Thursday 6 March 2014

அல்சரை விரட்டும் அமுத பானம் 10 ரூபாய் மட்டுமே..!



உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும் அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான்.

பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.

காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர் இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.

வயிற்று புண் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில் கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர் போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு.

தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும், கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா