Saturday 1 March 2014

ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்பும்! – அதிர்ச்சி தகவல்..!



மருத்துவமனைகளில் நாம் அமரும் சோபா, நாற்காலி, அங்குள்ள பழைய பேப்பர், புத்தகங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்ற முன்னரே கண்டறிந்தறிந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புகிறது என்றும் தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் தற்போதைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டெதாஸ்கோப்பை ‘லேனக்”என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 – ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல் பகுதியில் ஒலி எழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்ததை லேனக் பார்த்தபோது ,”அடடே. நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா?” என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதாஸ்கோப் எனும் கருவியாகும்.

இந்த ஸ்டெதாஸ்கோப் பெரும்பாலும் டாக்டர்கள் தங்கள் கல்லூரி வாழ்க்கையின் போது வாங்கியதைதான் பயன் படுத்தி வருகிறார்கள். அதை யாரும் சுத்தப்படுத்தியதாக தெரியவில்லை. இந்நிலையில்தான் ஜெனிவா மருத்துவமனைகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உடல் பரிசோதனை மூலம் மருத்துவரின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்பும் பரப்பும் பாக்டீரியாக்களின் அளவைக் கண்டறிந்துள்ளனர்.

71 நோயாளிகளை மூன்று மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்கும்போது அவர்களில் ஒருவர் ஒவ்வொருமுறையும் சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பையும், கையுறைகளையும் பயன்படுத்தியதன்மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியின் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டபின் ஸ்டெதாஸ்கோப்பின் குழாய் மற்றும் அடிப்பகுதி, மருத்துவரின் கைகளின் நான்கு பகுதிகள் போன்றவற்றில் சேரும் பாக்டீரியாக்களின் அளவு தனித்தனியே கணக்கிடப்பட்டது.

மருத்துவர் களின் விரல்நுனியும், ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்பகுதியும் பாக்டீரியாக்கள் அதிகம் சேரும் இடங்களாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய ஒப்பிடுதலை நேரடியாக நடத்திய முதல் ஆய்வு இதுவென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஒரு நாளில் தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஸ்டெதாஸ்கோப் பல நோயாளிகளின் தோல்பரப்பின் மீது நேரடியாக வைக்கப்படுகின்றது.

இதனால் எம்ஆர்எஸ்ஏ போன்ற கடுமையான தொற்றுவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இந்தக் கருவியில் சேர வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி மருந்து எதிர்ப்பு தன்மை உடைய பாக்டீரியாக்களும் நோயாளி பரிசோதனையின்போது இந்தக் கருவியில் படிய வாய்ப்புள்ளது என்பதால் பாக்டீரியாக்களைப் பரப்புவதில் ஸ்டெதாஸ்கோப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தலைமை ஆராய்ச்சியாளரான டிடியர் பிட்டெட் தெரிவித்தார்.

தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா