Friday 14 February 2014

'' எஸ். பி. பாலசுப்பிரமணியம் '' - வாழ்க்கை வரலாறு



ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசால் இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் அளிக்கப்பட்டது.

தொடக்கம்

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இன்றும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாட்டு. ஆனால் அது வெளிவரும் முன்னே எம்.ஜி.ஆர் ருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது. இப்பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் புகழ் பெற்று ஒலித்தது.

சாதனைகள்

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. அவர்கள் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.


தேசியவிருதுகள்


வருடம் திரைப்படம் பாடல்    மொழி

1996 மின்சார கனவு    தங்க தாமரை   தமிழ்

1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்

1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி   தெலுகு

1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுகு

1981 ஏக துஜே கே லியே தேரே மேரே பீச் மேனி ஹிந்தி

1979 ஷங்கர்பாரணம் ஓம் கார நதானு தெலுகு


இளைஞர்களின் கனவு

குரலில் உற்சாகம், உணர்ச்சி, பாவம் குன்றாமல் எஸ்.பி.பி. பாடிவருகிறார்.எஸ்.பி.பி பாடிய பாடல்களில் இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது. கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும். இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

இளையராஜாவுடன் இணைதல்

இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவில் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா-எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக் கூடியவர் எஸ்.பி.பி.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா