Friday 14 February 2014

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். மூலம் பணம் பெறலாம்...!



வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெறமுடியும்.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ரகுராம் ராஜன்,”ஒருவரால் அனுப்பப்படும் பணத்தை பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே, இவர்களுக்கு பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம்.
பணத்தை அனுப்புபவரின் வங்கி கணக்கிலிருந்து, அனுப்பப்பட்ட தொகை ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பெறப்படுகிறது. பணத்தை பெறுபவருக்கு அவரது செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனை வைத்து அவர் அருகிலுள்ள ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் சேவையை வழங்குவதற்கு வங்கிகளுக்கும், செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இன்னும் சில மாதங்களில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்படும். இதற்காக தொழில்நுட்ப வசதியும் உரிய முறையில் மேம்படுத்தப்படும்.நம் நாட்டில் 90 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. எனவே, மொபைல் பேங்கிங் வசதியை எளிதில் அறிமுகப்படுத்தலாம்.” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா