Wednesday 12 February 2014

சங்கம் வளர்த்த மாமதுரையின் இன்றைய நிலை..!



மதுரை மாநாகரின் நீராதாரங்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளது மாணவர் குழு ஒன்று. மதுரை செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் முயற்சியில் இறங்கிய அவர்கள், மதுரை மாவட்டத்தின் நீர் நிலைகளைப் பற்றிய ஆய்வில் இறங்கி உள்ளனர்..

இதன் படி பிற சமூக ஆர்வலர்களின் உதவியுடனும், அரசாங்க தகவல்களின் கீழும் கண்டறிந்த தகவல்கள் கீழே!

நமது மதுரையில் நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள கீழே படியுங்கள்.

வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.

கிருஷ்ணராயர் தெப்பக்குளம் - ஞாயிற்று கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. (தெப்பகுளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்த தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பகுளம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது)

அனுப்பானடி சின்ன கண்மாய், சிந்தாமணி கண்மாய், தூளிபத்திக் கண்மாய், ஐவத்தான் கண்மாய், அயன் பாப்ப்குடி கண்மாய் - இவை அனைத்தும் கழிவு நீர் தேக்கமாக உள்ளன.

அவனியாபுரம் கண்மாய் - திடக் கழிவு கிடங்காக உள்ளது.
சிலையனேறிக் கண்மாய், ஆனையூர்க் கண்மாய், தத்தனேரி கண்மாய் - வீடுகள் கட்டப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது.

வில்லாபுரம் கண்மாய் & ஆ.கோசாக்குளம் கண்மாய் - குடியிருப்புகள் பகுதிகளாக மாறிவிட்டன .

வண்டியூர் கண்மாய் - மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட் மற்றும் எஞ்சிய பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.

செல்லூர் கண்மாய் - தென்னக இரயில்வே, ஒரு பகுதி குடிசைகளும் உள்ளன. எஞ்சியுள்ள பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.

பீ.பி குளம் கண்மாய் - வருமான வரி, சுங்கத்துறை மற்றும் அஞ்சல் அலுவலகமாக உள்ளன. எஞ்சியுள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

சொரிக்குளம் கண்மாய் - வானொலி நிலையம் மற்றும் அலுவலர் குடியிருப்பு, அரசு அலுவலர் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவை உள்ளன.

தல்லாக்குளம் கண்மாய் - மதுரை மாநகராட்சி அலுவலகம், சட்டக்கல்லூரி, வணிகவரி அலுவலகம். எஞ்சியுள்ள இடம் தமிழ் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

மானகிரிக் கண்மாய் - வக்பு வாரிய கல்லூரி மற்றும் அதன் விடுதி கட்டிடம்.

செங்குளம் கண்மாய் - மாவட்ட நீதிமன்றம்.

உலகனேறிக் கண்மாய் - உயர் நீதிமன்றம்.

புதுக்குளம் கண்மாய் - செய்தியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகள் உள்ளன.

கோச்சடை கண்மாய் - வீடுகட்டவும், செங்கல்லுக்காவும் மண் தோண்டப்பட்டு ஆழமாக உள்ளது. குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

புதூர் கண்மாய் - மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

நாராயணபுரம் கண்மாய் & முடக்கத்தான் கண்மாய் - குடியிருப்புகளின் கழிவு நீர் இக்கண்மாயில் கலக்கிறது.

ஆத்திக்குளம் கண்மாய் - கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

அனுப்பனடி பெரிய கண்மாய், விரகனூர் கண்மாய் மற்றும் ஐராவதநல்லூர் கண்மாய் - ஒருபகுதி குடியிருப்புகளாகும் எஞ்சியுள்ள பகுதி கழிவு நீர் தேக்கமாகவும் உள்ளது.

சம்பக்குளம் கண்மாய் - இக்கண்மாய் இருந்த இடமே தெரியவில்லை.

(ஆதாரம் : நீரின்றி )

சில நாட்களுக்கு முன்பாக பத்திரிக்கை செய்தி ஒன்று கொடிக்குளம் கண்மாயில் அண்ணா பல்கலைகழகம் கட்டிடம் வரப் போவதாக பகிர் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலை தொடரலாமா..?

இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டாமா? மண்ணின் மைந்தர்களாகிய நாம் இதை தட்டி கேட்க விட்டால் வேறு யார் கேட்பது ?
படித்ததும் நெஞ்சம் கொதிக்கிறதா? உடனடியாக மக்களை விழித்தெழ செய்ய வேண்டும். இப்போது நாம் செய்ய வேண்டிய முதல் வேளை விழிப்புணர்வு. இந்த தகவல்களை மற்ற நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். விழிப்படைய செய்யுங்கள்....

No comments:

Post a Comment

 
நண்பேன்டா