சட்ட விரோதமாக அந்நியர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கு தான் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதத்தின் போது சுப்ரீம் கோர்ட் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

நீதிபதி பி.எஸ்.சவ்கான், எம்.ஒய்.இக்பால் உள்ளிட்டோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அப்போது அவர்கள் கூறியதாவது : புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவில் சட்ட விரோதமாக அந்நியர்கள் குடியேறி வருவது அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது; ஆதார் அட்டையால் இந்த சட்ட விரோத குடியேற்றங்கள் குறையவில்லை; 

ஆதார் அட்டையை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது; கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் 10 மில்லியன் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர்; வெளிநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்; வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வருபவர்களால் எல்லையோற மாநிலங்களான அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் கலாச்சாரங்கள் சீரழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் அவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாகவும், தாங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்; அத்தகைய குற்றவாளிகளை உரிய ஆதாரங்கள் சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆதார் அட்டை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டைகளும், தேசிய அடையாள அட்டைகளும் இந்த 10 மில்லியன் பேர்களுக்கும் வழங்கப்பட்டது எதன் அடிப்படையில் என்பது புரியாத விஷயமாகவே உள்ளது; இவர்கள் நாட்டின் குடியுரிமை பெற்றதற்கான ஆதாரங்கள் எவ்வாறு பெற்று, ஆதார் அட்டைகளை பெற்றார்கள் எனவும் புரியவில்லை; இந்த ஆதார் அட்டைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது; இதனால் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் எனவும், அனைவரும் ஆதார் அட்டை பெறுவது அவசியம் எனவும் மத்திய அரசு வற்புறுத்தி வந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நலத் திட்டங்களை பெறுவதற்கு ஒருவர் அவரை பற்றிய அனைத்து விபரங்களையும் தர வேண்டியது அவசியமா என கேள்வி எழுப்பியது. இருப்பினும் இது மற்றொரு வகையில் சர்ச்சைக்குள்ளானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் உள்ள பணத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்பை உறுதி செய்கின்றன; நலத் திட்டங்களுக்கு வேண்டுமானால் ஆதார் அட்டை திட்டம் சரியானதாக இருக்கலாம்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இது சட்டவிரோத நடவடிக்கைகளையே ஊக்குவிக்கிறது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான இதயத்திற்கு உணவு பட்டியல்...


நமது உடலில் உள்ள உறுப்புகளில் இதயமே நாம் உயிரோடும், துடிப்போடும் வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான இதயமே, ஆரோக்கியமான மற்றும் நீண்ட வாழ்வை நமக்குத் தரும்.

ஓட்ஸ்




ஓட்ஸ் தானியங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.ஓட்சில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா அமிலங்கள் போன்றவை அடங்கி உள்ளன.இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. எனவே ஓட்ஸ் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, சிறந்த காலை உணவு.

ப்ரௌன் பிரட் சாண்ட்விச்



பொதுவாக முழு தானியங்களில் வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் நிறைந்த நிறமி அதிக அளவில் அடங்கி உள்ளன. ப்ரௌன் பிரட்டானது, முழு தானியங்களால் செய்யப்படுகிறது.இது போலவே காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் மற்றும் உடல் நலத்திற்கு தேவையான சத்துகள் அடங்கி உள்ளன.இவை இரண்டும் கலந்து செய்வதால், இது இதயத்தை நல்ல முறையில் பேண ஆரோக்கியமான மிக சிறந்த உணவாக அமைகிறது.

ப்ரௌன் பிரட் சாண்ட்விச், பொதுவாக தக்காளி, வெள்ளரி, கீரை இலைகள் மற்றும் வெங்காயம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.

இதயத்தின் நலத்திற்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை விட, இந்த சாண்ட்விச் பல மடங்கு சிறந்தது.

சூப்




சூப் விரைவில் தயாரிக்கக்கூடிய, வயிற்றை நிரப்பும் ஆரோக்கியமான சத்துள்ள உணவு.சூப்பானது பல வகையான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கீரை மற்றும் தக்காளி சூப்பில் சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆச்சிடன்ட்கள் அதிக அளவில் அடங்கி உள்ளதால், அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

காய்கறி குழம்பும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறந்த உணவு.
சூப்பினை மாலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்வது நல்லது.

முளைக்கட்டிய தானியங்கள்



முளைக்கட்டிய தானியங்களில் கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைப்பதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துகள் அதிக அளவில் அடங்கி உள்ளன.

ஒரு கிண்ணம் அளவு முளைகெட்டிய தானியங்களோடு வெங்காயம், தக்காளி மற்றும் மசால் பொருட்கள் கலந்து உண்டால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முளைக்கட்டிய தானியங்களில் சுவைக்காக எலுமிச்சை, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர் மற்றும் பழங்கள்


தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவையானது ஒரு ஆரோக்கியமான, வயிற்றை நன்கு நிரப்பும், இதயத்திற்கு நல்ல ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு.

இது குறைந்த அளவு கொலஸ்ட்ராலையும், அதிக அளவில் ஆண்டி ஆச்சிடன்ட்களையும் பெற்றுள்ளது.

இதனால் தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவை, சுவை மிகுந்த நொறுக்குத்தீனியாக அமைகிறது.

இந்த கூட்டு உணவானத இதயத்திற்கு தேவையான பல நன்மைகளையும், குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்பையும் பெற்றுள்ளது.

மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...


மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.

'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.'

ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு.

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு.

நம்மைப் பற்றிய விவரங்கள்!

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்

காப்பீட்டைக் கண்டறிவோம்!

மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசை’ என்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவான தவறு!

இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பும் பின்பும்!

சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதிப் பற்றாக்குறை!

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.

பெர்சனல் கம்ப்யூட்டரின் திறனை எப்படி அறிந்து கொள்வது?




இன்று நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா?

அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது?

ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம்.

 ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன.

அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது.

கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மதர்போர்ட், ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறித்தும் நமக்குத் தகவல்களைத் தருகிறது. மெமரி மற்றும் சி.பி.யு.வின் திறன்களையும் தனியே சோதனையிட்டுச் சொல்கிறது. இது தரும் சோதனை அறிக்கையும் பல வடிவில் கிடைக்கிறது.

இதனால், நாம் விரும்பும் வகையில், கோணத்தில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் விலை 39.95 டாலர் என்றாலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இலவசமாகச் சில நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

பெர்பார்மன்ஸ் டெஸ்ட் சோதனை முடிவுகள் பச்சை வண்ணத்தில் ஒருபுறமும், தர வரையறைகள் இன்னொரு புறமும் அருகருகே காட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை 26 டாலர். இலவச சோதனையைச் சில காலம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கிறது.

ப்ராப்ஸ் மற்ற பெஞ்ச்மார்க் பயன்பாட்டு புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டதாகும். டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் பிரேம் ரேட் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்து இது காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, கேம்ஸ் புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அப்போதைய பிரேம் ரேட் என்ன என்று, திரையின் இடது மேல் புறத்தில், மஞ்சள் நிறத்தில் காட்டப்படும்.

 கேம்ஸ் பிரேம் இயக்குவதனை மாற்றுகையில், இந்த எண்ணும் மாறும். மேலும் டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் வீடியோ மற்றும் ஸ்கிரீன் கேப்சர் வேகத்தையும் இது துல்லியமாகக் காட்டும். இதன் விலை 37 டாலர் என்றாலும், இலவசமாக சோதனை செய்திட ஒரு பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது.

ப்ரெஷ் டயக்னோஸ் மற்ற பெஞ்ச்மார்க் புரோகிராம்கள் போலவே, இதுவும் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டுகிறது. இதன் முக்கிய சிறப்பம்சம், இது மொத்தமாக, இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

அடுத்ததாக, மற்ற புரோகிராம்கள் தராத, நுண்ணிய செயல்பாடுகளின் திறன் நிலையையும் இது காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள எழுத்து வகைகளின் செயல்திறனைக் கூட தரம் பிரித்துச் சொல்கிறது. இதன் தளத்திற்குச் சென்று, அங்கு நம்மைப் பதிவு செய்த பின்னரே, இதனைப் பயன்படுத்த முடியும்...

விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்..!




hippoஇப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?

இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய நீர்யானை பொம்மையை பார்க்கலாம். அந்த நீர்யானை படத்துக்கு கீழே தான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியனும் வைச்சுக்கங்க, அந்த வார்த்தையை நீர்யானை படத்துக்கு கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்தால் போதும் . அந்த வார்த்தைக்கான அர்த்தம் வந்து நிற்கும். அட, இதற்கு தான் ஆன்லைன் அகராதிகள் இருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இந்த தளம் அதுக்கு மேலே. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இந்த தளத்தில் என்ன எல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டால் அசந்து போவீங்க.

இதில் வார்த்தையை டைப் செய்ததுமே , அந்த வார்த்தை தொடர்பாக உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கப்படும். அதாவது அந்த வார்த்தைக்கான எதிர் சொல் வேணுமா ? அல்லது அதற்கான இன்னொரு வார்த்தை வேணுமா? இல்லை அந்த சொல்லுடன் எதுகை மோனை நயத்துடன் சேர்ந்து ஒலிக்க கூடிய சொற்கள் தேவையா ? இப்படி பலவிதமான தேர்வுகள் கொடுகப்பட்டிருக்கும். இதற்காகவே தனியே ஒரு பட்டியல் இருக்கு. அவற்றில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்தால் , அதற்கான பதில் அடுத்த பக்கமாக வந்து நிற்கும்.

நீங்கள் கேட்ட பதிலோடு இருக்கும் இந்த புதிய பக்கத்தை பார்த்தால் அப்படியே அசந்து போயிடுவீங்க ! ஏன்னா, நீங்க தேடிய பதிலும் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தேடாத பலவிஷயங்களுக்கான பரிந்துரைகளும் இருக்கும். இந்த பரிந்துரைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால் அந்த வார்த்தை தொடர்பான அநேக பயன்பாடுகள் அத்துபடியாகிவிடும்.

உதாரணத்துக்கு ஒரு வார்த்தையை தேடிப்பார்ப்போமா ? இண்டரியேக்டிவ் ( interactive ) - ’இரண்டு நபர்கள் அல்லது பொருட்கள் பரஸ்பரம் பாதிப்பு கொண்டிருப்பது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம் சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பயன்படுத்தப்பும் சொல்லாகவும் இருப்பதால் அந்த பயன்பாடு பற்றிய பொருளும் இடம்பெற்றுள்ளது.

சரி, இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைச்சாச்சு. அடுத்து என்ன ?

இண்டரியேக்டிவ் போலவே வேறு வார்த்தைகள் என்ன என்ன ? இதற்கான எதிர் பதம் என்ன ? அவற்றையும் தேடிப்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போலவே இந்த பக்கத்திலேயே இவற்றுக்கான பரிந்துரைகள் இருக்கு. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் போதும். கம்யூனிகேட்டிங் ( communicating) கொலாப்ரேட்டிங் ( collaborating ) ஷேர்ட் ( shared ) . இவை எல்லாம்

இண்டரியேக்டிவ் எனும் வார்த்தையின் தோழர்கள். சரி இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது ? அதற்கான உதாரணங்களையும் பார்க்கலாம். இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று சந்தேகமாக இருக்கிறதா ? அதையும் தீர்த்துக்கொள்ளலாம். இப்படி தேடும் சொற்களுக்கான பெயர்சொல் , வினைசொல் போன்றவை இருந்தால் அவற்றையும் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமா, இண்டரியேக்‌ஷனல் , இண்டர்ரியேக்‌ஷன்ஸ் போன்ற இண்டர் … என துவங்கும் பிற சொற்களுக்கான அர்த்தம் மற்றும் இதர பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தை தொடர்பான பரிந்துரைகளை பார்த்தாலே புதிய வார்ததைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம். பார்த்தீங்களா? நாம் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தான் தேடினோம், ஆனால் அந்த ஆங்கில வார்த்தை தொடர்பான பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டதுடன் , தொடர்புடைய வேறு வார்த்தைகளையும் தெரிஞ்சுக்க முடியுது.

பொதுவா , அகராதிகளிலேயே இந்த வசதிகள் இருக்கும். ஆனா, இந்த இணையதளத்தில் அவை போரடிக்காத வகையில் ரொம்ப எளிமையாக தொகுத்து தந்து இருக்காங்க. ஒரு பொருளை தேடும் போது தொடர்புடைய பயன்பாடுகள் சங்கிலி தொடர் போல கொடுக்கப்பட்டுள்ளதால் , ஆர்வத்தோடு அவற்றை தேடிப்போக தோணும். எதோ வினைச்சொல், பெயர்சொல் தேடிப்போகிறோம் என்ற அலுப்போ , மலைப்போ ஏற்படாது.

இன்னொரு விஷயம் , இந்த தளத்தின் மூலமே குறிப்பிட்ட வார்ததைகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் கொள்ளலாம். ஆக , ஆங்கில வார்த்தைக்கு இணையான ஜெர்மன் மொழி சொல்லையோ இத்தாலிய மொழி சொல்லையோ தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கில பெயர்கள் ,அவற்றின் அர்த்தம், அவை உருவான விதம் என்று இன்னும் ஏகப்பட்ட விஷ்யங்கள் இந்த தளத்தில் இருக்கு. அவற்றை நீங்களே பயன்படுத்தி பாருங்கள் இது தான் தளத்தின் முகவரி; http://www.wordhippo.com/.

உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் இருந்தாலும் சரி , அல்லது ஆங்கிலம் தொடர்பாக அச்சம் இருந்தாலும் சரி இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வத்தை வளர்க்கும். அச்சத்தை போக்கும். சோ, யூஸ் செய்து பாருங்க!.

சரி, ஆங்கிலம் கற்றுக்கொண்டு களைப்ப் ஏற்ப்பட்டதாக நினைத்தால் வேர்டுவேர்ல்டு (http://www.wordworld.com/ ) தளத்தின் பக்கம் போய பாருங்கள் . ஆன்கில மொழி தொடர்பான பிரபல டீ.வி தொடருக்கான இந்த தளத்தில் வார்த்தைகள் தொடர்பான விளையாட்டுகள், செல்போன் செயலிகள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலம் மட்டும் தானா ? இதோ இந்தி மொழி சொற்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளத்தை முயன்று பாருங்கள்; http://kidsone.in/hindi/writetheLetters/worksheetHindi.jsp. தெலுங்கு ,தமிழும் கூட இந்த தளத்தில் இருக்கு. தமிழ் பகுதி இங்கே : http://kidsone.in/tamil/learntamil/.

உயிறற்றவரின் கண் செல்கள் மூலம் விழி இழந்த கண்களுக்கு ஒளி..!



கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதிலும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள ஒருவகையான செல்கள் மூலம் பார்வையற்ற எலிகளுக்கு அடையாளம் காணும் திறனை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ” ஸ்டெம் செல் மாற்று மருந்து ” என பெயரிட்டுள்ளனர்..இதனை பார்வையற்றோர்க்கு வழங்கும்போது அவர்களால் முழுப்பார்வையை திரும்ப பெற முடியாவிட்டாலும் பொருட்களை எளிதாக இனம் கண்டறிய முடியும் என லண்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும் இதற்கான ஆராய்ச்சி இன்னும் மூன்று வருடங்களில் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு கண் பின்புற செல்லான “முல்லர் கிளையல்” பயன்படுகிறது.”இந்த “முல்லர் கிளையல்” செல் மாற்று கண்டுபிடிப்பானது பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சையில் மைல்கல்லாக அமையும்”என்று லண்டனின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பால் கோல்விலே-நாஷ் கூறியுள்ளார்.உடலின் மற்ற செல்களின் பயன்பாட்டை போலவே இக்கண் செல் ஆராய்ச்சியும் வெற்றிபெற்றால் உலகில் பார்வையற்றவர்களே இல்லாமல் செய்துவிட முடியும்.

இதய நோயை உண்டாக்கி எலும்பை முறிக்கும் சர்க்கரை - எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

இதற்கிடையில் வழக்கமாக பருகும் காபி, டீ, உட்பட பானங்களில் சர்க்கரை போதவில்லை என்று கூறி எக்ஸ்டரா சர்க்கரையை சேர்த்து சிலர் பருகுவார்கள். மேலும் சிலர் இனிப்பு பலகார வகைகளை அதிகமாக உன்பர். இவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய அமெரிக்க நோய் தடுப்பு ஆணையம், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தினமும் அதிகமா சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 2000 கலோரி உணவுகளை ஒருவர் எடுத்துக்கொள்வதாகவும், இதோடு சேர்த்து 34 கிராம் சோடா சேர்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோடா, மற்றும் சர்க்கரை பானங்களை பருகுவதை அமெரிக்காவில் பலர் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த பழக்கத்தால் இவர்களில் பலருக்கு இதயநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நோய் தடுப்பு ஆணைய பேராசிரியர் குயான்சி யாங் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஏறபடும் இதய நோய் பாதிப்பால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக “சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

பாழாய் போன ‘’சிம் கார்டு’’ செய்யும் சில்மிஷங்கள்..!



இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விஷயத்துக்கு வருவோம்.

அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை.

பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேசியை எடுத்தார். உடனே கட்டளைகள் பறந்தன. நேரத்தோடு வீட்டுக்கு வந்துவிடுங்கள் வரும் போது கொத்து ரொட்டி வாங்கி வாருங்கள். கொடியில் காயும் உடுப்புகளை உள்ளே எடுத்துப் போடுங்கள் என்றெல்லாம் நீண்ட பட்டியல் போட்டார். அதேபோன்று மகளுக்கும் போன் செய்து 6 மணிக்கு முன்னர் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எவ்வளவு பொறுப்பான குடும்பப் பெண், தனது கணவருடனும் மகளுடனும் எவ்வளவு பிரியமாகப் பேசுகிறார் என்று எண்ணி வியந்தார் நண்பர்.

அப்படியே பஸ் ஒரு ‘’சடின் பிரேக்’’ போட்டது. அந்தப் பெண் மீது கூடவே சாய்ந்துவிட்ட நண்பர் ‘’சொறி’’ என்று கூறி சற்று தள்ளி அமர்ந்தார்.

அடுத்த கனமே அந்தப் பெண் தான் பயன்படுத்திய போனின் ‘’சிம்மை’’ கழற்றி தனது பைக்குள் போட்டுக் கொண்டார். உடனே மற்றமொரு ‘’சிம்மை’’ யும் மாற்றிவிட்டார்.

காசு முடிந்துவிட்டதாக்கும் என்பது நண்பரின் எண்ணம். அப்போது தான் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. எங்கே இருக்கிறீர்கள்? காரிலா, பைக்கிளா வந்தீர்கள்? யாருமில்லாத இடமாக இருந்தால் நல்லது. நான் ஸ்டேடியம் அருகில் வந்து போன் செய்கின்றேன். நீங்கள் மிகவும் கவனம், வீட்டுக்கு கால தாமதமாக வருவதாகக் கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார். அப்போது தான் மறு முனையில் அவரது கள்ளக் காதலன் என்பது நண்பருக்கு வெளிச்சது. நண்பருக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனார். தன்னையே நம்ப முடியாமல் தனது கைகளையும் சற்று கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எல்லாமே இந்தப் பாழாய் போன ‘’சிம்’’ செய்யும் சில்மிஷங்கள் தான்.

சுந்தர் பிச்சை - இவரைத் தெரியுமா..?



$ மைக்ரோசாஃப்டின் அடுத்த சி.இ.ஓ. பந்தயத்தில் இவரும் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

$ சென்னையில் பிறந்த இவர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

$ 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

$ கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின், சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

பிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐ.டி ஜோரா வலம் வருது....




பிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் சில பக்கிகள் இருந்துகொண்டு கொடுக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை பாஸ். இதோ சில அக்குறும்புகள்…

‘அசின் தொட்டும்கல்’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் செம பிஸி. ‘இன்னிக்கு நான் ‘கஜினி’ ஷூட்டிங்கில் அமீர்கானுடன் நடித்தேன். அருமையான மனிதர் அவர்!’ என ஆரம்பித்து, அடுத்தடுத்த நாட்களில் ‘ஓப்பனிங் ஸாங் ஷூட்டிங்கில் காலில் சுளுக்கு’, ‘இன்று ஜலதோஷத்தால் தும்மிக்கொண்டே நடித்தேன்.

பாவம் யூனிட்’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ்கள். ‘ஐயோ, என்ன நடந்தாலும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடற அளவுக்கு நம்ம அசின் இம்புட்டு வெள்ளந்திப் புள்ளையா இருக்கே’ என ஆச்சர்யத்தில் திளைத்தார்கள், நட்புக் கோரிக்கை ஏற்கப்பட்ட குஷியில் இருந்த ரசிகர்கள். ‘கெட்வெல் சூன் அசின்’ ‘டேக் டேப்லெட் அண்ட் டேக் ரெஸ்ட்’, ‘ஐயோ அசின். ஒன் வீக் லீவு எடுத்துக்குங்க. நீங்க எங்க பொக்கிஷம்’ என்றெல்லாம் உருகி மருகி உணர்ச்சிவசப்பட்டார்கள்.

 இந்த அசின் அனைத்துக்கும் லைக் கொடுக்க, லேசாக டவுட் வந்து விட்டது. கொஞ்ச நாள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் இல்லாமல் கிடந்த இடம் மீண்டும் புரொஃபைல் அப்டேட்டுகளோடு களைகட்ட ஆரம்பிக்க மீண்டும் ‘ரெடி’ படத்தில் சல்மானுடன் சாப்பிட்டேன், ‘ஹவுஸ்ஃபுல்’ அக்ஷய் ரொம்ப கூல்’ என்று ஸ்டேட்டஸ் போட, மறுபடியும் கூட்டம் கூட்டமாய் லைக்கும் கமென்ட்டும் போட்டார்கள் நம்மவர்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல் அசினே, ‘அது நான் இல்லை… தயவு செஞ்சு நம்பி ஏமாந்துடாதீங்க’ என பிரஸ் மீட் வைக்கும் அளவுக்குப் போய்விட்டது.

த்ரிஷாதான் ஃபேக் ஐ.டி-யில் செம ஹாட். நம்பும்படி புரொஃபைலை த்ரிஷா கிருஷ்ணன் என மெயின்டெய்ன் பண்ணுவதும் ஸ்டேட்டஸ் போடுவதும், நம்ம ‘ஃபேக் ஐ.டி. த்ரிஷா’வுக்கு வாடிக்கை. இணையதளங்களில் வந்த த்ரிஷா படங்களை டவுண்லோடு செய்து அந்தப் படங்களை சத்தமே இல்லாமல் ரொம்ப நாட்களாக ‘த்ரிஷா கிருஷ்ணன்’ ஷேர் செய்து வந்தார்.

இதனாலேயே கடுப்பான ஒரிஜினல் த்ரிஷா, தற்போது த்ரிஷ் ட்ராஷர்ஸ் (ட்ராஷ் என்பது த்ரிஷாவுக்கு ஃப்ரெண்ட்ஸ் கேங் வைத்த செல்லப்பெயர்) என மாற்றி வைத்துக்கொண்டார்.

 விடுவாய்ங்களா ப்ளடி ஃபேக் ஐ.டி. கேடீஸ்?! அதேபோல த்ரிஷ் ட்ராஷர்ஸ் என கமகமவென இன்னொரு அக்கவுன்ட்டை ஆரம்பித்து வைத்தான் அந்தப் புண்ணியாத்மா.

நாயோடு இருப்பது, சர்ச் பார்க்கில் குட்டைப் பாவாடையோடு சிரிப்பது என கூகுளாண்டவரின் துணையோடு படங்களையும், ப்ளூ கிராஸ், பீட்டா வாசகங்களை ஃபார்வர்டு செய்வதுமாய் ஃபினிஷிங் டச் கொடுக்க, ஒரிஜினல் த்ரிஷாவுக்கு வந்த ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட்டைவிட அதிகமாக ஹிட்ஸ் அள்ளியது ஃபேக் ஐ.டி.

ஆர்யா இன்னும் ஐயோ பாவம். ஃபேக் ஐ.டி-க்கள் மட்டுமே மூன்று உலாவுகிறதாம். இன்னொரு ஆர்யாவின் ஃபேக் ஐ.டி-யில் இருந்து ஸ்ரேயா, ஆண்ட்ரியா, தமன்னா மற்றும் ஹன்சிகாவுடன் தினமும் பீட்டர் இங்கிலீஷில் கடலை மெசேஜ்கள் போனதாம். அப்படியே நம்பும்படி, ‘ ‘கண்டேன் காதலை’ படத்தில் உன் நடிப்பு சுமார்ப்பா’ என தமன்னாவுக்கும் -’ஹே பேபி யூ ஆர் ஸோ செக்ஸி’ என ஹன்சிகாவுக்கும் அனுப்பி வைப்பாராம்.

ஒரு கட்டத்தில் லவ் புரொபோஸ் வரை, போக நேரில் பார்த்து கேட்கும்போதுதான் டரியல் ஆகி விட்டாராம் ஆர்யா. வழக்கம்போல ஜாலியாய், ”என்னைவிட என் ஃபேக் ஐ.டி-க்கள் அழகா புரொஃபைலை மெயின்டெய்ன் பண்ணுறாங்க. அதனால ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கலாம்’னுதான் ஆரம்பத்துல நினைச்சேன்.

 ஒரு கட்டத்துல என் பேரை யூஸ் பண்ணி காலேஜ் பொண்ணுங்ககிட்ட தப்புத்தப்பா பேசுறதா கேள்விப்பட்டு, அப்புறம் ‘நான் அவன் இல்லைங்க’னு சொல்ல வேண்டியதாப் போச்சு. எவ்வளவோ சொல்லியாச்சு பாஸ். ஒரிஜினல் ஜம்ஷத் ஆர்யா பேர்லயே இப்ப இன்னொரு ஃபேக் ஐ.டி. உலாவுது. நல்லா இருங்கய்யா” என்கிறார்.

தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா, சிம்பு என்று ஃபேக் ஐ.டி-களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் நீள்கிறது. அட, அவ்வளவு ஏங்க, பவர் ஸ்டாருக்குக்கூட ஃபேக் ஐ.டி. இருக்குன்னா பார்த்துக்குங்களேன்!

உடைந்த படகில் தன்னந்தனியாக பதிமூன்று மாதங்கள்..?



பதிமூன்று மாத காலம் நடுக் கடலில் திக்குத்தெரியாமல் தத்தளித்து உயிர் தப்பியுள்ள எல் சால்வடோர்காரர் ஒருவர் சொந்த நாடு திரும்பி குடும்பத்தாரைக் காண விருப்பம் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவின் மேற்குக் கரையில் பழுதான இவரது படகு கடல் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வடக்கேயுள்ள மார்ஷல் தீவுக் கூட்டத்தின் பவளத் தீவு ஒன்றில் அண்மையில் கரை ஒதுங்கியுள்ளது.

கடல் ஆமைகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை பிடித்து பச்சையாக உண்டும், தனது சிறுநீரையே குடித்தும் இவர் உயிர் வாழ்ந்துள்ளார்.

தனது அளவற்ற கடவுள் நம்பிக்கையும், அன்புக்குரியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலும், பிடித்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கனவும்தான் கடும் கஷ்டங்களுக்கு இடையிலும் தன்னை உயிர் பிழைக்க வைத்தது என ஹோசே சல்வடோர் அல்வரங்கா கூறுகிறார்.
கடலில் அலைந்த படகு

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் 37 வயது மீனவரான ஹோஸே சால்வடோர் அல்வரங்கா பதின்ம வயது பையன் சீகுவெல்லை துணைக்கு அழைத்துக்கொண்டு சுறா மீன் பிடிப்பதற்காக தனது 22 அடி கண்ணாடி இழைப் படகில் கிளம்பினார்.

ஆனால் படகு பழுதாகி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

உலகின் மிகப் சமுத்திரமான பசிபிக் கடலின் கிழக்கிலுள்ள மெக்ஸிகோவில் இழுத்துச் செல்லப்பட்ட இந்தப் படகு அச்சமுத்திரத்தின் மேற்கிலுள்ள மார்ஷல் தீவுகள் அருகே கரை ஒதுங்க அல்வரங்கா உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒரு சில மாத காலத்திலேயே தன்னோடு இருந்த பையன் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

சூரியனை வைத்து நாட்களை தான் ஆரம்பத்தில் கணக்கிட்டு வந்தாலும், காலம் செல்லச் செல்ல வாரங்கள், மாதங்கள் எல்லாம் நினைவில் இருந்து மங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உணவு, குடிநீருக்கு என்ன செய்தார்?

தனது படகருகே வரும் கடல் ஆமைகளைப் பிடித்து அவற்றின் ரத்தத்தைக் குடித்தும், ஆடும் படகில் எழுந்து நின்று அருகே வரும் கடல் ஆலா பறவைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சியை பச்சையாக உண்டும், தன்னோடு இருந்த உபகரணங்களை வைத்து மீன்களைப் பிடித்து அவற்றை பச்சையாக உட்கொண்டும் தாம் வாழ்ந்து வாழ்ந்ததாக அல்வரங்கா தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் காலத்தில் படகுக் கூட்டுக்குள் தேங்கும் மழைநீரை தாம் குடித்தாலும், மழைபெய்யாத ஒரு மூன்று மாத காலம் தம் சிறுநீரையே குடித்து வாழ்ந்ததுதான் அளவுக்கதிகமான சிரமமாக இருந்தது என்றும் இவர் குறிப்பிட்டார்.

பச்சை இறைச்சியை உட்கொள்ள முடியாமல் தன்னோடு வந்த பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட, மிகுந்த மனக்கஷ்டத்துடன் அவனது உடலை தான் கடலில் போட்டுவிட்டதாக கூறி வருத்தப்பட்டார்.

நம்பிக்கை

பல சமயங்களில் தனக்கு தற்கொலை உணர்வு ஏற்பட்டதாகவும் ஆனாலும் உயிரை மாய்த்துக்கொள்வதிலிருந்த பயம் காரணமாகவும், இறைவன் மீது தனக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் தான் உயிர்விடவில்லை என்றும் அல்வரங்கா கூறினார்.

இபோன் அடோல் என்ற பவளப் பாறை தீவொன்றில் படகு கரை ஒதுங்க அருகிலிருந்த வீடு ஒன்றை நோக்கிச் சென்று அல்லவரங்கா உதவி கேட்டு குரல் எழுப்பியுள்ளார்.

இளைத்து அழுக்கேறிப்போய் சடைமுடியும் கந்தலாய் கிழிந்த கோமணத்துடனும் நின்ற அல்வரெங்காவுக்கு மார்ஷல் தீவுவாசிகள் இளநீர் கொடுத்து உபசரித்துள்ளனர்.

தனது ஊர் பேர் மறந்துபோகும் அளவுக்கு இவருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக இவரைக் காப்பாற்றியவர்கள் கூறுகின்றனர்.

அல்வரங்காவை சிலநாட்கள் பராமரித்து, உடல்நிலையைத் தேற்றி மார்ஷல் தீவுகளின் தலைநகரமான மஜுரோவுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
உறவினர் மகிழ்ச்சி

ஸ்பானிய மொழி மட்டுமே பேசக்கூடிய அல்வரங்கா சொன்ன விவரங்களை மஜூரோவிலுள்ள அமெரிக்க தூதர் விளங்கிக்கொண்டு தகவல் சேகரித்துள்ளார்.

தனது மகன் உயிரோடு இருப்பதை அறிந்து எல் சால்வடோரிலுள்ள அல்வரங்காவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மகன் வீடு திரும்ப வேண்டும் என அவர்கள் ஆசையோடு உள்ளனர்

தனது பெற்றோரையும், தனது ஐந்து வயது மகளையும் காண அல்வரங்காவும் பெரும் ஆவலோடு இருக்கிறார்.

பிலிப்பைன்ஸிலுள்ள மெக்ஸிகோ தூதரகத்தார் அல்வரங்கா ஊர் திரும்புவதற்கான செலவுகளை ஏற்க முன்வந்துள்ளனர்.

எல் சால்வடோர் அதிகாரிகள் மெக்ஸிகோ அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு, அல்வரங்காவை சொந்த நாட்டுக்கு அழைத்துவரவும் முயற்சிகளைச் செய்துவருகின்றனர்.

2006ஆம் ஆண்டிலும்கூட மெக்ஸிகோவிலிருந்து கிளம்பிய மூன்று மீனவர்கள் 9 மாதம் கடலில் தத்தளித்த நிலையில் மார்ஷல் தீவுகளில் கரை ஒதுங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நண்பேன்டா