Sunday 16 February 2014

பேஸ்புக் பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு..! அதிர்ச்சியூட்டும் தகவல்

சமூக வலைதள பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு; பேஸ்புக்கிற்கு அதில் முதலிடம்:-


சமூக வலைதளங்களை பத்து வயது அடைந்த சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  இதற்காக இணையதள பாதுகாப்பு ஆலோசக இணையதளமான நோ திநெட் ஆய்வு நடத்தி சோஷியல் ஏஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.

பேஸ்புக் முதலிடம்

அதில், 8 முதல் 16 வயது உடைய குழந்தைகளில் 52 சதவீதத்தினர் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் என தெரிய வந்துள்ளது.  மற்ற இணையதளங்களில் இதே வயதுடைய குழந்தைகளில் 40 சதவீதத்தினர் வாட்ஸ்ஆப் இணையதளத்தையும், பி.பி.எம். இணையதளத்தை 24 சதவீதத்தினரும், ஸ்நாப்சாட் இணையதளத்தை 11 சதவீதத்தினரும் மற்றும் ஆஸ்க்.எப்.எம் இணையதளத்தை 8 சதவீதத்தினரும் பயன்படுத்தி உள்ளனர்.

பெரும்பாலும் 10 வயது பூர்த்தியான குழந்தைகளில் 59 சதவீதத்தினர் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என்றாலும், 32 சதவீத பெற்றோர்களே இணையதள பயன்பாட்டில் இருக்கும் தங்கள் குழந்தைகள் மீது மிக்க நம்பிக்கையுடன் உள்ளனர்.  இந்த சர்வேயில், 21 சதவீத குழந்தைகள் மோசமான கருத்துகளை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போலி கணக்கில் குழந்தைகள்

அவர்களின் சராசரி வயது 11 ஆக இருந்துள்ளது.  மேலும், பிறரது கணக்கில் அத்துமீறி உள்ளே நுழைந்து தங்களது பதிவுகளை அனுமதியின்றி வெளியிடுவோர் 26 சதவீதமாக உள்ளனர்.  அறிமுகமில்லாத நபர்களுக்கு செய்திகள் அனுப்புவதில் 43 சதவீதத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களின் சராசரி வயது 12.  இணையதளத்தில் தங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோ பதிவை வெளியிடுவதோ அல்லது போலி பெயரில் தங்களது கணக்கை தொடங்கிடவோ ஆர்வமுடன் குழந்தைகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் தங்களது 11வது வயதில் இதனை ஆரம்பிக்கின்றனர்.  அதன் பின்பு தங்களது 12வது வயதில் டுவிட்டர் பயன்பாடு மற்றும் அறிமுகமில்லா நபருக்கு செய்திகள் அனுப்புதல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.  பின் 13வது வயதில் ஸ்நாப்சாட் மற்றும் ஆஸ்க்.எப்.எம். ஆகிய சேவைகளின் பயன்பாட்டில் இறங்குகின்றனர்.

பள்ளியில் இன்டெர்நெட்

இவர்கள் இணையதள பயன்பாட்டில் கடினமான சிக்கல்கள் ஏற்படும்போது, தங்களது பெற்றோர்களை அணுகவும் தயங்குவதில்லை.  பெரும்பாலும் 3ல் 2 பங்கினர் (67 சதவீதம்) இம்முறையை பின்பற்றுகின்றனர்.

தங்கள் குழந்தைகளின் இன்டர்நெட் செயல்பாடு குறித்து 63 சதவீத பெற்றோர் வாரம் ஒரு முறையாவது பரிசோதனை செய்து விடுகின்றனர்.  பெற்றோர் கட்டுப்பாட்டில் வருவதில் நம்பிக்கையற்ற வகையில் 21 சதவீதத்தினர் உள்ளனர்.  46 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில் இன்டர்நெட் பயன்பாடு கொள்கை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டாக்டர் கருத்து

இளைய வயதுடையவர்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு இடையேயான வேறுபாடு மீதான தடையை சமூக வலைதளங்கள் நீக்கி உள்ளதால், குழந்தைகள் அதனை பயன்படுத்துவது ஆபத்தில் சென்று முடிகிறது என்று நோ திநெட் செய்தி தொடர்பாளரும், குழந்தைகள் மனநல மருத்துவருமான டாக்டர் ரிச்சர்டு உல்ப்சன் தெரிவித்துள்ளார்.

எனவே, குழந்தைகள் இணையதளத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதித்து அவர்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பது என்பது பெற்றோர்களால் இயலாத ஒன்று.  பெற்றோர்கள், தங்களது குழந்தைகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும்.  நல்ல மற்றும் மோசமான இணையதள செய்திகளை தங்களிடம் பகிரும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.


இணையதள பயன்பாட்டில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர்களை பயமுறுத்தாமல் வெளிப்படையாகவும், நேரிடையாகவும் பேசி அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக சமீபத்திய இணையதள செய்திகளை அவர்களுடன் ஒன்றாக இருந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உல்ப்சன் தெரிவித்துள்ளார்.  இந்த சர்வே முடிவானது, 8 முதல் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் 1,006 பெற்றோர்களிடமும் மற்றும் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 1,004 குழந்தைகளிடமும் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா